தன் மதிப்பீடு : விடைகள் - II

1. சொத்துரிமையை மையப்படுத்தி எழுந்த கதைப்பாடல் எது? விளக்குக.

சொத்துரிமையைப் பாடுபொருளாகக் கொண்ட கதைப்பாடல் சின்னநாடான் கதைப்பாடலாகும். இக்கதையின் தலைவன் சின்ன நாடான் நான்கு குடும்பத்தாருக்கு ஒரே வாரிசாக வளர்ந்தவன். அவனுக்குப் ‘பூவாயி’ என்ற பருவமடையாத சிறுமியை அவன் சாதியினர் திருமணம் செய்து வைக்கின்றனர். பருவக் காளையான சின்னநாடன் ‘ஐயம்குட்டி’ என்ற வேறு சாதியைச் சேர்ந்த பெண்ணோடு தொடர்பு கொண்டதோடு, பூவாயி பருவமடைந்த பின்னும் ‘ஐயம்குட்டி’ என்ற பெண்ணை விட்டுவிட்டு வர மறுக்கிறான். அதன் காரணமாக வேற்றுச் சாதிப்பெண் மூலம் பிறக்கும் குழந்தை தங்கள் சொத்திற்கு வாரிசாகக் கூடாது என்று தீர்மானித்து, சின்ன நாடானை அவனது உறவினர்களே கொன்று விடுகின்றனர்.