4.1 கம்பரும் உலகக் கவிஞர்களும்

கம்பராமாயணம் உலக இலக்கியங்களின் வரிசையில் வைத்து எண்ணத்தக்க கவிதை வளம் மிக்கது. உலக இலக்கியங்களாகக் கருதத்தகும் இலக்கியங்களோடு கருத்து அளவிலும் கவிதை அளவிலும் நெருங்கிய தொடர்பு உடையது. கம்பன் கவிதையுடன் ஒரு சில உலகக் கவிஞர்களின் கவிதையை இணைத்துப் பார்ப்பதாக இப்பகுதி அமைக்கப்பட்டுள்ளது. அவை,

கம்பரும் ஹோமரும்
கம்பரும் ஷேக்ஸ்பியரும்
கம்பரும் ஸ்பென்சரும்
கம்பரும் மில்டனும்

4.1.1 கம்பரும் ஹோமரும்

ஹோமர் கிரேக்கக் கவிஞர். இலியட் (Iliad), ஒடிஸி (odyssey) என்னும் இரு காப்பியங்களை இயற்றியவர். இவருடைய காலம் கி.மு. 1200க்கும் கி.மு. 700க்கும் இடைப்பட்டது. ஹோமர் கண்ணிழந்தவர். இவர் ஒரு பாணர். ஊர் ஊராகச் சென்று லயர் (Lyre) என்ற ஐரோப்பிய யாழில் வாசித்தபடி இந்தக் காப்பியங்களைப் பாடினார் என்று கூறுவர். இவருக்குப் பின்னால் வந்த புலவர்களுக்கு எல்லாம் ஹோமரின் காப்பியங்கள் வற்றாத இலக்கியக் களஞ்சியங்களாகப் பயன்பட்டன. பண்டைய கிரேக்கர்களுடைய வரலாற்றின் பெரும் பகுதியை அறிவதற்கு இவருடைய காப்பியங்களே பெரிதும் துணை செய்கின்றன.

ஒற்றுமை

ஹோமருக்கும் கம்பருக்கும் பல்வேறு வகைகளில் ஒற்றுமை உண்டு. கவிதைகளில் காப்பிய அடிப்படையிலும், சுவை அடிப்படையிலும் ஒற்றுமை உண்டு. இருவரையும் ஒப்பிட்டுக் கம்பனும் ஹோமரும் என்னும் தலைப்பில் ஆ.ரா. இந்திரா எழுதிய நூலை இங்குக் குறிப்பிடலாம்.

ஹெலனும் சீதையும்

காப்பியத்தின் கதை அமைவதற்குரிய சில அடிப்படை நிகழ்ச்சிகள் இலியட்டிலும் இராமாயணத்திலும் ஒன்று போலவே அமைந்துள்ளன. ஸ்பார்ட்டா நகரத்து மன்னனான மெனிலேயஸின் மனைவி ஹெலன் என்பவள். ட்ராய் நகரத்து மன்னனின் மகன் பாரிஸ் என்பவன். இவன் ஹெலனின் அழகைக் கேள்விப்பட்டு அவளைக் கவர்ந்து செல்கிறான். ஹெலனை மீட்க வேண்டும் என்பதற்காகத்தான் கிரேக்கர்கள் ஆகமெம்னான் என்பவன் தலைமையில் ட்ராய் நகரை முற்றுகை இடுகிறார்கள். கிரேக்கர்களுக்கும் ட்ரோஜர்களுக்கும் போர் நிகழ்ந்ததற்கு முக்கியக் காரணம் அடுத்தவன் மனைவியைக் கவர்ந்து சென்றமைதான். இராவணன் சூர்ப்பணகை மூலம் சீதையின் அழகைக் கேள்விப்படுகிறான். சூழ்ச்சி செய்து இராமனிடம் இருந்து சீதையைக் கவர்ந்து வருகிறான். இராம இராவண யுத்தத்திற்கும் அடிப்படைக் காரணம் அடுத்தவன் மனைவியைக் கவர்ந்து சென்றமையே.

