4.1 வேற்றுமை உருபுகள்
வேற்றுமை எட்டு வகைப்படும். அவற்றுள் முதல் வேற்றுமை பெயர் வேற்றுமை எனப்படும்.
இவ்வேற்றுமை உருபு எதுவும் ஏற்காது. பெயர் மட்டுமே நிற்றலால், பெயர் வேற்றுமை எனப்பட்டது.
இப்பெயர் ஒரு தொடரில் எழுவாயாக வருவதால் எழுவாய் வேற்றுமை என்றும் கூறப்படும்.
எட்டாம் வேற்றுமை விளித்தல் (அழைத்தல்) பொருளில் வருவதால் விளிவேற்றுமை
என்று கூறப்படும். இவை இரண்டும் நீங்கலான பிற ஆறு வேற்றுமைகளுக்கு மட்டுமே தனித்தனி
உருபுகள் உண்டு. அவை ஐ, ஆல், கு, இன், அது, கண் என்பன ஆகும். இவ்வேற்றுமைகள் ஒவ்வொன்றும்
அவற்றிற்கு உரிய உருபினைக் கொண்டு ஐ வேற்றுமை, ஆல் வேற்றுமை என்றவாறு பெயரிட்டும்
அழைக்கப்படும்.
நன்னூலார் சொல்லதிகாரத்தில் அமைந்த முதல் இயலாகிய பெயரியலில் வேற்றுமையின்
இலக்கணத்தை விளக்குகிறார். (நன்னூல், 291-293) அதில் வேற்றுமையில் எழுவாயாக வரும்
பெயரையும் உருபு என்றே குறிப்பிடுகிறார். எழுவாயாக வரும் அப்பெயர் உருபே, ஐ
முதலாகிய ஆறு வேற்றுமை உருபுகளையும் ஏற்கும் என்கிறார். இதனை,
ஆறன் உருபும் ஏற்கும்
அவ்வுருபே (நன்னூல், 293)
என்ற
பெயரியல் நூற்பாவில் குறிப்பிடுகிறார். (அவ்வுருபே - எழுவாய் உருபே)
விளிவேற்றுமையும் பெயரின் திரிபாதலால் அதனையும் நன்னூலார் உருபு என்றே கொள்கிறார்.
பெயர்ச்சொல்லோடு விளியுருபுகள் சேர்ந்தே எட்டாம் வேற்றுமை விளித்தல் பொருளில்
வரும்.
சான்று:
இராமன் > இராமா
அரசன் > அரசே
இங்கு ஆ, ஏ என்பன விளியுருபுகளாக வருகின்றன. எனவே நன்னூலார் கருத்துப்படி
எட்டு வேற்றுமைகளுமே உருபுகள் என்பதாம். அவை பெயர், ஐ, ஆல், கு,
இன், அது, கண், விளி என்பன ஆகும்.
இந்த எட்டு வேற்றுமை உருபுகளும் நாற்பது ஆகின்றன என்று நன்னூலார் உருபு புணரியலில்
கூறுகிறார்.
4.1.1 வேற்றுமை உருபுகள் எட்டும் நாற்பது ஆதல்
ஒருவன், ஒருத்தி, பலர், ஒன்று, பல என்னும் வாய்பாடுகளில் அமைந்துவரும் ஐம்பால்
பெயர்களோடு, பெயர் வேற்றுமை முதல் விளிவேற்றுமை வரையிலான எட்டு வேற்றுமை
உருபுகளையும் பெருக்கிக் கணக்கிட, வேற்றுமை உருபுகள் நாற்பது ஆகும்.
