அன்றியும் இவர் பாடல்களால் நிலத்தின் தென்பாகத்தைக் கடல்கொண்ட தென்னும் பழஞ்செய்தியும் பாலைத் தயிராகத் தோய்த்தல் முதலியன இன்றியே அதிலிருந்து நெய்கடைந் தெடுத்தல் உண்டென்பதும் அப்பாலை நுகர்தலால் பயன் சிறிதுமில்லை யென்பது முதலாகிய அரிய செய்திகளும், ஆயர் மணஞ்செய்யுங் காலத்துப் பெண்ணெருமையின் கொம்பை வைத்து வழிபடுவரென்னும் பழைய மரபும், ஓரரசன் பிறவரசரை வென்று அவரிடத்தைக் கைப்பற்றியதற்கு அறிகுறியாகத் தன்கொடியை அவ்விடத்திற் பொறித்தலும் கடன் கொடுத்தவர் கடன் வாங்கினவருடைய பொருள்களை விசாரித்தலும் காணாமற்போன தம்பொருளை மறுபடி பெற்றவர் மகிழ்ச்சியுறுதலும் முதலானவை முன்பேயுள்ள வழக்கங்க ளென்பதும் அறியப்படுகின்றன. இவர் இந்நூலில் ஆயர் ஆய்ச்சியர் கூற்றாகவுள்ள இடத்து,
"மத்தம் பிணித்த கயிறுபோ னின்னலஞ் சுற்றிச் சுழலுமென் னெஞ்சு’’. (110) "கொடுந்தொழுவி னுட்பட்ட கன்றிற்குச் சூழுங் கடுஞ்சூலா நாகுபோ னிற்கண்டு நாளும் நடுங்கஞ ருற்றதென் னெஞ்சு’’. (110) "தொடீஇய செல்வார்த் துமித்தெதிர் மண்டுங் கடுவய நாகுபோ னோக்கித் தொடுவாயில் நீங்கிச் சினவுவாய்’’. (116) "கன்றுசேர்ந் தார்கட் கதவீற்றாச் சென்றாங்கு வன்கண்ண ளாய்’’ (116) "கனைபெய லேற்றிற் றலைசாய்த்து’’. (116) | என அவர் கூற்றுக்குத் தக அவர் இயல்பாக அறியும் பொருள்களை இவர் உவமையாகக் கூறியிருத்தல் மிக்க இன்பந் தருவதாகும். மற்றும் இவர் கூறும் உவமையும் அத்தகையதே. ஒருவர் பரபரப்புற்றுக் கையை உதறிக்கொண்டு வெளியே செல்வதற்கு,
"நெருப்புக்கை தொட்டவர் போல விதிர்த்திட்டு’’-என்றும், தாம் ஒளித்த பொருள் தம்மிடத்திருந்து வெளிப்பட்டதற்கு, "காணாமை யுண்ட கடுங்கள்ளை மெய்கூர நாணாது சென்று நடுங்க வுரைத்தாங்கு’’ | என்றும் வருவன முதலியவற்றை நோக்குக. இவர் பாடல்களில் சாமுத்திரிகா லக்ஷண நூற்செய்தியும் நிமித்த நூற்செய்தியும் ஆங்காங்குப் பல புராண கதைகளும் வந்துள்ளன. குடஞ்சுட்டு என்பது பசுவுக்குப் பெயராயும் வழக்கு வீழ்ந்தன என்னுஞ் சொற்களுள் ‘இதோளி’ என்பது முதனீண்டும் வந்திருக்கின்றன.
|