ஹெக்டரும் கும்பகர்ணனும்

பாரீஸ் செய்த தகாத செயலை அவன் மூத்த சகோதரன் ஹெக்டர் ஒப்புக் கொள்ளவில்லை. பாரீஸைக் கடிந்து சினந்து கொள்கிறான். “பெண்பித்தா! நெடுந்தொலைவில் இருந்து ஒரு பெண்ணைக் கவர்ந்து கொண்டு வந்தாயே! ஒரு வீரனின் மனைவியைக் கவர்ந்து கொண்டு வந்தாயே! இதனால் உன் தந்தைக்கும், அவர் நாட்டிற்கும், ஏன் நம் அனைவருக்குமே எவ்வளவு சீரழிவு தெரியுமா? உனக்கு எவ்வளவு தலைக்குனிவு......! பெண்பித்தா, நீ பிறவாமலேயே இருந்திருக்கலாம்” என்று கடிந்து உரைக்கிறான்.

இராவணன் செயலை அறிந்த அவன் தம்பியாகிய கும்பகர்ணனும் ஹெக்டரைப் போல்தான் செயல்படுகிறான். இராவணனைப் பார்த்து,
 

சிட்டர் செயல் செய்திலை
     குலச் சிறுமை செய்தாய்

(கம்ப. யுத்த காண்டம், இராவணன் மந்திரப்படலம், 53.)

(சிட்டர் = பெரியோர்),

என்று சினந்து கூறுகிறான்.

"பெரியோர் செய்யும் செயலை நீ செய்யவில்லை. நம் குலத்திற்குத் தலைக்குனிவை ஏற்படுத்தினாய்" என்று கடிந்து உரைக்கிறான். "பேசுவது மானம்; இடையே பேணுவது காமம்" என்று கோபப்படுகிறான்.

ஆன்டெனரும் இந்திரசித்தும்

கிரேக்கர்களுக்கும் ட்ரோஜர்களுக்கும் போர் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஒரு கட்டத்தில் இருசாராரும் தனித்தனியே மந்திராலோசனை நடத்துகின்றனர். ட்ரோஜர்களிடையே ஒருவிதமான பதட்டமும் குழப்பமும் நிலவுகின்றன. அப்போது ஆன்டெனர் என்னும் சிந்தனையாளன் அனைவரையும் பார்த்துப் பேசத் தொடங்குகிறான். “எல்லாரும் சற்றுக் கவனியுங்கள். என்னுடைய ஆன்மா என்னைச் சொல்லும்படி கட்டளை இட்டுள்ளது. இப்போதே ஹெலனையும் அவளுடன் கொண்டு வந்த செல்வத்தையும் கிரேக்கர்களுக்குத் திரும்ப அளித்து விடுவோம், அதுதான் செய்யத்தக்கது. சத்தியத்திற்கு எதிராக நாம் போரில் ஈடுபடுவது முறையா? செய்யத்தக்க இதைச் செய்தல் தவிர வேறு எந்த வகையிலும் நமக்கு நன்மையில்லை” என்று கூறுகிறான். இதனைக் கேட்ட பாரீஸ் வெகுண்டு உரைக்கிறான். ஹெலனை விட முடியாது என்று முழங்குகிறான்.

இதுபோன்ற ஒரு காட்சி இராமாயணத்திலும் வருகிறது. இந்திரசித்து இராவணனின் மகன், சீதையை விடுமாறு வேண்டுகிறான்.

             .......ஆசை தான்அச்
     சீதைபால் விடுதி யாயின்
          அனையவர் சீற்றம் தீர்வர்
     போதலும் புரிவர் செய்த
          தீமையும் பொறுப்பர் உன்மேல்
     காதலால் உரைத்தேன் என்றான்
          உலகுஎலாம் கலக்கி வென்றான்

(கம்ப. யுத்த காண்டம், இந்திரசித்து வதைப் படலம், 9.)

(சீற்றம் = சினம்; விடுதி = விட்டு விடுவாய்; போதல் = செல்லுதல்; காதலால் = அன்பால்)

“தந்தையே! உன்மேல் உள்ள அன்பால் உரைக்கிறேன் கேட்பாயாக! சீதை மீது நீ கொண்ட ஆசையை ஒழித்து அவளை விட்டுவிட்டால் அவர்கள் சினம் தணிவார்கள்; நீ செய்த தீமையையும் பொறுத்துக் கொள்வார்கள்; இலங்கையை விட்டும் நீங்கிச் செல்வார்கள்” என்று கூறுகிறான். இதனைக் கேட்ட இராவணன்

யாக்கையை விடுவது அல்லால்
சீதையை விடுவது உண்டோ

           (கம்ப. யுத்த காண்டம், இந்திரசித்து வதைப் படலம், 9.)