ஒருவன் ஒருத்தி பலர்ஒன்று பல என
வருபெயர் ஐந்தொடு பெயர்முதல் இருநான்கு
உருபும் உறழ்தர நாற்பதாம் உருபே (நன்னூல், 240)
(உறழ்தர
–
பெருக்கிக் கணக்கிட)
சான்று:
நம்பி |
– முதல் வேற்றுமை |
(பெயர் வேற்றுமை) |
நம்பியை |
– இரண்டாம் வேற்றுமை |
(ஐ வேற்றுமை) |
நம்பியால் |
– மூன்றாம் வேற்றுமை |
(ஆல் வேற்றுமை) |
நம்பிக்கு |
– நான்காம் வேற்றுமை |
(கு வேற்றுமை ) |
நம்பியின் |
– ஐந்தாம் வேற்றுமை |
(இன் வேற்றுமை) |
நம்பியது |
– ஆறாம் வேற்றுமை |
(அது வேற்றுமை) |
நம்பி கண்
|
– ஏழாம் வேற்றுமை |
(கண் வேற்றுமை) |
நம்பீ |
– எட்டாம் வேற்றுமை |
(விளி வேற்றுமை) |
இவ்வாறே நங்கை, மக்கள், மரம், மரங்கள் என்னும்
ஏனைய நான்கு வாய்பாட்டுப் பெயர்களோடு எட்டு வேற்றுமை உருபுகளையும் கூட்டினால்
வேற்றுமை உருபுகள் மொத்தம் நாற்பது ஆகும்.
4.1.2 வேற்றுமை உருபுகள் வருதற்குக் காரணமும் வரும் இடமும்
வேற்றுமை உருபுகள் தமது பொருளைக் கொடுக்க, பெயர்க்குப் பின்னால் வரும்.
பெயர்வழித் தம்பொருள் தரவரும் உருபே (நன்னூல், 241)
தம்பொருள் தரவரும் என்றது பெயர் வேற்றுமை உருபு கருத்தாப் பொருளையும், ஐ உருபு
செயப்படுபொருளையும், இதுபோல மற்ற வேற்றுமை உருபுகள் தத்தமக்கு உரிய பொருளையும்
பெயர்க்குப் பின்னால் வந்து தரும் என்பதைக் குறிக்கும்.
சான்று
நம்பி கண்டான் |
- பெயர் |
- கருத்தாப்பொருள் |
நம்பியைக் கண்டான் |
- ஐ |
- செயப்படுபொருள் |
நம்பியால் பெற்றான் |
- ஆல் |
- கருவிப்பொருள் |
நம்பிக்குக் கொடுத்தான் |
- கு |
- கொடைப்பொருள் |
நம்பியின் பிரிந்தான் |
- இன் |
- நீங்கல்பொருள் |
நம்பியது வீடு |
- அது |
- கிழமைப்பொருள் |
நம்பிகண் செல்வம் |
- கண் |
- இடப்பொருள் |
நம்பீ! வா |
- விளி |
- விளிப்பொருள் |
(கிழமைப்பொருள்
–
உடைமைப்பொருள்)
4.1.3
வேற்றுமை உருபுகள் நிலைமொழி வருமொழிகளோடு புணரும் முறை
வேற்றுமை உருபுகள் மெய்யையும் உயிரையும் முதலிலும்
ஈற்றிலும் பெற்று வரும்.
வேற்றுமை உருபுகள்
|
வருமொழியாக வரும்போது |
நிலைமொழியில் சேர்ந்து
நிற்கும் போது |
ஐ |
ஐ – உயிர்முதல் |
ஐ – உயிர் ஈறு |
ஆல் |
ஆ – உயிர்முதல் |
ல் – மெய் ஈறு |
கு |
க் – மெய்முதல் |
உ – உயிர் ஈறு |
இன் |
இ – உயிர்முதல் |
ன் – மெய் ஈறு |
அது |
அ – உயிர்முதல் |
உ – உயிர் ஈறு |
கண் |
க் – மெய் முதல் |
ண் – மெய் ஈறு |
இனி
நன்னூலார் வேற்றுமை உருபுகள் நிலைமொழி வருமொழிகளோடு புணரும் உருபு புணர்ச்சி
பற்றிக் கூறுவனவற்றைக் காண்போம்.
