மணி கண்டன்ன

221. முல்லை
மணி கண்டன்ன மா நிறக் கருவிளை
ஒண் பூந் தோன்றியொடு தண் புதல் அணிய,
பொன் தொடர்ந்தன்ன தகைய நன் மலர்க்
கொன்றை ஒள் இணர் கோடுதொறும் தூங்க,
5
வம்பு விரித்தன்ன செம் புலப் புறவில்,
நீர் அணிப் பெரு வழி நீள் இடைப் போழ,
செல்க-பாக!-நின் செய்வினை நெடுந் தேர்:
விருந்து விருப்புறூஉம் பெருந் தோட் குறுமகள்,
மின் ஒளிர் அவிர் இழை நல் நகர் விளங்க,
10
நடை நாட் செய்த நவிலாச் சீறடிப்
பூங் கட் புதல்வன் உறங்குவயின் ஒல்கி,
'வந்தீக, எந்தை!' என்னும்
அம் தீம் கிளவி கேட்கம் நாமே.

வினை முற்றி மறுத்தராநின்ற தலைமகன் பாகற்குச் சொல்லியது.-இடைக்காடனார்