சிகரம்
(முதல் பருவம்)

பாடம் - 5
5.6 கேட்டல் கருத்தறிதல்

ஔவையார்

தமிழ் மூதாட்டி எனப் புகழப்படுபவர் ஔவையார். ‘அம்மை’ என்ற சொல்லின் திரிபே ‘அவ்வை’ ஆகும். பழந்தமிழகத்தில் ‘ஔவையார்’ என்ற பெயருடைய பல பெண்பாற்புலவர்கள் இருந்தனர் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.

இவர்களுள் முதன்மையானவர் சங்க காலத்தில் (இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு) வாழ்ந்தவர். அதியமானிடம் அன்பு காட்டி நெல்லிக்கனியைப் பெற்ற புறநானூற்று ஔவையார் பழம்பெரும் ஔவையார். அவருடைய காலம் கி.மு. மூன்றாம் நூற்றாண்டு.

கி.பி. பன்னிரண்டாம் நூற்றாண்டில் கம்பர், ஒட்டக்கூத்தர் ஆகியோருடன் வாழ்ந்தவர் ‘இடைக்கால ஔவையார்’. கம்பனிடம் கவிதைப்போர் நடத்திய இவர், பிற்காலச் சோழனின் ஆட்சியில் வாழ்ந்தவர். இவர் பாடிய தனிப்பாடல்கள் பல, இன்றும் இலக்கியச் சுவையுடன் திகழ்கின்றன.

’கானமயிலாட கண்டிருந்த வான்கோழி’ என்னும் பாடலைப் பாடியவர் ‘பிற்கால ஔவையார்’. ‘வான்கோழி’ இந்தியப் பறவை இனத்தைச் சார்ந்தது அன்று. ‘வான்கோழி’ இந்தியாவிற்கு வந்தது ஐரோப்பியர் கடல்வழியைக் கண்டுபிடித்த பிறகே ஆகும். எனவே, பிற்கால ஔவையாரின் காலம் கி.பி. பதினாறாம் நூற்றாண்டுக்குப் பிற்பட்டதாக இருக்கலாம் என அறிஞர்கள் கருதுகின்றனர். இவரே ’ஆத்திசூடி’, ’கொன்றைவேந்தன்’, ’மூதுரை’, ’நல்வழி’ ஆகிய நீதி நூல்களை இயற்றியவர். பிற்கால ஔவையார் ‘ஆத்திசூடி’ மூலம் உயர்ந்த கருத்துகளைக் கூறியவர். இவருடைய மொழிநடையைக் கருத்தில் கொண்டு, இவரை இருநூறு அல்லது முந்நூறு ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்தவராகக் கருதலாம். இவ்வாறு ‘ஔவையார்?’ என்னும் நூலில் ம.பொ.சிவஞானம் அவர்கள் குறிப்பிடுகிறார்.

வினாக்கள்

‘அவ்வை’ என்பது ‘அம்மை’ என்ற சொல்லின் திரிபு ஆகும்.

கி.மு. மூன்றாம் நூற்றாண்டு.

ம.பொ. சிவஞானம்.

கம்பனிடம் சொற்போர் நடத்திய ஔவையார், பிற்காலச் சோழனின் ஆட்சியில் வாழ்ந்தவர் ஆவார்.

ஆத்திசூடி

தகவல் துளி

சந்திரயான் என்பது இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் (ISRO) திட்டத்தின் கீழ் விண்வெளிக்குச் செலுத்தப்படும் விண்கலம். இதன் அடிப்படையில் சந்திரயான்-1 திட்ட இயக்குநராகப் பொள்ளாச்சியை அடுத்த கோதவாடியைச் சேர்ந்த மயில்சாமி அண்ணாதுரையும், சந்திரயான்-2 திட்ட இயக்குநராகச் சென்னையைச் சேர்ந்த முத்தையா வனிதா அவர்களும், அதனைத் தொடர்ந்து தற்போது சந்திரயான்-3 திட்ட இயக்குநராக விழுப்புரத்தைச் சேர்ந்த வீரமுத்துவேல் அவர்களும் பணியாற்றியிருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சந்திரயான்-3, 14 ஜூலை 2023 அன்று விண்ணில் ஏவப்பட்டது. சந்திரனின் சுற்றுப்பாதையில் ஆகஸ்ட் 5 அன்று இந்த விண்கலம் நுழைந்தது, மேலும் விக்கரம் லேண்டர் 23 ஆகஸ்ட் 2023 அன்று 12:32 மணியளவில் சந்திரனின் தென் துருவப் பகுதியை அடைந்தது. இதன் மூலம் சந்திரனுக்கு வெற்றிகரமாக விண்கலம் அனுப்பிய நான்காவது நாடு என்ற பெருமையையும் சந்திரனின் தென் துருவத்தில் கால்பதித்த முதல்நாடு என்ற பெருமையையும் இந்தியா பெற்றுள்ளது.