6.7 தொகுப்புரை
 

பாவேந்தர் என்றும் புரட்சிக் கவிஞர் என்றும் போற்றப்படுபவர் பாரதிதாசன். தமிழ்க் கவிதையைச் சமுதாய மறுமலர்ச்சிக்கும் மூடநம்பிக்கை ஒழிப்பிற்கும் பகுத்தறிவைப் பரப்புவதற்கும் மொழி, இன உணர்வை ஊட்டுவதற்கும் பயன்படுத்திய முதல் தமிழ்க்கவிஞர் பாரதிதாசன் ஆவார்.

தமிழ் மொழி உணர்வும் தமிழ் இன உணர்வும் தமிழனுக்கு என்றும் தேவையானவை. பகுத்தறிவுச் சிந்தனை நிறைந்தோர் வாழும் நாடு வளம் நிறைந்த நாடாக மலரும். அந்த அடிப்படையில் தமது கவிதைகளில் பகுத்தறிவுக்குத் தனி இடத்தைப் பாரதிதாசன் கொடுத்துள்ளார்.

இயற்கையை அதன் எழிலைச் சொல் ஓவியமாகத் தீட்டியவர் பாரதிதாசன். அந்த இயற்கைப் பாடல்கள் வழியாகவும் அவர் தமது கொள்கையை வெளிப்படுத்தியுள்ளார்.

இயற்கைப் புனைவுகள், என்றும் இதயத்தை ஈர்ப்பவை ஆகும். அவர் பாடியுள்ள இயற்கைக் காட்சிகள் அவரைப் பிற கவிஞர்களிடமிருந்து வேறுபடுத்திக் காட்டியுள்ளன. இந்த இயற்கைக் கவிதைகள் பாரதிதாசனை என்றும் நிலைக்கச் செய்யும்.

பாரதிதாசன் அன்றாட வாழ்வில் காணும் அனைத்தையும் தமது கவிதைகளுக்கு உரிய பொருள் ஆக்கி உள்ளார். மேலும் அக்கவிதைகளில் தற்காலத்தில் காணும் பொருள்களை உவமைகளாகப் பயன்படுத்தியுள்ளார்.

எளிய சொற்களை இணைத்து அவற்றில் கவிதை நயத்தையும் கற்பனையையும் கலந்து கவிதை படைத்த திறமும் பாரதிதாசனின் தனிச்சிறப்பு ஆகும்.

கவிதைகள், காவியங்கள், இசைப்பாடல்கள், நாடகங்கள், கதைகள், கடிதங்கள், வாழ்த்து மடல்கள் என்று தமிழ் இலக்கியத்தின் வடிவங்களில் எல்லாம் இலக்கியம் படைத்த கவிஞர் என்னும் பெருமையும் பாரதிதாசனுக்கு உரியது ஆகும்.

சங்ககால வரலாறு முதல் பாரதிதாசன் வாழ்ந்த கால வரலாறு வரை அனைத்தையும் பாரதிதாசன் தமது படைப்புகளில் தொட்டுக்காட்டியுள்ளார். பாரதிதாசனின் படைப்புகள் அனைத்தையும் ஒருவர் படித்தால் தமிழனின் பண்பாட்டு வரலாற்றைப் புரிந்து கொள்ள இயலும்.

இவ்வாறு பாடு பொருள்களாலும் இலக்கிய வடிவங்களாலும் வரலாற்றுப் பதிவுகளாலும் தனக்கு என்று ஒரு தனி இடத்தைப் பாரதிதாசன் தக்கவைத்துள்ளார்.

 

தன் மதிப்பீடு: வினாக்கள் - II
 

  1. கண் இல்லாதவன் என்று பாரதிதாசன் யாரைக் குறிப்பிட்டுள்ளார்?
  1. எந்த உள்ளத்தில் சண்டை இருக்காது என்று பாவேந்தர் பாடியுள்ளார்?
  1. கற்பூரப் பெட்டகம் என்று பாரதிதாசன் யாரைக் குறிப்பிட்டுள்ளார்?