அடைகரை மாஅத்து

118. பாலை
அடைகரை மாஅத்து அலங்கு சினை பொலியத்
தளிர் கவின் எய்திய தண் நறும் பொதும்பில்,
சேவலொடு கெழீஇய செங் கண் இருங் குயில்
புகன்று எதிர் ஆலும் பூ மலி காலையும்,
5
'அகன்றோர்மன்ற நம் மறந்திசினோர்' என,
இணர் உறுபு, உடைவதன்தலையும் புணர்வினை
ஓவ மாக்கள் ஒள் அரக்கு ஊட்டிய
துகிலிகை அன்ன, துய்த் தலைப் பாதிரி
வால் இதழ் அலரி வண்டு பட ஏந்தி,
10
புது மலர் தெருவுதொறு நுவலும்
நொதுமலாட்டிக்கு நோம், என் நெஞ்சே!

பருவம் கண்டு ஆற்றாளாய தலைவி சொல்லியது.-பாலை பாடிய பெருங்கடுங்கோ