2.5 தொகுப்புரை

ஒலி, ஒலியின் வரிவடிவமாகிய எழுத்து, சொல், தொடர் ஆகிய கூறுகளைக் கொண்டது தமிழ் மொழி. எழுத்துகள், ‘நெடுங்கணக்கு’ எனப்படும். ஒலிப்பு அளவுக் கணக்கீடு பழங்காலத்திலேயே வரையறுக்கப்பட்டுள்ளது. அதற்கேற்ப எழுத்துகளுக்குக் ‘குறில்’ ‘நெடில்’ என்று பெயர்களும் தரப்பட்டுள்ளன. சொற்கள் ‘பொருள்’ பொதிந்தவை, சொற்கள் தொடர்ந்து அமைவதால் தொடர்கள் உருவாகின்றன. பெயர்ச்சொல், வினைச்சொல், இடைச்சொல், உரிச்சொல் என்றும், இயற்சொல், திரிசொல், திசைச்சொல், வடசொல் என்றும் தொல்காப்பியம் பாகுபாடு செய்துள்ளது. எழுவாய், பயனிலை, செயப்படுபொருளைக் கொண்டது தொடர். அது செய்தி, கட்டளை, வினா, வியப்பு, உடன்பாடு - எதிர்மறை, செய்வினை - செயப்பாட்டு வினை, தன்வினை - பிறவினை என்றமைவதைக் காணலாம். முற்றுத்தொடர், எச்சத்தொடர் என்றும் தொடரைப் பகுக்க முடியும். தமிழ்ச் செய்யுள்களில் தொடர்கள் ஒன்றுடன் ஒன்று இணைக்கப்படுகின்றன. தொடர்களை இணைத்து முழுக் கருத்தைப் புரிந்து கொள்வது வேண்டப்படுகிறது. கருத்தாடலில், ‘கருத்துணர்த்தல்’ முதன்மை பெறும். தொடரமைப்பு நெறிகள் நெகிழ்வாகவே உரையாடலில் பின்பற்றப்படுகின்றன.



தன் மதிப்பீடு : வினாக்கள் II

1.
பெயர்ச்சொல் என்றால் என்ன?
2.
வினைச்சொல் என்றால் என்ன?
3.
சொல்லைக் குறிக்கும் வேறு சொற்கள் யாவை?
4.
இடைச்சொல்லின் பண்பு யாது?
5.
தமிழ்ச் சொற்களை இலக்கண நூல் எங்ஙனம் வகைப்படுத்துகிறது?
6.
சொற்களை வகைப்படுத்தும் பழந்தமிழ் இலக்கண நூலின் பெயர் யாது?
7.
மரபுச் சொல் என்றால் என்ன?
8.
தமிழ்த் தொடரின் மூன்று உறுப்புகள் யாவை?
9.
தொடர் வகைகளைக் குறிப்பிடுக.
10.
தொடர்களை இணைத்துப் பொருள் கொள்ளுவது எப்பெயரால் இலக்கணத்தில் சொல்லப்படுகிறது?