தன் மதிப்பீடு : விடைகள் - II

1. அல்லி - பாத்திரப் படைப்பினைச் சுருக்கியுரைக்க.

இறை அருளால் அல்லி மலரில் தோன்றி ‘அல்லி’ என்ற பெயருடன் பாண்டிய நாட்டை ஒப்பாரும் மிக்காரும் இன்றி ஆண்களைச் சாராது ஆட்சி புரிபவள் அல்லி. சூழ்ச்சியால் தன்னைப் கருவுறச் செய்த அருச்சுனனை ஏற்றுக் கொள்ள இறுதி வரையில் மறுத்தாலும் தன் குழந்தைக்குத் தந்தை என்ற நிலையில் அவனை மணமுடிக்க ஒத்துக் கொள்கிறாள். இருப்பினும் அவனைச் சற்றும் மதிக்காதவளாக நடந்து கொள்கிறாள். அருச்சுனனின் பிற மனைவியரைக் கிளி, பூனை என வர்ணித்துத் தன்னைப் புலி, சிங்கம் எனக் கூறிக் கொள்ளும் அல்லி மற்ற பெண்களைவிட வீரத்தில் சிறந்தவளாக விளங்குகின்றாள். தாயன்புக்குக் கட்டுப்பட்டவளாக, தாயன்பு மிக்கவளாக விளங்குகின்றாள். தன் மகனுக்குப் பவளத்தேர் கொண்டு வர அருச்சுனனுக்குத் தகவல் தெரிவிக்கின்றாள். இருப்பினும் அவனையும் அவனைச் சார்ந்த அவனது சகோதரர்களையும் மதிப்பதில்லை. அதே வேளையில் அருச்சுனன் மனைவி சுபத்திரை மீது ஆசை கொண்ட துரியோதனனை சவுக்கால் அடித்து அவமானப்படுத்துகிறாள். இவ்வாறு பல மேன்மைக் குணம் கொண்டவளாக ஆணுக்கு அடிபணியாதவளாகச் சித்திரிக்கப்பட்டாலும் அருச்சுனன் இறந்துவிட்டதாகச் செய்தி கேட்டவுடன் தன் அல்லித் தன்மையை விட்டுப் புலம்புபவளாகவும் காட்டப்பட்டுள்ளாள். வீரம் மிக்க, சிறுமைக்குணம் கண்டு பொங்குகின்ற, தாயன்புக்கு அடிபணிகின்ற பெண்ணாக அல்லி வலம் வருகின்றாள்.