சிகரம்
(முதல் பருவம்)

பாடம் - 5
5.4 தெரிந்துகொள்வோம்

வல்லினம் மிகும் இடங்கள்

நிலைமொழியும் வருமொழியும் புணரும்போது சில இடங்களில் வல்லினம் மிகுந்தும், சில இடங்களில் வல்லினம் மிகாமலும் வரும். அவற்றுள் வல்லினம் மிகும் இடங்களைப் பற்றி இங்கே காண்போம்.

வல்லெழுத்துகளில் உள்ள க், ச், த், ப் ஆகிய நான்கு மெய்களுள் ஒன்று வருமொழி முதலில் வந்து நிலைமொழியின் ஈற்றோடு புணரும்போது சில சூழல்களில் ஒற்று மிகும். இதை வல்லினம் மிகுதல் என்பர்.

சான்று

தமிழ் + காதல் = தமிழ்க்காதல்
தமிழ் + சான்றோர் = தமிழ்ச்சான்றோர்
தமிழ் + தாய் = தமிழ்த்தாய்
தமிழ் + பாடல் = தமிழ்ப்பாடல்

மேற்கண்ட சான்றுகளில் தமிழ் என்பது நிலைமொழி. காதல், சான்றோர், தாய், பாடல் என்பன வருமொழிகள் ஆகும்.

தமிழ்க்காதல், தமிழ்ச்சான்றோர், தமிழ்த்தாய், தமிழ்ப்பாடல் என்று வல்லினம் மிகுந்துள்ளது.

வ.எண்

வல்லினம் மிகும் இடங்கள்

சான்றுகள்

1.

அ, இ, அந்த, இந்த என்னும் சுட்டுகளுக்குப் பின் மிகும் அக்காலம், இப்பறவை அந்தப்பக்கம், இந்தச் சாலை

2.

எ, எந்த என்ற வினாக்களின் பின் மிகும் எப்பொருள், எந்தத் தொடர்

3.

‘ஐ’ என்னும் இரண்டாம் வேற்றுமை உருபு, ‘கு’ என்னும் நான்காம் வேற்றுமை உருபு வெளிப்படையாக வரும் இடங்களில் மிகும் நூலைப் படி, பள்ளிக்குச் சென்றான்

4.

எட்டு, பத்து என்னும் எண்ணுப்பெயர்களின் பின் மிகும் எட்டுப் பேர், பத்துத் தலை

5.

ஓரெழுத்து ஒருமொழிக்குப் பின் மிகும் தைத்திங்கள்

6.

ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சத்தின் பின் மிகும் எழுதாச் சொல்

7.

திசைப்பெயர்களின் பின் மிகும் மேற்குத் தொடர்ச்சி, கிழக்குச் சீமை

8.

உவமைத் தொகையில் மிகும் மலர்க்கை

9.

சால, தவ போன்ற உரிச்சொற்களின் பின் மிகும் சாலச்சிறந்தது, தவப்பெரிது

10.

ஆக, என போன்ற சொல்லுருபுகளின் பின் மிகும் படிப்பதாகச் சொன்னாள், பாடெனக் கூறினார்