மெய்யையும் உயிரையும் முதலும் ஈறுமாக உடைய ‘ஐ,
ஆல், கு, இன், அது, கண்’
என்னும் ஆறு வேற்றுமை உருபுகளும் நிலைமொழி வருமொழிகளோடு புணரும்போது, ஏற்கெனவே
உயிர்ஈற்றுப் புணரியல், மெய் ஈற்றுப் புணரியல் ஆகிய இரண்டு இயல்களுள்ளும்,
வேற்றுமைப் புணர்ச்சிக்குச் சொல்லப்பட்ட இயல்பாதல், விகாரமாதல் (தோன்றல், திரிதல்,
கெடுதல்) என்னும் புணர்ச்சி விதிகளைப் பெரும்பாலும் ஒத்து நடக்கும்.
ஒற்றுஉயிர் முதல்ஈற்று உருபுகள்
புணர்ச்சியின்
ஒக்கும்மன் அப்பெயர் வேற்றுமைப் புணர்ப்பே (நன்னூல், 242)
(வேற்றுமைப்
புணர்ப்பு –
வேற்றுமைப் புணர்ச்சி)
சான்று:
1
உயிர் எழுத்தை .........மிகாது.
நம்பி + கண் = நம்பிகண்
உயிர் எழுத்தை ஈறாகக் கொண்ட உயர்திணைப் பெயர் முன் வரும் வல்லினம் மிகாது.
பொதுப்பெயர் உயர்திணைப்
பெயர்கள் ஈற்றுமெய்
வலிவரின் இயல்பாம் ஆவி யரமுன்
வன்மை மிகா (நன்னூல்,
159)
என்ற விதிப்படி நம்பி என்ற இகர உயிர் ஈற்று உயர்திணைப் பெயர்முன், வருமொழி
முதலில் வந்துள்ள க் என்ற வல்லினம் மிகாமல் நம்பிகண்
என்று இயல்பாயிற்று.
நம்பிகண் + வாழ்வு = நம்பிகண் வாழ்வு
கண்
என்ற ஏழாம் வேற்றுமை உருபு, நம்பி என்ற நிலைமொழியோடு இயல்பாய்ப் புணர்ந்து,
நம்பிகண் என்று நிலைமொழியாக நிற்க, அந்தக் கண் உருபின் இறுதியில் உள்ள ணகரமெய்,
வருமொழி முதலில் வ் என்ற இடையின மெய் வர,
ணன வல்லினம் வரட்டறவும்
பிறவரின்
இயல்பும் ஆகும் வேற்றுமைக்கு (நன்னூல், 209)
(ணன
என்னும் மெய்கள், வல்லினம் அல்லாத பிறமெல்லின, இடையின மெய்கள் வருமொழி முதலில்
வரின் வேற்றுமையில் இயல்பாகும்) என்ற விதிப்படி இயல்பாகி, நம்பிகண் வாழ்வு
என வந்தது.
சான்று:
2
உறி + கண் + பால்
உறி + கண் = உறிக்கண்
இயல்பு
ஈறாகவும், விதி ஈறாகவும் நிலைமொழியின் இறுதியில் நின்ற உயிர்முன் வரும் க, ச, த, ப
என்னும் வல்லின மெய்கள் மிகும்.
இயல்பினும் விதியினும் நின்ற
உயிர்முன்
கசதப மிகும் (நன்னூல்,
165)
என்ற விதிப்படி, உறி என்னும் நிலைமொழியின் இறுதியில் இயல்பு ஈறாக நின்ற
இ என்ற உயிர்முன் வருமொழி முதலில் வந்துள்ள க் என்ற வல்லினமெய்
மிக்கு, உறிக்கண் என்றாயிற்று.
உறிக்கண் + பால் = உறிக்கட்பால்
கண்
என்ற ஏழாம் வேற்றுமை உருபு, உறி என்னும் நிலைமொழியோடு மிக்குப் புணர்ந்த பின்னர்,
உறிக்கண் என்று நிலைமொழியாக நிற்க, அவ்வுருபின் இறுதியில் உள்ள ணகர மெய், வருமொழி
முதலில் ப் என்ற வல்லினமெய் வர,
ணன வல்லினம் வரட் டறவும் ........
வேற்றுமைக்கு
(நன்னூல், 209)
என்ற
விதிப்படி டகர மெய்யாகத் திரிந்து உறிக்கட்பால் என்றாயிற்று.