(யாக்கை = உடல் / வாழ்க்கை)

“உயிரை விட்டு மடிவேனே தவிரச் சீதையை விடுவேனோ” என்று கடிந்து உரைக்கிறான்.

இவ்வாறாகக் கம்பனுக்கும் ஹோமருக்கும் பல்வேறு ஒற்றுமைகளைப் பார்க்க முடிகிறது. கதை அமைப்பிலும் கவிதைச் சுவையிலும் இந்த ஒற்றுமைகளைப் படித்து மகிழலாம்.

4.1.2 கம்பரும் ஷேக்ஸ்பியரும்

இங்கிலாந்தில் புகழ்பெற்ற ஆங்கிலக் கவிஞர் ஷேக்ஸ்பியர். கி.பி. 1564 முதல் 1616 வரை வாழ்ந்தவர். ஷேக்ஸ்பியர் சிறந்த நாடக ஆசிரியர். 37 நாடகங்களை இயற்றியவர். உலகக் கவிஞர்கள் காலம் கடந்து ஒன்றுபடுபவர்கள். இனம், மொழி, நாடு, எல்லை கடந்து ஒன்றுபடுபவர்கள். இலக்கிய வடிவம் வேறுபட்டாலும், கருத்தாலும் சிந்தனையாலும் ஒன்றுபடுவர். கம்பருக்கும் ஷேக்ஸ்பியருக்கும் உள்ள இலக்கிய ஒற்றுமைகளைக் கம்பனும் ஷேக்ஸ்பியரும் என்னும் நூலில் எஸ். இராமகிருஷ்ணன் விவரித்துள்ளதைப் படித்து மகிழ முடியும்.

கூனியும் இயாகோவும்

தயரத மன்னனின் மனைவியாகிய கைகேயியின் சூழ்ச்சியே இராமாயண நிகழ்ச்சியின் மெய்யான தொடக்கம். அவள் மனம் மாறி இராமனைக் கானகத்திற்கு அனுப்புகிறாள். தயரதன் மரணம் அடைகிறான். அயோத்தியை அவலம் சூழ்கிறது.

இதே போல் ஒத்தெல்லோ நாடகத்தில் வரும் தலைவனும் கைகேயியை ஒத்தே காணப்படுகிறான். கைகேயியின் மனத்தை மாற்றக் கூனி வருவது போல் ஒத்தெல்லோவின் மனத்தை மாற்ற இயாகோ வருகிறான்.

“இராமனைப் பெற்றெடுத்த எனக்கு இடர் உண்டோ” என்று எண்ணும் நல்லவள் கைகேயி. இராமனைத் தன் மகனாகப் பெறாவிட்டாலும் பெற்ற தாய் போல் விளங்கியவள்; இராமனை வளர்த்தவள். இராமன் முடி சூட்டு விழாவை எண்ணி மகிழ்ந்து கொண்டிருப்பவள். அப்படிப்பட்டவளின் முன் கூனி தோன்றுகிறாள்.

இன்னல்செய் இராவணன் இழைத்த
     தீமைபோல்
துன்னரும் கொடுமனக் கூனி
     தோன்றினாள்

(கம்ப. அயோத்தியா காண்டம், மந்தரை சூழ்ச்சிப் படலம், 48.)

(இன்னல் = கேடு; இழைத்த = செய்த; துன்னு = நெருங்கு)

கேடுகளைச் செய்பவனான இராவணன் செய்த கொடுமைகள் எல்லாம் ஒன்றாகத் திரண்டு வந்தால் எப்படியிருக்குமோ, அதைப் போல் கூனி வந்தனள். அவள் தீமை செய்யும் கொடிய மனத்தினை உடையவள் என்று குறிப்பிடுகிறார் கம்பர்.

