59

“ஆயுமறை மொழிநம்பி யாண்டார் நம்பி
     யருள்செய்த கலித்துறையந் தாதி தன்னைச்
சேயதிரு முறைகண்ட ராச ராச
     தேவர்,சிவா லயதேவர், முதலா யுள்ள
ஏயகருங் கடல்புடைசூ 1ழுலக மெல்லா
     மெடுத்தினிது பாராட்டிற்“ றென்ன, “வந்தத்
தூயகதை யடைவுபடச் சொல்வீ“ ரென்று
     சோழனுரை செயக்கேட்டுக், குன்றை வேந்தர்,
24
   
தில்லைவா ழந்தணரே முதற், பண் பாடு
     திருநீல கண்டத்துப் பாணரீறாச்,
சொல்லியதொண் டத்தொகைநூல் வகையந் தாதித்
     தொடர்ச்சியினை விரித்துரைக்க, வளவன் கேட்டு,
மெல்லியலாள் பங்கர்திரு வருளை நோக்கி,
     வியந், தடிமைத் தொண்டுசெய்து பேறு பெற்ற
செல்கதியை நினைந், துருகி, வளவர் கோமான்
     சேவையர்கா வலரைமுக நோக்கிச், சொல்வான்,
25
   
“அவரவர்கள் நா,டவர்க ளிருந்த வூர், வந்
     தவதரித்த திருமரபு, திருப்பேர், செய்த
சிவசமயத் திருத்தொண்டு, முற்பிற் பாடு,
     சிவனடிக்கீ ழுயர்பரம முத்தி பெற்றோர்,
எவருமறி யச்சீவன் முத்த ராயிங்
     கிருப்பவர்க, ளினிமேலும் பிறப்போர், மண்மேல்
அவர்களைச்சேர்ந் தருள்பெற்றோர், பகைத்துப் பெற்றோ,
     ரவர்கள்பகை யாய்நரகி லடைந்த பேர்கள்,
26
   
“இல்லறத்தி லிருந்துநனி முத்தி பெற்றோ,
     ரில்லறத்திற் சிற்றின்ப வியல்பை நீக்கி
நல்லறமாந் துறவறத்தி னின்று பெற்றோர்,
     நற்பிரம சாரிகளா யருள்பெற் றுய்ந்தோர்
செல்கதிசற் குருவருளாற் சென்று சேர்ந்தோர்,
     சிவபூசை செய்துபர முத்தி பெற்றோர்,
புல்லறிவு தவிர்ந்து திரு வேட மேமெய்ப்
     பொருளெனக்கொண் டரனடிக்கீழ்ப் பொருந்தப் புக்கோர்,
27
   
“இப்படியே யடைவுபடப் பிரித்துக் கேட்டால்
     யாவருக்கு மேதரிக்கச் செவிநா நீட்ட
வொப்பரிய பொருடெரிந்து விளங்கித் தோன்ற,
     வுவமையுடைத் தாயகதை கற்க, நிற்கத்
தப்பில்பெருங் காவியமா விரித்துச், செய்து
     தருவீ“ரென் றவர்க்குவிடை கொடுத்து, வேண்டுஞ்
செப்பரிய திரவியமுங் கொடுக்க, வாங்கிச்,
     சேக்கிழார் குரிசிறிருத் தில்லை சேர்ந்தார்.
28

     1 இங்கு உலகமெல்லாம் - என்றது அறிஞர் தொகுதியை உணர்த்திற்று.
உலகம் பசித்தது என்புழிப்போலப் பாராட்டிற்று என அஃறிணை முடிபு
கொண்டது.