ழகரம்
(முதல் பருவம்)

பாடம் - 17
17.7 செந்தமிழ்ச்செல்வம்

நல்வழி

ஆற்றுப் பெருக்கற்று அடிசுடும் அந்நாளும் அவ்ஆறு
ஊற்றுப் பெருக்கால் உலகு ஊட்டும் - ஏற்றவர்க்கு
நல்ல குடிப் பிறந்தார் நல்கூர்ந்தார் ஆனாலும்
இல்லை என மாட்டார் இசைந்து.

– (பாடல் - 9)

– ஔவையார்

(அடி - பாதம்; நல்கூர்ந்தார் – வறுமையுற்றார்)

பொருள்

ஆறு, தன்னிடத்தே நீர் வற்றி மணல் சூடான காலத்திலும், ஊறுகின்ற நீரை உலகோர்க்குத் தந்து உதவும். அதுபோல, வளமிக்க குடும்பத்தில் பிறந்தவர்கள் வறுமை நிலை அடைந்தாலும், தம்மை நாடி வருபவர்க்கு இல்லை என்று கூறாமல் தம்மால் இயன்ற அளவிற்கு உதவுவார்கள்.

பழமொழி

ஆறில்லா ஊருக்கு அழகு பாழ்

சொல்வதைக் கேட்டு எழுதுக

பண்டைக்கால மனிதர்களின் வரலாற்றை அறிவதற்கு அவர்கள் விட்டுச் சென்ற பொருள்கள் சான்றாக உள்ளன. இவற்றை ஆய்வு செய்து அறிவியல் முறைப்படி நிறுவுவதே தொல்லியல் ஆய்வாகும்.

சொற்களைத் தொடரில் அமைத்து எழுதுக

  1. பண்பாடு
  2. அகழாய்வு
  3. அருங்காட்சியகம்