ழகரம்
(முதல் பருவம்)

பாடம் - 12
12.2 படிப்போம்

சிறந்த தொழில் முனைவோர்கள்

மனித வளர்ச்சியின் ஒட்டு மொத்த வரலாற்றையும் ‘மாற்றம்’ என்ற ஒரு சொல்லுக்குள் அடக்கலாம். அந்த மாற்றத்தை ஏற்படுத்திய முகவர்கள் சிந்தனையாளர்கள், தத்துவஞானிகள், அரசியல் தலைவர்கள், தொழில் அதிபர்கள், விஞ்ஞானிகள் எனப் பல்வேறு அடையாளங்களைத் தாங்கி நிற்கின்றனர். மாற்றத்தினை ஏற்படுத்தியவர்களுள் குறிப்பிடத்தக்கவர்கள் தொழில் முனைவோர்கள். அவர்களுள் இருவரைப் பற்றி இங்கு அறிந்துகொள்வோம்.

(தொழில் முனைவோர்கள் மாநாட்டில் இரத்தன் டாடாவும் பில்கேட்ஸும் பேசுவதுபோன்று கற்பனை உரையாடல்)

பில்கேட்ஸ் : வணக்கம் ரத்தன்.
ரத்தன் டாடா : வணக்கம் பில்.
பில்கேட்ஸ் : தொழில்முனைவோர் மாநாடு நடத்தப்படுவது மிகச்சிறப்பானது. இதுபோன்ற மாநாடுகள், இளைய தலைமுறையினருக்கு ஊக்கமளிக்கும்.
ரத்தன் டாடா : ஆமாம். சரியாகச் சொன்னீர்கள். இதன்மூலம் திறமை உள்ளவரை எளிதாகக் கண்டறியலாம்.
பில்கேட்ஸ் : ஆமாம். அனைத்து நிறுவனங்களும் இந்தியாவினை நோக்கிப் படையெடுக்க, நீங்கள் டாடா நிறுவனத்தை அயல்நாடுகளில் விரிவுபடுத்தி வெற்றி அடையவில்லையா? அதேபோல் தேடல் எங்கிருந்தும் தொடங்கும்.
ரத்தன் டாடா : நீங்களும் உங்கள் வாணிகத்தை எளியவர்கள், சாதாரண மனிதர்கள் போன்றோரை மனத்திற்கொண்டு விரிவுபடுத்தினீர்கள். அதுபோலத்தான் எங்கள் நிறுவனத்தையும் விரிவுபடுத்தினோம். மேலும் நீங்கள் மைக்ரோ சாஃப்ட் நிறுவனத்தின் மூலம் உலகத்தையே கணினி மயமாக மாற்றிவிட்டீர்கள்!
பில்கேட்ஸ் : உங்கள் நிறுவனத்தின் மூலம் உற்பத்தி செய்யப்பட்ட பொருள் இல்லா வீடு உலகில் இருக்க முடியுமா?
ரத்தன் டாடா : நீங்கள் உங்கள் பதின்மூன்றாவது வயதிலே நிரல்கள் (Program) எழுதத் தொடங்கிவிட்டீர்கள் அல்லவா?
பில்கேட்ஸ் : ஆமாம். எனக்குக் கணினி நிரலாக்கத்தில் ஆர்வம் அதிகம். அந்த நேரத்தில்தான் நண்பருடன் இணைந்து பல்வேறு வகையான முயற்சிகளை மேற்கொண்டு வந்தேன்.
ரத்தன் டாடா : அந்த முயற்சிகளின் விளைவுதான் தனிநபர் கணினி (PC).
பில்கேட்ஸ் : ஆமாம். தங்களுடைய குடும்பம் மிகவும் கண்டிப்பானது அல்லவா?
ரத்தன் டாடா : ஆமாம். என் தந்தையின் விருப்பப்படி என்னை இயந்திரவியல் பொறியியலாளர் பட்டம் படிக்க அமெரிக்கா அனுப்பினார். ஆனால், நான் கட்டடக்கலையில் இளங்கலை படித்தேன்.
பில்கேட்ஸ் : நான் இளங்கலையை முடிக்கவே இல்லை. உங்களுக்கு ஆரம்பத்தில் குடும்பத்தொழிலில் விருப்பம் இல்லையே! எப்படி இந்தளவுக்கு வந்தீர்கள்?
ரத்தன் டாடா : டாடா குழுமம் மிகுந்த பொருளாதாரச் சிக்கலில் மாட்டிக்கொண்டுவிட்டது. சூழ்நிலையால் குடும்பத்தொழிலின் மீது ஆர்வம் ஏற்பட்டு, அடிமட்ட ஊழியராக இருந்து குழுமத்தின் ஒவ்வொரு துகளையும் அறிந்துகொண்டேன். அப்படிப் படிப்படியாக முயன்று குழுமத்தை வளர்ச்சிப் பாதையில் இயக்கினேன்.
பில்கேட்ஸ் : தொழிலாளர்களின் நலனில் அக்கறை கொண்டு அவர்களின் ஊதியத்தையும் உயர்த்தினீர்கள்.
ரத்தன் டாடா : நீங்கள், நாதன் முர்வால்ட் மற்றும் பீட்டர் ரிநீர்சன் ஆகியோருடன் சேர்ந்து எழுதிய ’த ரோட் அகெட்’ (The Road Ahead, 1995) என்னும் நூலில், கணினியானது தனிநபர் வாழ்வில் ஏற்படுத்திய தாக்கத்தினையும் அதிவேகத் தகவல் தொடர்பின் வளர்ச்சிநிலையையும் குறித்து அப்போதே கணித்துக்கூறியுள்ளீர்கள்.
பில்கேட்ஸ் : நீங்கள் எழுதிய ’ப்ஃரம் ஸ்டீல் டு செல்லுலார்’ (From Steel to Cellular ) (2005) என்ற நூலில் டாடா குழும நிறுவனங்களின் வளர்ச்சி குறித்து விரிவாக கூறியுள்ளீர்கள்.
ரத்தன் டாடா : நல்லது.
பில்கேட்ஸ் : “உங்கள்மீது யாரேனும் கற்கள் வீசினால், அதைக்கொண்டு கட்டடம் எழுப்புங்கள்” என்ற உங்கள் வரிகள் என்னை மிகவும் ஈர்த்தன.
ரத்தன் டாடா : நீங்கள் கூறியுள்ள “வெற்றி ஒரு மோசமான ஆசிரியர் அது புத்திசாலிகளையும் மயக்கித் தோல்வியே நமக்கு இல்லை என்று நினைக்க வைத்துவிடும்” என்ற வாசகம் மிகவும் அருமையானது. உங்களைச் சந்தித்து இவ்வளவு நேரம் உரையாடியதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி. நாம் மாநாட்டிற்குச் செல்வோம் வாருங்கள்.
பில்கேட்ஸ் : எனக்கும் மகிழ்ச்சியே. வாருங்கள். போகலாம்.

