சிகரம்
(இரண்டாம் பருவம்)

பாடம் - 28
28.4 தெரிந்துக் கொள்வோம்

அணிகள்

அணி என்பதற்கு அழகு என்பது பொருள். செய்யுளில் அமைந்திருக்கும் சொல்லழகு, பொருளழகு முதலியவற்றை வரையறுத்துக் கூறுவது. செய்யுளின் கருத்தை அணிகள் அழகுபடுத்துகின்றன.

வாழ்த்தணி

வாழ்த்துதல் – பாராட்டுதல்

இந்தத் தன்மை உடையதால் இது நிகழ்க என்று வாழ்த்துதலாகும்.

எ.கா:

மூவாத் தமிழ்பயந்த முன்னூல் முனிவாழி
ஆவாழி! வாழி அருமறையோர்! – காவிரிநாட்டு
அண்ணல் அனபாயன் வாழி! அவன் குடைக்கீழ்
மண்ணுலகில் வாழி மழை.

இதில் தமிழைத் தோற்றுவித்த அகத்திய முனிவன் வாழ்க என்றும், பசுக்கள் வாழ வேண்டும் என்றும் கூறப்படுகிறது. அரிய மறைவல்லார் வாழ வேண்டும். காவிரி ஆறு சூழ்ந்துள்ள சோழ நாட்டினை ஆட்சி புரியும் அனபாயன் வாழ வேண்டும். அவனுடைய ஆட்சிக்கு உட்பட்ட நிலப்பகுதியில் பெய்யும் மழையானது வாழ வேண்டும் என்கிறது.

இப்பாடலில் அகத்தியன், அரிய மறைவல்லார், அனபாயன் ஆகியோரும் பசு, மழை ஆகியனவும் வாழ்க என்று வாழ்த்துவதால் வாழ்த்தணி இடம்பெற்றுள்ளது.

இன்னார்க்கு இன்னது இயைக என்றுதாம்
முன்னியது கிளத்தல் வாழ்த்தென மொழிப. (தண்டி – 33)

தன்மேம்பாட்டு உரை அணி

தன்மேம்பாடு – தன்னைத் தானே புகழ்ந்து உரைத்தல்.

ஒருவன் தன்னைத் தானே புகழ்ந்து உரைப்பது தன்மேம்பாட்டு உரை அணி ஆகும்.

எ.கா:

எஞ்சினார் இல்லை எனக்கெதிரா இன்னுயிர்கொண்டு
அஞ்சினார் அஞ்சாது போய் அகல்க – வெஞ்சமத்துப்
பேராதவர் ஆகத்து அன்றிப் பிறர்முதுகில்
சாராஎன் கையில் சரம்.

வீரன் ஒருவன் தன் ஆற்றல் மிகுந்த வீரப்பண்பை வெளிப்படுத்துகிறான். போர்க்களத்தில் எனக்கு எதிராக நின்று போரிட்டு உயிருடன் திரும்பி வந்தவர் எவரும் இல்லை. என்னைக் கண்டு பயந்தவர்கள் பயம் ஏதும் கொள்ளாமல் போர்க்களத்தை விட்டுச் சென்றுவிடுங்கள். நான் எய்யும் அம்புகள் போரில் எதிர்த்து நிற்பவர்கள் மார்பில் பாயுமே தவிர, புறங்காட்டிப் பயந்து ஓடுவோர் முதுகில் பாயாது என்று தன் வீரத்தின் பெருமையை எடுத்துரைக்கிறான். எனவே, இது தன்மேம்பாட்டு உரை அணியாகும்.

“தான்தற் புகழ்வது தன்மேம் பாட்டுரை” (தண்டி – 71)

உவமை அணி

’சிங்கம் போன்ற நடை’
’குயில் போன்ற குரல்’

இத்தொடர்களில்,

சிங்கம், குயில் - உவமை.
நடப்பவர், பாடுபவர் - உவமேயம்
போன்ற - உவம உருபு.

இதே போன்று ஒரு பாடலில் உவமை, உவமேயம், உவம உருபு ஆகியவை வெளிப்படையாக வர அமைவது உவமை அணி ஆகும்.

எ.கா:

அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை
இகழ்வார்ப் பொறுத்தல் தலை.

பூமி தன்னைத் தோண்டுபவரைப் பொறுத்துக்கொள்வது – உவமை
நாம் நம்மை இகழ்ந்து பேசுபவரையும் பொறுத்துக்கொள்வது – உவமேயம்
போல - உவம உருபு

“ஒப்புமை தோன்றச் செப்புவது உவமை” தண்டி - 30

எடுத்துக்காட்டு உவமை அணி:

உவமை ஒரு தொடராகவும் உவமேயம் ஒரு தொடராகவும் அமைந்து உவம உருபு மறைந்து வந்தால் அது எடுத்துக்காட்டு உவமை அணி ஆகும்.

எ.கா:

தொட்டனைத்து ஊறும் மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றனைத்து ஊறும் அறிவு.

மணற்கேணி – உவமை
மாந்தர் - உவமேயம்

உவம உருபு மறைந்து வந்துள்ளது. எனவே, இக்குறளில் எடுத்துக்காட்டு உவமை அணி வந்துள்ளது.