சிகரம்
(இரண்டாம் பருவம்)

பாடம் - 26
26.2 படிப்போம்

உடல்நலம்

இயற்கை மருத்துவத்தின் உயிர்நாடியாக விளங்குவது மூலிகைத்தாவரங்களே. இவ்வகைத் தாவரங்களின் பாகங்கள் நமக்கு உணவாகவும் மருந்தாகவும் பயன்படுகின்றன. இவை நோயைப் போக்குவதோடு மட்டுமல்லாமல் நோய்கள் வராமல் தடுக்கவும் செய்கின்றன. பின்வரும் பாடல், உடல்நலத்திற்கு நன்மை செய்யும் தாவரங்களைப் பற்றிக்கூறுகிறது.

வேப்பிலையைத் தின்னலாம்
விரும்பித் துளசி தின்னலாம்
காப்பதவையே உடல்நலம்
கருதித் தின்றால் கெடலில்லை!
பாகற்காயோ கசப்புத்தான்
பழகிப்போனால் சுவைப்புத்தான்
நாவுக்காக வாழாமை
நலத்துக்கான வாழ்வாமே!
சோற்றுக்காக வாழ்வதோ?
சுவையைக் கருதி வாழ்வதோ?
கூற்றைவெல்லும் ஆற்றலைக்
கொள்ளலாகும் நா காத்தால்!
நாவுச்சுவையை விரும்புதல்
நாளும் நோய்க்கே விரும்புதல்
கூவிமகிழ வேண்டினால்
கொஞ்சம் அடக்கு நாவையே!

- இரா.இளங்குமரன்

பாடலின் பொருள்

வேப்பிலையையும் துளசியையும் விரும்பி உண்ண வேண்டும். ஏனென்றால், அவை உடல்நலத்தைக் காக்கும். அவற்றின் மருத்துவக் குணங்களை அறிந்து முறையோடு உண்டால் உடலுக்கு எந்தக் கெடுதலும் இல்லை. பாகற்காய் கசப்புச்சுவையை உடையதுதான். ஆனால், பழகிவிட்டால் அது விரும்பத்தக்க சுவையாக மாறிவிடும். நாக்கின் சுவைக்காக வாழாமல் நலத்துக்காக வாழ வேண்டும். சுவையோடு உண்ணும் ஆசையைத் தவிர்த்து வாழ்ந்தால் நோயற்று நெடுங்காலம் வாழலாம். சுவைக்காகச் சாப்பிட்டு வந்தால் அது நோயை விரும்பி ஏற்றுக்கொள்வதற்கு ஒப்பாகும். மகிழ்ச்சியோடு வாழ விரும்பினால், நாக்கு விரும்புகிறபடி உண்ணுவதை அடக்கிக்கொள்ள வேண்டும்.

நூலைப் பற்றி

இப்பாடல் ‘சிற்றருவி‘ என்னும் கவிதைத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளது. இந்நூல் மழலையர், சிறுவர்கள் பாடல்களைக் கொண்ட தொகுப்பு. இதை இயற்றியவர் இரா. இளங்குமரன். இவர் ’இயற்கை இன்பம்’, ’தேனருவி’, ’இலக்கண வரலாறு’, ’தமிழிசை இயக்கம்’ போன்ற நூல்களைப் படைத்துள்ளார். இவரது ‘தனித்தமிழ் இயக்கம்‘ என்னும் நூலுக்குத் தமிழ்நாடு அரசு பரிசு வழங்கியுள்ளது.

பொருள் அறிவோம்

1. தின் - உண்
2. கெடலில்லை - கெடுதல் இல்லை
3. சோறு - உணவு
4. கூற்று - எமன்
5. நா - நாக்கு