xLii
இடத்தில் சில பல வெண்பாக்களால் தொகுத்துக் கூறுகிறார். அதன்
பின்னர் ‘இவற்றை விரித்து உரைத்துக் கொள்க’ என்கிறார்.
இவ்வெண்பாக்கள் இன்ன நூலின வென்றாதல், இவர் பாடியன வென்றாதல்
குறிக்கப் பெற்றில. பிற நூல்களாலும் அறியப் பெற்றில. இவை இவ்வுரை
யாசிரியராலேயே யாக்கப் பெற்றிருக்கக் கூடும். இவ்வாறு இவ்வுரை யகத்துக்
காணப் பெறும் வெண்பாக்கள் நூற்றுக்கு மேலும் உள. பிற பாக்களும்
அருகிக் காணப் பெறுகின்றன. ஒரு சில இடங்களில் காரிகைப் பாடல்களைக்
காட்டி, ‘இக் காரிகையை விரித்துரைத்துக் கொள்க’ என்றும், ‘இவ்
யாப்பருங்கலப் புறநடையை விரித்துரைத்துக் கொள்க’ என்றும் வரும்
குறிப்புக்களால் இக் கருத்து வலியுறும்.
‘‘மிகப்பெரும்பாலான உதாரணப் பாடல்களை இவரே
(விருத்தியுரையாசிரியரே) செய்து அமைத்துக் கொண்டார் என்றும் கருதத்
தோன்றுகின்றது. நூலில் சொல்லப்பட்டு இவரால் உரையில் விளக்கப்
பெறுகிற அத்தனை இலக்கண விகற்பங்களுக்கும் பொருந்தக் கூடிய
பாடல்கள் முன்னே தோன்றியிருந்தன என்பது நம்பக் கூடியதாய் இல்லை’’
என்றும்,
‘‘இணைமோனை (முதலிய) ஏழு விகற்பமும் வருவதற்குக் காட்டிய
‘அணிமலர் அசோகின் தளிர்நலம்’ என்ற பாடலும், இணையெதுகை
(முதலிய) ஏழு விகற்பமும் வருவதற்குக் காட்டிய ‘பொன்னினன்ன பொறி
சுணங்கு’ என்ற பாடலும், உதாரணங்களாம். இவைபோலவே அறுபது
வஞ்சியுரிச்சீரும் வந்த பாட்டு என்று 73 அடிகளையுடைய நீண்ட
பாட்டொன்றைத் தருகிறார்; இது ‘நலஞ்செலத் தொலைந்த புலம்பொடு பழகி’
எனத் தொடங்கி, ‘கருங்கடல் நாடனொடு கலவா வூங்கே’ என்று முடிகிறது.
இதுவும் உரையாசிரியர் செய்து அமைத்த தென்றே கருத வேண்டும்;
இல்லையானால் இவருக்கென்று வஞ்சியுரிச்சீர் எல்லாம் வருமாறு
மற்றொருவர் ஒரு பாடல் பாடி அமைத்தல் நடைபெறுவதொன்றன்று. பல
பாட்டுக்களைக் காட்டுவதற்குப் பதிலாக ஒரே பாடலில் காட்டலாம் என்று
ஆசிரியரே செய்து காட்டியிருக்கிறார். தொடையோத்து உதாரணப் பாடல்கள்
அனைத்துமே இத்தகையன’
|