ழகரம்
(முதல் பருவம்)

பாடம் - 23
23.3 மொழிக்கூறு

வழுவமைதி

சில சூழ்நிலைகளில் வழுவாக (தவறாக) இருந்தாலும், அதனை ஏற்றுக்கொள்வது வழுவமைதியாகும்.

வழுவமைதியின் வகைகள்

வழுவமைதி ஐந்து வகைப்படும்.

1.திணை வழுவமைதி

உயர்திணையை அஃறிணையாகவும் அஃறிணையை உயர்திணையாகவும் குறிப்பிடுவது திணை வழுவமைதி. இது உவப்பு, உயர்வு, சினம், இழிவு ஆகியவை காரணமாக வழுவி வரும்.

குமார் மரத்தை வெட்டியது.

கிளியார் பறக்கிறார்.

2.பால் வழுவமைதி

ஆண்பாலைப் பெண்பாலாகவும், பெண்பாலை ஆண்பாலாகவும் வழங்குவது, பால் வழுவமைதி. இது உவப்பு, உயர்வு, சினம், இழிவு ஆகியவை காரணமாக வழுவி வரும்.

“வாடி என் கண்ணே!”

“வாடா என் கண்ணா!”

3.இடவழுவமைதி

முன்னிலையாகக் கூறுவதைப் படர்க்கையாகவும், தன்மையாகக் கூறுவதைப் படர்க்கையாகவும் இடத்தை மாற்றிக் கூறுவது இடவழுவமைதி. இது மதிப்பு காரணமாக வழுவி வரும்.

“நண்பரின் கருத்து யாதோ?”

4.கால வழுவமைதி

ஒரு காலத்தில் கூற வேண்டிய வினைச்சொல்லை மற்றொரு காலத்தில் கூறுவது கால வழுவமைதி. இது விரைவு, மிகுதி, துணிவு ஆகியவை காரணமாக வழுவி வரும்.

”கண்ணா வாடா”
“இதோ வந்துவிட்டேன்.”

5.மரபு வழுவமைதி

நம் முன்னோர்கள் தொன்றுதொட்டுப் பின்பற்றிய சொல்லையோ, தொடரையோ அவற்றின் மரபிலிருந்து விலகி, மாறுபடக் கூறுவது மரபு வழுவமைதி.

“கத்தும் குயிலோசை.”