xxxix

 வெனின்’ என வினாவி, ‘இன்னது நுதலிற்று’ என்கிறார். பின்னர் அந் நூற்பாவிற்குப் பொழிப்புரையோ சொற்பொருளோ வரைகின்றார்; இன்றியமையாமை ஏற்பட்டால் உரையின் இடையேயும் அதனை விளக்குகிறார்; உரை முடிந்ததும் அந் நூற்பாவில் அமைந்துள்ள இலக்கண அமைதியை ஆராய்கிறார்; சொல்லாராய்ச்சியையும் மேற்கொள்கிறார். ‘இந்நூற்பா இவ்வாறு அமையினும் கருதிய பொருளைப் பயக்குமே. இவ்வாறு சொல்ல வேண்டியது என்னை’’ என வினாவி, ‘‘இவற்றைக் கூறுதற்கு இவ்வாறு கூறினார்’’ என உரைக்கிறார். சிற்சில இடங்களில் தடைகளைத் தாமே எழுப்பி விடைகளைக் கூறுகிறார். உடன்பாட்டில் கூறப் பெற்ற நூற்பாவை எதிர்மறையில் அமைத்துக் காட்டியும் அக்கருத்தை வலியுறுத்துகிறார். எடுத்துக் கொண்ட இலக்கணத்தை விளக்க, உவமைகளையும் கையாள்கிறார்; மேற்கோள் தவறாமல் காட்டுகிறார்; மிக அருகியே ‘வந்துழிக் காண்க’ என்கிறார்; இதே இலக்கணக் கருத்தை இவரிவர் இவ்விவ்வாறு கூறியுளர் எனத் தெளிவுறுத்துகிறார்; அவ்வாறு கூறுதலிலும் நூற்பெயரையோ ஆசிரியர் பெயரையோ பெரும்பாலும் குறித்து விடுகிறார்; சில இடங்களில் ‘என்றார் பிறரும்’ என்றும், ‘கூறினார் ஆகலின்’ என்றும், ‘ஒருசார் ஆசிரியர்’ என்றும், ‘தொல்லாசிரியர்’ என்றும், ‘வடமொழி வழித் தமிழாசிரியர்’ என்றும் குறிக்கின்றார். காக்கை பாடினியார், சிறுகாக்கை பாடினியார், அவிநயனார், தொல்காப்பியனார், மயேச்சுரர் ஆகியோர் நூற்பாக்களை மிகுதியும் ஆள்கிறார். ஒரு நூற்பாவின் உரை முடிவில் அல்லது ஒரு பகுதியின் முடிவில் தாம் மேலே கூறிய இலக்கணச் செய்திகள் அனைத்தையும் உள்ளடக்கிய சில பல வெண்பாக்களைக் காட்டி, ‘‘இவற்றை விரித்து உரைத்துக் கொள்க’’ என அமைகின்றார். இத்தகைய செவ்விய நெறியில் செல்வது விருத்தியுரை.

  ‘‘எழுத்தசை சீர்தளை அடிதொடை தூக்கோ
டிழுக்கா நடைய தியாப்பெனப் படுமே’’

என்னும் முதல் நூற்பாவின்கண், ‘‘இவ்வேழு உறுப்பினும் தீர்ந்து யாப்பு உண்டோவெனின், இல்லை.