ஒத்தெல்லோ நாடகத்தில் கூனியைப் போன்ற குணம் உடையவனாக இயாகோ படைக்கப்பட்டுள்ளான். ‘சாத்தானை நினைத்தால் உடனே தோன்றுவான்’ என்பது பழமொழி. கடவுள் எண்ணியவுடன் தோன்றார். இதேபோல் எமிலியா (இயாகோவின் மனைவி) நினைத்தவுடனே இயாகோ தோன்றுகிறான்.

ஒத்தெல்லோவின் மனைவியாகிய டெஸ்டிமோனா தன் கைக்குட்டையை இயாகோவிடம் கொடுக்கிறாள். அக்கைக்குட்டை, ஒத்தெல்லோ அன்புடன் தன் மனைவிக்குக் கொடுத்தது. கைக்குட்டையை வைத்தே இயாகோ டெஸ்டிமோனாவின் நடத்தைக்குக் களங்கம் கற்பிக்கிறான். அவளுக்கு ஆசை நாயகன் உண்டென்று கலகம் உண்டாக்குகிறான். வெள்ளை உள்ளம் கொண்ட ஒத்தெல்லோ, கூனியால் கைகேயி மனம் மாறுவதைப் போல மனம் மாறுகிறான். டெஸ்டிமோனாவை வாழ்வின் உயிர் மூச்சாகக் கருதும் ஒத்தெல்லோ இறுதியில் அவள் கழுத்தை நெரித்துக் கொலை செய்கிறான்.

இவ்வாறு கதைமாந்தர் படைப்புகளிலும் பிற பல்வேறு நிலைகளிலும் கம்பனும் ஷேக்ஸ்பியரும் ஒத்து விளங்குவதை அறிய முடிகிறது.

4.1.3 கம்பரும் ஸ்பென்சரும்

12ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த கம்பர் தாம் எழுதிய காப்பியத்திற்குப் பன்னிரண்டு விருத்தங்களில் தற்சிறப்புப் பாயிரம் (நூலுக்கான முன்னுரை) பாடி உள்ளார்.

16ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஆங்கிலக் கவிஞர் ஸ்பென்சர். இவர் எழுதியது ஃபேரி க்வீன் (Fairie Queen) என்ற நூல். இது தமிழில் தேவதை அரசி என்று பொருள்படும். இவர் பன்னிரண்டு காண்டங்கள் எழுதத் திட்டமிட்டு ஏழாம் காண்டம் எழுதத் தொடங்கிய நேரத்தில் இறந்துவிட்டார். இவர், முதல் காண்டத்திற்குச் செய்திருக்கும் ஒன்பது அடிச் செய்யுள்கள் நான்கும் தற்சிறப்புப் பாயிரமாக அமைந்துள்ளன.

ஒற்றுமை

கம்பருடைய தற்சிறப்புப் பாயிரமும், ஸ்பென்சருடைய தற்சிறப்புப் பாயிரமும் ஒப்பிலக்கிய நோக்கில் ஒற்றுமை பெற்றுத் திகழ்கின்றன. காலம், நாடு, மொழி, பண்பாடு இவற்றால் வேறுபட்டிருந்தும் இப்புலவர்கள் இலக்கியத்தால் ஒன்றுபட்டு உள்ளனர்.

கம்பரின் கடவுள் வாழ்த்து

கம்பர் வைணவச் சமயம் சார்ந்த ஒரு காப்பியத்தைப் படைத்தாலும் தற்சிறப்புப் பாயிரத்தில் கடவுளைப் பொதுவாகத்தான் சுட்டுகிறார். உலகை உருவாக்குவதும், அதனை நிலைப்படுத்துவதும், அதனை அழிப்பதும் ஆகிய செயல்களைச் செய்யும் இறைவனுக்கு வணக்கங்கள் என்று கூறுகிறார் கம்பர்.

ஸ்பென்சரின் கடவுள் வாழ்த்து

இதே போன்று ஸ்பென்சரும் பொதுக் கடவுளைப் பாடி உள்ளார். கிரேக்க ரோமானிய இலக்கிய மரபில் கலை இலக்கியங்களுக்கு ஒன்பது தெய்வங்கள் உண்டு. அவற்றில் தலைமை உடையதும் கவிதைக்குரியதும் ஆன க்ளியோ என்ற தெய்வத்தைக் காப்புச் செய்ய அழைக்கிறார் ஸ்பென்சர். தாம் சார்ந்திருந்த கிறித்துவ சமயக் கடவுள் எதனையும் காப்புச் செய்ய அழைக்கவில்லை என்பது திறனாய்வாளர்கள் கருத்து.

