சிகரம்
(முதல் பருவம்)

பாடம் - 3
3.2 படிப்போம்

திருக்குறள்

சங்க காலத்திலிருந்தே புலவர்கள் தங்கள் நூல்களில் உயரிய அறக் கருத்துகளைக் கூறுவதற்குத் தவறவில்லை. சமூகப் போக்கில் மாறுதல்கள் விளைய வேண்டும் என விரும்பிய சான்றோர்கள் அவ்வப்போது அறநூல்களைப் படைத்தனர். தமிழரின் அறவாழ்வைக் காட்டும் நூல்களுள் திருக்குறளின் பங்கு மிகவும் உயரியது. இது உலக மக்கள் அனைவருக்குமான வாழ்க்கைக் கருத்துகளைக் கூறுவதால் உலகப்பொதுமறை என்று அழைக்கப்படுகிறது.

அதிகாரம் : 74 தலைப்பு : நாடு
1. உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும்
சேரா தியல்வது நாடு. (734)

மிகுந்த பசியும், தீராத நோயும், அழிவு செய்யும் பகையும் இல்லாத நாடே சிறந்த நாடாகும்.

2. கேடறியாக் கெட்ட இடத்தும் வளங்குன்றா
நாடென்ப நாட்டின் தலை. (736)

எந்த வகையிலும் கெடுதலை அறியாமலும் ஒருவேளை கெடுதல் ஏற்படினும் அதனைச் சீர்செய்யும் அளவிற்கு வளம்குன்றாத நிலையிலும் உள்ள நாடுதான் சிறந்த நாடாகும்.

3. இருபுனலும் வாய்ந்த மலையும் வருபுனலும்
வல்லரணும் நாட்டிற்கு உறுப்பு. (737)

ஊற்றுநீரும் மழைநீரும், வளம் வாய்ந்த மலைகளும், அந்த மலைகளிலிருந்து வருகின்ற ஆற்றுநீரும், சிறந்த பாதுகாப்பு அரண்களும் ஒரு நாட்டிற்கு இன்றியமையாதவையாகும்.

4. நாடென்ப நாடா வளத்தன நாடல்ல
நாட வளந்தரு நாடு. (739)

ஒரு சிறந்த நாடு, தம்முடைய தேவைகளுக்கு எந்த நாட்டையும் சார்ந்திராத வளமுடையது; தம் நாட்டின் தேவைக்குப் பிற நாட்டைச் சார்ந்திருக்கும் நாடு, நாடென்று கருதப்படாது.

5. ஆங்கமைவு எய்தியக் கண்ணும் பயமின்றே
வேந்தமைவு இல்லாத நாடு. (740)

நல்ல ஆட்சியாளர்களால் ஆளப்படாத நாடு, அனைத்து வளங்களைக் கொண்டிருந்தாலும் அவற்றால் எந்தப் பயனும் இல்லாமல் போகும்.

நூலைப் பற்றி

பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று திருக்குறள். இது குறள் வெண்பாக்களால் ஆனது. அறத்துப்பால், பொருட்பால், இன்பத்துப்பால் என்ற மூன்று பிரிவுகளை உடையது. இதில் 9 இயல்களும் 133 அதிகாரங்களும் உள்ளன. அதிகாரத்துக்குப் பத்துக் குறள்கள் வீதம் 1330 குறட்பாக்கள் இந்நூலில் உள்ளன. முப்பால், பொதுமறை, பொய்யாமொழி, வாயுறை வாழ்த்து, தமிழ்மறை, பொருளுறை, முதுமொழி, தெய்வநூல் போன்ற பல பெயர்களால் இது அழைக்கப்படுகிறது. திருக்குறளை இயற்றியவர் திருவள்ளுவர். இவர் பொய்யில் புலவர், செந்நாப்போதார், முதற்பாவலர், மாதானுபங்கி, தெய்வப்புலவர், நாயனார், நான்முகனார், பெருநாவலர் போன்ற சிறப்புப் பெயர்களால் அழைக்கப்படுகிறார்.

தெரிந்துகொள்வோம்

1. திருக்குறளில் இடம்பெறும் இருமலர் - அனிச்சம், குவளை
2. திருக்குறளில் இடம்பெறும் ஒரே பழம் - நெருஞ்சிப்பழம்
3. திருக்குறளில் இடம்பெறும் இரண்டு மரம் - பனை, மூங்கில்
4. திருக்குறளில் இருமுறை இடம்பெற்றுள்ள அதிகாரத்தின் பெயர் - குறிப்பறிதல்
5. திருக்குறளில் இடம்பெறாத ஒரே உயிரெழுத்து -

பொருள் அறிவோம்

1. உறுபசி - மிகுதியானபசி
2. ஓவாப்பிணி - தீராத நோய்
3. செறுபகை - அழிவு தரும் பகை
4. கேடு - தீங்கு
5. புனல் - நீர்
6. வேந்தன் - அரசன்