2.5 தொகுப்புரை

இதுகாறும் நீங்கள் தமிழக வரலாற்றுக்கான அடிப்படைச் சான்றுகளைப் பற்றி நன்கு படித்து உணர்ந்திருப்பீர்கள். தமிழக வரலாற்றினை அறிந்து கொள்ளக் கல்வெட்டுகள், செப்பேடுகள், நினைவுச் சின்னங்கள் பெரிதும் பயன்படுகின்றன என்பதை அறிந்தீர்கள். தமிழக வரலாற்றினைத் தொகுக்கத் தமிழ் இலக்கியங்கள் எந்த அளவு பயன்பட்டுள்ளன என்பதைத் தமிழ் இலக்கியச் சான்றுகள் வாயிலாக அறிந்தீர்கள். அயல்நாட்டுடன் தமிழர்கள் சிறந்ததொரு வாணிகத்தை மேற்கொண்டிருநதனர். என்பதை ரோமாபுரி நாணயங்கள் வாயிலாக அறிந்தீர்கள். முஸ்லீம் படையெடுப்பாளர்கள் தமிழர்களைத் துன்புறுத்திய செயலை உணர முடிந்தது. இராமநாதபுரம் இராஜாக்கள், சிவகங்கை ராஜாக்கள் ஆகியோர் ஆவணக் காப்பகங்கள் வைத்திருந்தது தெரிய வருகிறது.

தன் மதிப்பீடு : வினாக்கள் - II

1.
இலக்கியச் சான்றுகள் எத்தனை வகையாகப் பிரிக்கப்படுகின்றன? அவை யாவை?
2.
இரண்டாவது சங்க காலத்தில் எழுந்த இலக்கண நூல் யாது?
3.
கடம்பர்களை வெற்றி கொண்ட சேர மன்னன் யார்?
4.
கண்ணகிக்குச் சிலை எடுத்துச் செய்த விழாவில் கலந்து கொண்ட இலங்கை வேந்தன் யார்?
5.
தமிழகத்தைப் பற்றியும், தமிழக மன்னர்களைப் பற்றியும் குறிப்புகள் தரும் வடமொழிக் காப்பியங்கள் யாவை?
6.
இண்டிகா என்னும் நூலின் ஆசிரியர் யார்?
7.
தாலமி என்பவர் எந்த நாட்டைச் சேர்ந்தவர்?
8.
தமிழக வரலாற்றுக்கான இலக்கியச் சான்றுகள் உள்ள சங்க நூல்கள் இரண்டினைக் குறிப்பிடுக.
9.
நந்தர் கங்கையாற்றில் செல்வங்களைப் புதைத்து வைத்த செய்தி எந்நூலில் குறிப்பிடப்படுகின்றது?
10.
பதிற்றுப்பத்து எத்தனை சேர மன்னர்களைப் பற்றிக் குறிப்பிடுகிறது?