5.4 தொகுப்புரை மாணாக்கர்களே! நீங்கள் மனத்தில் நிறுத்த வேண்டிய அடி, தொடை ஆகியன பற்றிய செய்திகள் கீழ்வருவன: அடி என்பது செய்யுள் உறுப்புகளின் வரிசையில் ஐந்தாவதாக வைத்து எண்ணப்பெறுவது. சீர்களின் தொடர் இயக்கத்தால் உண்டாகும் ஒலிஒழுக்கு தளை; சீர்களின் தொடர் இயக்கம் செய்யுளுக்கு வடிவியக்கம். இவ்வடிவியக்கம் ‘அடி’ என்பதாகும். அடி என்பது, பாவின் அடி; சீரடி என்பது பாவின் ஓரடி, சீரடி வகைகள் ஐந்து. அவை: குறளடி, சிந்தடி, அளவடி, நெடிலடி, கழிநெடிலடி, இப்பெயர்கள் அளவடியின் குறைவு, மிகுதி ஆகியவை கருதி வைத்த பெயர்கள். ஒரு தளையை உண்டாக்குவது குறளடி; இருதளையை உண்டாக்குவது சிந்தடி; மூன்று தளையை உண்டாக்குவது அளவடி; நான்கு தளையைத் தோற்றுவிப்பது நெடிலடி; ஐந்தின் மிக்க தளைகளை உண்டாக்குவது கழிநெடிலடி. வெண்பாவிற்குச் சிற்றெல்லை இரண்டடி; ஆசிரியப்பாவிற்குச் சிற்றெல்லை, மூன்றடி; கலிப்பாவிற்குச் சிற்றெல்லை நான்கடி; வஞ்சிப்பாவிற்குச் சிற்றெல்லை மூன்றடி என்பது, அமிதசாகரரின் மதம்(கொள்கை). இரண்டடி என்பது மயேச்சுரர் மதம். சிந்தடியால் இயன்றால் இரண்டடி; குறளடியால் இயன்றால் மூன்றடிச் சிற்றெல்லை என்பாரும் உளர். படைப்பாளிகளாகிய கவிஞர்களுக்கு யாப்புலகம் வழங்கியுள்ள சலுகைகள் பல. அவற்றுள் ஒன்று எவ்வகைப் பாவையும் கவிஞர்கள் தம்முள்ளத்து அளவையாகக் கொண்டு எல்லை வரம்பின்றிப் பாடலாம் என்பது. தொடுக்கப்படுவது தொடை. கவிஞர்கள் தாம் படைக்கும் செய்யுளைச் செவிநுகர் கனிகளாக்க, எழுத்து சொல் பொருள் இலக்கணங்களில் இடம்பெறும் மொழிக்கூறுகள் சிலவற்றை ஆள்கின்றனர். அம்மொழிக்கூறுகள் செய்யுளை அழகும் சுவையும் உடையதாக்குகின்றன. அதை / அந்த உத்தியைத் தொடை என்கிறோம். தொடைகள், மோனை, இயைபு, எதுகை, முரண், அளபெடை, அந்தாதி, இரட்டை, செந்தொடைகள் என எட்டு வகைப்படும். எண்வகைத் தொடைகளை மொழியிலக்கணக் கூறுகள் அடிப்படையில் புரிதல் பயன் கருதி ஐந்து வகையாகப் பகுத்துப்படித்தோம். இத்தொடைகள் வேறுவகையாகவும் பகுக்கப்படும்.
|