4.3 உயிர் உடைய பொருள் வகைகள்

உயிர் உடைய பொருள்களை ஐந்து வகைகளாகப் பிரித்துள்ளார்கள் என்பதை முன்னரே கண்டோம். இப்பகுதியில் ஐந்து வகை உயிர்களையும் விளக்கமாகப் பார்ப்போம்.

• ஓர் அறிவு உயிர்

மெய் அதாவது உடம்பால் தொடுதல் உணர்வை மட்டுமே உடைய உயிர்கள் ஓர் அறிவு உயிர்கள்.

எடுத்துக்காட்டு: செடி, கொடி, புல், மரம்

• ஈரறிவுயிர் (இரண்டு அறிவு உயிர்)

மெய் உணர்வோடு, சுவை அறியும் நாக்கு உடையவை இரண்டு அறிவு உடைய உயிர்களாகும்.

எடுத்துக்காட்டு: சிப்பி, சங்கு

• மூவறிவுயிர் (மூன்று அறிவு உயிர்)

மெய், நாக்கு ஆகியவற்றோடு நாற்றத்தை (வாசனை) அறியும் மூக்கு உடையவை மூன்று அறிவு பெற்ற உயிர்கள்.

எடுத்துக்காட்டு: கறையான், எறும்பு

• நாலறிவுயிர் (நான்கு அறிவு உயிர்)

மெய், நாக்கு, மூக்கு ஆகியவற்றோடு காணும் ஆற்றல் பெற்ற கண் உடைய உயிர்கள் நான்கு அறிவு பெற்றவை.

எடுத்துக்காட்டு: தும்பி, வண்டு

• ஐயறிவுயிர் (ஐந்து அறிவு உயிர்)

மெய், நாக்கு, மூக்கு, கண் ஆகியவற்றோடு கேட்கும் திறனுடைய செவி உடைய உயிர்கள் ஐந்தறிவு பெற்றவையாகும்.

எடுத்துக்காட்டு: விலங்குகள், பறவைகள், மனிதர்

இவ்வாறு ஐந்து வகைகளாக உயிர்ப் பொருள்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளன.


தன் மதிப்பீடு : வினாக்கள் - II
1)
உரிச்சொல் என்றால் என்ன? [விடை]
2)
உரிச்சொல்லின் இயல்பு யாது? [விடை]
3)
பண்பு எனப்படுவது யாது? [விடை]
4)
உயிர்ப்பொருள்கள் எத்தனை வகைப்படும்? [விடை]
5)
மூன்றறிவு உடைய உயிர்களுள் ஒன்றினைக் கூறுக. [விடை]