நன்றிக் கடன்

கம்பர், தன்னை ஆதரித்த சடையப்ப வள்ளலைக் காப்பியம் நெடுகிலும் பாடி உள்ளார். அதே போல் ஸ்பென்சர் தனக்கு அயர்லாந்து நாட்டில் உயர்ந்த பதவி அளித்து ஆதரித்த முதலாம் எலிசபெத் ராணியை நன்றியோடு பாடி உள்ளார். ராணி சூரியனை ஒத்த பார்வையால் தன்னைக் காத்து உயர்த்த வேண்டும் என்று குறிப்பிடுகிறார்.

அவையடக்கம்

கம்பரும் ஸ்பென்சரும் அவையடக்கமாகத் தங்களைத் தாழ்த்தியும், தாம் நூல் எழுதுவதை உயர்வாகவும் கருதிப் பாடி உள்ளனர்.

பூனையும் பாற்கடலும்

ஒரு பூனையானது, பாற்கடல் முழுவதையும் தன் நாவால் நக்கிக் குடித்து விட எண்ணுவது போல, ராமகாதையைப் பாடத் தான் ஆசைப்பட்டதாகக் கம்பர் கூறுகிறார்.

புல்லாங்குழலும் ட்ரம்ஸட்டும்

ஸ்பென்சர், இடையர்கள் பற்றிச் சிறு கவிதைகளைச் செய்த தான் பேரிக்வீன் என்னும் பெரிய காப்பியத்தைச் செய்யத் தகுதியற்றவர் என்று பாடுகிறார். சிறு நாணலில் புல்லாங்குழல் வாசித்த தான், பெரிய ட்ரம்ஸட் வாசித்தல் போல ஆசைப்பட்டதாகவும் பாடியுள்ளார்.

இவ்வாறு கம்பரும் ஸ்பென்சரும் கால, நில, மத வேறுபாடுகளைக் கடந்து கலை இலக்கியத்தால் ஒன்றுபடுவதை அறிய முடிகின்றது.

4.1.4 கம்பரும் மில்டனும்

கி.பி. 17ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் மில்டன். இவர் இயற்றியதே சுவர்க்க நீக்கம் (Paradise Lost) என்னும் காப்பியம் ஆகும். உலக இலக்கியங்களில் சுவர்க்க நீக்கம் புகழ் பெற்ற காப்பியமாகப் போற்றப்படுகிறது. மனிதனின் வீழ்ச்சி என்ற நிகழ்ச்சியைப் பொருளாகக் கொண்டது இக்காப்பியம். வேறு வேறு காலங்களில் வாழ்ந்திருந்தாலும் கம்பரும் மில்டனும் காவியத்தால் ஒன்றுபடுகின்றனர்.

ஒற்றுமை

இருவருடைய நூல்களிலும் பாயிரம் அமைந்துள்ளது. மில்டனின் காப்பியம் இரண்டாவதாக ஒரு பாயிரத்தையும் கொண்டுள்ளது. இது சுவர்க்க நீக்கத்தின் ஒவ்வோர் உட்பகுதிக்கும் முன்னுரையாக அமைந்துள்ளது. இருவர் காப்பியங்களிலும் கடவுள் வாழ்த்து இடம் பெற்று உள்ளது. மில்டன் கிறித்துவச் சமயத்தின் பரிசுத்த ஆவியை வணங்குகிறார். கம்பர் சடையப்ப வள்ளலைப் போற்றுவது போலவே, மில்டன் ஆண்ட்ரூ மார்வல் என்பவரைப் போற்றி உள்ளார்.

