பக்கம் எண் :

பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்283

   விட்டிடிக் கோட்டையாம் வெளிக்கட லோட்டம்
மண்டிய பெருங்காற் றடங்கும் வரையும்
அண்டையில் உளதோர் கைவழி அதனில்
 50 ஒண்டிநீ ஒதுங்கி உன்தொல் நகராம்
துவாத சாந்தத் துறைபோய்
நிவாதமா நிலைபெற லேநெறி முறையே!      1
ஜீவ: என்குல முனிவ! இயம்பிய மாற்றம்
நன்கே. உன்றன் நயப்பிற் கென்செய!
 55கழுமரக் கதையதைக் கண்டேன் இன்றே.
பழுதுபாய் மரமெனப் பகர்ந்ததும் உண்மை!
வழுவெனக் கண்டது மாற்றினன். அநேக
வந்தனம் வந்தனம்! ஆயினும் ஒருசொல்
சிந்தையிற் சேர்த்தெனைத் தெருட்டிட வேண்டும்.
 60வேற்றுமை உருவாய் விளங்கிய காலம்
காற்றினும் கடுகிய கடுநடை உடைய
தன்றோ? அதிலகப் பட்டார் முந்திச்
சென்றால் நின்றார்! சிறிதுசிந் தித்து
நிற்பரேற் பெரிதும் பிற்பட் டொழிவர்.
 65ஆதலால் அடிகாள் பூதலத் துயர்ந்த
மேதையின் மிகுத்த மானிடர்க் கரசராய்
வந்தவர், தந்தமக் குற்ற மதித்திறம்
எட்டிய மட்டும் குற்றம் விடுத்துக்


துவாதசாந்தம் - பன்னிரண்டின் முடிவு. புருவத்துக்குமேலே பன்னிரண்டு விரற் கிடையுள்ள இடம். இங்குத் துவாதசாந்தம் என்பதற்கு மதுரை மாநகரம் என்பது பொருள். பூலோக வடிவமாக இருக்கிற விராட் புருஷனுக்குத் துவாதசாந்த இடமாக இருக்கிற இடம் மதுரை என்று கூறுவர். நிவாதமா - உறைவிடமாக என்றும், (புயற்) காற்று இல்லாத இடமாக என்றும் இரு பொருள் கொள்ளலாம். நயப்பிற்கு - அன்பிற்கு

அடி 55 - 56. முனிவர் பொதுவாகக் கூறிய கழுமர உவமையை, நாராயணன் கழுமரமேற உடன்பட்டதைச் சுட்டுகிறதாகவும், குடிலனைச் சுட்டிக் கூறிய பாய்மரம் நாராயணனைக் குறித்துக் கூறியதாகவும் அரசன் மயங்கிக் கூறும் சொற்கள். தெருட்டிட - தெளிவுபடுத்த. வேற்றுமை உருவாய் - மாறுபாடு உடையதாய்.