தன் மதிப்பீடு : விடைகள் - II

2.

மீட்சியின் நான்கு வகைகளை விளக்குக.

மீட்சி நான்கு வகைகளை உடையது. அவற்றின் விளக்கங்கள் :

(1) தெளித்தல்

உடன் போக்காகச் சென்ற தலைவியைத் தேடிக் காணாமல் திரும்பி வந்த செவிலித்தாய் நற்றாயிடம் ‘தலைவி நெடுந்தூரம் சென்று விட்டாள்’ என்று கூறி ஒரு தெளிவை ஏற்படுத்துதல் ‘தெளித்தல்’ எனப்படும். அவ்வாறே தலைவன் மீண்டு வரும்போது தலைவியினது ஊர் நெருங்கிவிட்டதனைக் கூறுதலும், தெளித்தல் ஆகும்.

(2) மகிழ்ச்சி

தலைவி தலைவனுடன் திரும்பி வருவதை, அவளுக்கு முன்னே செல்லும் சிலர் தோழியிடம் சென்று கூறுவர். அது கேட்டு, தோழி மகிழ்வாள்; உடனே தோழி சென்று நற்றாயிடம் கூறுவாள். அவளும் அதைக் கேட்டு மகிழ்வாள். இவ்விரண்டும் ‘மகிழ்ச்சி’ என்னும் வகையின் விளக்கங்கள் ஆகும்.

(3) வினாதல்

தலைவி மீண்டு வருவதை அறிந்த நற்றாய் தன் மகளைத் தலைவன் நம் மனைக்குக் கொண்டு வருவானா? அல்லது தன் நகர்க்கே கொண்டு செல்வானா? என்று, வெறியாட்டு நிகழ்த்தும் வேலனிடம் கேட்பது வினாதல் எனப்படும்.

(4) செப்பல்

தலைவியின் வருகையை அவளுக்கு முன் சென்றோர் தோழியிடம் கூறுதல் செப்பல் எனப்படும்.

முன்