சுவர்க்க நீக்கம்

நரகில் சிறைப்பட்ட சாத்தான் கூட்டத்தினர் உணர்வு பெற்று எழுகின்றனர்; ஒன்று கூடுகின்றனர். மனிதனின் வீழ்ச்சியைத் திட்டமிடுகின்றனர். இவ்வாறான சதி ஆலோசனையே சுவர்க்க நீக்கத்தின் கதைத் தொடக்கமாக அமைகின்றது. சாத்தான் மனிதனை வீழ்ச்சி அடையச் செய்கிறான். இது கதைப் போக்கில் நெருக்கடியான சூழலை உண்டாக்குகிறது. இறைவன் தன் குமாரன் மூலம் தீயவர்களைத் தண்டிக்கிறார். இது கதையின் இறுதிப் பகுதி. இவ்வாறு சுவர்க்க நீக்கம் அமைக்கப்பட்டுள்ளது.

கம்பராமாயணம்

இராவண வதமே இராமாயணத்தின் கதைப் பொருள் ஆகும். இக்கதைப் பொருளின் தொடக்கம் சூர்ப்பணகை சூழ்ச்சி மூலம் தொடங்குகிறது. ஆனால் இதற்கும் முன்பே இராம அவதாரம், இராமன் சீதை திருமணம், இவர்கள் வனவாசம் மேற்கொள்ளல் ஆகிய நிகழ்ச்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. சீதையை இராவணன் கவர்ந்து செல்வது கதையில் நெருக்கடியைத் தோற்றுவிக்கிறது. இராவணன் வதம் கதையின் இறுதிப் பகுதி.

இராவணனும் சாத்தானும்

இரண்டு காப்பியங்களிலும் இராவணனும் சாத்தானும் எதிர்நிலைப் பாத்திரங்களாக அமைக்கப்பட்டு உள்ளனர். ஆனால் இவர்கள் இருவரையும் தீமைக்கே உரிய பாத்திரங்களாகக் கவிஞர்கள் படைக்கவில்லை. நல்ல பண்புகளும், தீய பண்புகளும் அமையப் பெற்றவர்களாகவே படைத்துள்ளனர்.

இராவணனின் இயல்பு

இராவணனும் அறிவிலும் ஆற்றலிலும் உயர்ந்தவன், பெருவீரன், கயிலை மலையைத் தன் கைகளால் தூக்கியவன். ஆயிரம் மறைகளை உணர்ந்தவன். நாரதரே பாராட்டும்படி இசைக்கலையில் தேர்ச்சி பெற்றவன். சீதையிடம் கொண்ட முறையில்லாத காமம் அவனது அழிவிற்கு வித்தாகிறது. காமம் அவன் மானத்தை அழித்தது.

சாத்தானின் இயல்பு

சாத்தான், தன் நிலையிலிருந்து ஒரு படி உயர்ந்தால் இறைவனுடைய நிலையை அடைய முடியும். ஆனால் செருக்கும், கேவலமான ஆசையும் அவனுடைய வீழ்ச்சிக்கு வழிவகுத்தன. சாத்தான் மாவீரன்; அறிவும் ஆண்மையும் நிரம்பியவன்; அன்புள்ளம் கொண்டவன். தன்னோடு நரகில் வீழ்ந்தவர்களைக் கண்டு கண்ணீர் வடித்தான். இத்தகைய இயல்புடைய சாத்தானின் செருக்கும், ஆசையும் அவனை அழித்தன.

இவ்வாறு பல்வேறு நிலைகளில் கம்பரும் மில்டனும் காவியத்தால் ஒன்றுபட்டு விளங்குவதை அறியமுடிகிறது.

தன் மதிப்பீடு : வினாக்கள் - I

1.

கம்பரின் கல்வித் திறமை அல்லது கவிதைப் பெருமையை வெளிப்படுத்தும் பழம் தொடர்கள் இரண்டினைச் சுட்டுக.

விடை

2.

கம்பரோடு ஒப்புமைப்படுத்திக் கூறத்தக்க உலகக் கவிஞர்கள் மூவரின் பெயரினைச் சுட்டுக.

விடை

3.

ஹோமரின் எந்தப் பாத்திரங்களைச் சீதையோடும் கும்பகர்ணனோடும் ஒப்பிட முடியும்?

விடை

4.

மில்டன் இயற்றிய நூலின் பெயரைக் குறிப்பிடுக.

விடை

5.

ஷேக்ஸ்பியரின் நாடகம் ஒன்றின் பெயரைத் தருக.

விடை