சான்று:
3
பழி + கு + அஞ்சி
பழி + கு = பழிக்கு
இயல்பினும் விதியினும்
நின்ற உயிர்முன்
கசதப மிகும்
என்ற விதிப்படி, பழி என்னும் நிலைமொழியின் இறுதியில் நின்ற இ என்னும் இயல்பு
உயிர்முன், வருமொழியின் முதலில் வந்த க் என்ற வல்லின மெய்
மிக்கு, பழிக்கு என்றாயிற்று.
பழிக்கு + அஞ்சி = பழிக்கஞ்சி
பழி
என்ற நிலைமொழியோடு கு என்ற நான்காம் வேற்றுமை உருபு வல்லினம் மிக்குப் புணர்ந்து,
பழிக்கு என்று நிலைமொழியாக நிற்கிறது. அதன் இறுதியில் உள்ள கு என்பது வேற்றுமை
உருபாகவே கொள்ளப்படுகிறது. அதிலுள்ள உகரமானது முற்றியலுகரம் ஆகும். அம்
முற்றியலுகரமானது (உகர உயிரானது),
உயிர்வரின் உக்குறள் மெய்விட்டு ஓடும்
யவ்வரின் இய்யாம் முற்றும்அற்று ஒரோவழி (நன்னூல், 164)
(வருமொழியின் முதலில் உயிர் வரின், நிலைமொழி இறுதியில் உள்ள முற்றியலுகரம்,
குற்றியலுகரத்தைப் போலத் தான் ஏறியிருக்கும் மெய்யை விட்டு ஒரு சில இடங்களில்
நீங்கும் என்பது இந்நூற்பாவின் பொருள்.)
என்ற
விதிப்படி, தான் ஏறியிருக்கும் ககரமெய்யை விட்டு நீங்கி, பழிக்க் என
நிற்கிறது;
அதனோடு வருமொழி முதலில் உள்ள அகர உயிரானது,
உடல்மேல் உயிர்வந்து
ஒன்றுவது இயல்பே (நன்னூல், 204)
என்ற
விதிப்படி, இறுதியில் நின்ற ககர மெய்யோடு பொருந்தி, பழிக்கஞ்சி என்றாயிற்று.
நூற்பாவில் ஒக்கும்மன் (பெரும்பாலும் ஒத்து நடக்கும்) என்றமையால்,
சிறுபான்மை ஒவ்வாது வருவதும் உண்டு என்பது பெறப்படும்.
சான்று:
நம்பி + கு = நம்பிக்கு
இங்கே “உயர்திணைப் பெயர்கள் ஈற்று... ஆவி யரமுன் வன்மை மிகா” (நன்னூல்,
159) என்ற விதியை ஒவ்வாது, “இயல்பினும் விதியினும் நின்ற உயிர்முன் க, ச,
த, ப மிகும்” (நன்னூல், 165) என்ற விதிப்படி, நம்பி என்ற இகர உயிர் ஈற்று
உயர்திணைப் பெயர்முன், வந்துள்ள கு என்னும் நான்காம் வேற்றுமை உருபின் முதலில்
உள்ள க் என்ற வல்லினம் மிக்கு, நம்பிக்கு என்றாயிற்று.
தன்
மதிப்பீடு : வினாக்கள் - I |
1. |
எழுவாயாக வரும்
பெயர் உருபு ஏற்கும் வேற்றுமை உருபுகள் எத்தனை? அவை யாவை? |
|
2. |
வேற்றுமை உருபுகள்
எட்டும் ஐம்பால் பெயர்களோடு சேர்வதால் எத்தனையாகப் பெருகி அமைகின்றன?
|
|
3. |
பெயர்ச்சொல்லுக்குப்
பின்னால் வரும் ஐ உருபு தரும் பொருள் யாது? |
|
4. |
ஏழாம் வேற்றுமைக்கு
உரிய உருபு யாது? |
|
5. |
உறி + கண் + பால் – எவ்வாறு
புணரும்? |
|
6. |
பழி + கு என்பது புணர்ச்சியில்
எவ்வாறு புணரும்? அதற்கு விதி யாது? |
|
|