ழகரம்
(முதல் பருவம்)

பாடம் - 23
23.7 செந்தமிழ்ச்செல்வம்

நாலடியார்

வைகலும் வைகல் வரக்கண்டும் அஃதுணரார்
வைகலும் வைகலை வைகுமென்று இன்புறுவர்
வைகலும் வைகல்தம் வாழ்நாள்மேல் வைகுதல்
வைகலை வைத்துணரா தார்

– (பாடல் – 39 )

– சமண முனிவர்கள்

(வைகலும் - நாள்தோறும்; வைகல் – நாள் கழிதல்; வைகும் – மேன்மேலும் இருக்கும்)

பொருள்

நாள்தோறும் நாள் கழிவதைக் கண்டும் அதனை அறியாது, நாள்தோறும் நாள் இருந்துகொண்டே இருக்கும் எனச் சிலர் மகிழ்ச்சி கொள்வார்கள், ஆனால், நாள்தோறும் நாள் கழியும்போது, தம் வாழ்நாளும் கழிந்து போகும் என்பதை அவர்கள் உணர்வதில்லை. ஆகையால், ஒவ்வொருவரும் தம் வாழ்நாள் கழிவதற்குள் நற்செயல்களைச் செய்யவேண்டும்.

பழமொழி

அறம் செய விரும்பு

சொல்வதைக் கேட்டு எழுதுக

உலக மக்களின் அறவாழ்வைக் காட்டும் நூல்களுள் ஒன்று திருக்குறள். உலகம் அனைத்திற்கும் பொதுவான கருத்துகள் இந்நூலில் உள்ளதால், இது உலகப் பொதுமறை என அழைக்கப்படுகிறது. வாழ்க்கைக்கு ஏற்புடைய கருத்துகளைக் கொண்டு பண்பாட்டு வழிகாட்டியாக இந்நூல் திகழ்கிறது.

சொற்களைத் தொடரில் அமைத்து எழுதுக

  1. நற்செயல்கள்
  2. அன்பு
  3. இன்சொல்