ழகரம்
(முதல் பருவம்)

பாடம் - 6
6.2 படிப்போம்

சமூகப் பொறுப்பு

அம்மா, எனக்கு எழுதுபொருள் வேண்டும்.
சரி, கமலி, வா, கடைக்குச் செல்வோம்.
அம்மா, அதோ பாருங்கள். பதாகைகளுடன் பலர் ஊர்வலமாக வருகின்றனர்.
வா, அருகில் சென்று பார்ப்போம்.
இன்று உலக நீர் நாள். நீரை வீணாக்காமல் அதனைச் சேமிக்க வலியுறுத்தி, அவர்கள் ஊர்வலமாகச் செல்கின்றனர். நீரைச் சேமிப்பது சமூகப்பொறுப்புகளுள் ஒன்றல்லவா!

சமூகப்பொறுப்பா? அப்படியென்றால் என்ன அம்மா?
சமுதாய வளர்ச்சிக்கு ஒத்துழைப்பு தரும் செயல்களைச் சமூகப்பொறுப்பு என்கிறோம்.
ஓ! புரிந்துகொண்டேன் அம்மா.
அம்மா, அங்கே பாருங்கள். சாலையில் செல்லும் வண்டிகள் எல்லாம் அந்தப் பெரிய வண்டிக்கு ஏன் வழிவிடுகின்றன?
அது அவசரகால ஊர்தி. உயிர் காக்கும் செயலில் அது ஈடுபடுவதால், அந்த ஊர்திக்கு முதலில் வழிவிடவேண்டும். அதுவும் சமூகப்பொறுப்பே.

(இருவரும் கடைக்குச் சென்று எழுதுபொருள்களை வாங்கிக்கொண்டு வீடு திரும்புகின்றனர்.)

அம்மா, அங்கே குப்பை கொட்டும் இடத்தில் ஏன் இரண்டு பெட்டியை வைத்திருக்கிறார்கள்?
மட்கும் பொருளைப் போடுவதற்காக ஒரு பெட்டியும் மட்காத பொருளைப் போடுவதற்காக இன்னொரு பெட்டியும் வைத்திருக்கிறார்கள்.
மட்கும் பொருள், மட்காத பொருள் அப்படியென்றால் என்ன அம்மா?
மண்ணோடு மண்ணாக மட்கிப் போனால், அவை மட்கும் பொருள்கள். அவ்வாறு ஆகாதவை எல்லாம் மட்காத பொருள்கள்.
எவையெல்லாம் மட்கும் மட்காப் பொருள்கள் அம்மா?
காய்கறிக்கழிவு, அழுகிய பழங்கள் போன்றவை மட்கும் பொருள்கள். நெகிழியாலான பொருள்கள் எல்லாம் மட்காத பொருள்கள்.

(அம்மா, அருகிலிருக்கும் பனிக்கூழ் கடைக்குக் கமலியை அழைத்துச் செல்கிறார். இருவரும் பனிக்கூழ் சாப்பிடுகின்றனர்.)

கமலி, நெகிழியையும் குச்சியையும் குப்பைத் தொட்டியில் போடு. நாமே சுற்றுச்சூழலை மாசுபடுத்தலாமா?
இதோ, உடனே செய்கிறேன். இன்று உங்களிடமிருந்து நிறைய கற்றுக்கொண்டேன். இனி, நானும் சமூகப்பொறுப்புடன் நடந்து கொள்வேன் அம்மா.

பொருள் அறிவோம்

1. பதாகை - விளம்பரத் தட்டி
2. ஊர்வலம் - ஊரைச்சுற்றி வருதல்
3. ஊர்தி - வண்டி
4. மாசடைதல் - தூய்மை இழத்தல்
5. பனிக்கூழ் - ஐஸ்கிரீம்