மனிதனால் செய்யமுடியாத செயல் என எதுவும் இல்லை. ஆர்வம், தன்னம்பிக்கை, துணிவு, நிலைப்பாடு ஆகிய நான்கனையும் கைக்கொண்டவர்கள் சிறந்த தொழில் முனைவோராய்த் தங்கள் தடத்தை இவ்வுலகில் பதித்துக்கொண்டு இருக்கின்றனர்.

பொருள் அறிவோம்

1. விஞ்ஞஞானி - அறிவியலாளர்
2. அயல்நாடு - வெளிநாடு
3. ஈர்த்தன - கவர்ந்தன
4. ஆரம்பம் - தொடக்கம்
5. அடிமட்டம் - கடைநிலை
6. தடம் - அடையாளம்/முத்திரை

விடை காண்போம்

தொழில் முனைவோர் மாநாடுகள் மூலம் திறமை உள்ளவரை கண்டறியலாம். மேலும் இது இளம் தலைமுறையினருக்கு ஊக்கமளிக்கும்

பில்கேட்ஸ்

த ரோட் அகெட் (The Road Ahead), பிசினஸ் @ தி ஸ்பீட் ஆப் தாட்(Business @ the Speed of Thought)

”வெற்றி ஒரு மோசமான ஆசிரியர் அது புத்திசாலிகளையும் மயக்கித் தோல்வியே நமக்கு இல்லை என்று நினைக்க வைத்துவிடும்’ என்ற பில்கேட்ஸின் வாசகம் தம்மைக் கவர்ந்த்தாக ரத்தன் டாடா கூறியுள்ளார்.

சிறந்த தொழில் முனைவோர்களாக ஆவதற்கு ஆர்வம், தன்னம்பிக்கை, துணிவு, நிலைப்பாடு ஆகிய நான்கு பண்புகள் தேவை.