பதிப்புரை
‘தென்பாண்டி நாட்டானே’ என்றும்,
‘பாண்டிநாடே பழம்பதியாகவும்’
என்றும், ‘தென்னாடுடைய சிவனே போற்றி’ என்றும் மணிமொழிப் பெருமான்
கூறியருளியபடி முழுமுதற் பொருளாய சிவபெருமான் பண்டுதொட்டுத்
தமக்குச் சிறப்பிடமாகக் கொண்ட பாண்டி வளநாட்டில் பல கலையொடு
தமிழ் வளர் மதுரையம்பதியிலே சோமசுந்தரக் கடவுள் உலகுய்யத் தமது
சத்தியைச் செலுத்தி அருளிய அறுபத்துநான்கு திரு விளையாடல்களை
எடுத்துக் கூறுவது பரஞ்சோதிமுனிவர் இயற்றி யருளிய இத்
திருவிளையாடற் புராணம்.
இதற்குத் தொல்காப்பியம்
இலக்கணமென்று கூறுப. இது சங்க
இலக்கியங்கள், திருமுறைகள், சைவசித்தாந்த சாத்திரங்கள் முதலியவற்றின்
அருங்கருத்துக்களை யுடையதாய், செந்தமி ழின்பம் பெருக்குவதாய்,
பத்திச்சுவை இனிது கனிந் தொழுகுவதாய், சொன்னயம், பொருணயம், பாநய
மிக்குடைய தாய், பெரிய புராணத்தைப் போலக் கயிறு சாத்தி உண்மை
யறிந்து வரும் வழக்கினை யுடையதாய் விளங்குகின்றது.
இதற்கு இரண்டு மூன்று உரைகள் முன்
வெளிவந்திருப்பினும் அப்
பதிப்புக்களில் ஒன்றேனும் இப்போது கிடைப்பதற் கில்லையாகலான்,
இதுபோது இவ்வுரைநூல் வெளிவரவேண்டியது இன்றியமையாததாயிற்று.
இதனை அச்சிடுவதற்கு மிகுதியான பொருள் வேண்டியிருத்தலான் இதனைத்
தொண்ணூற் றாறு பாகங்கள் கொண்ட தனிப் தனிப் பகுதிகளாக வெளியிடக்
கருதி முன் பணங் கேட்டு ஓர் அறிக்கை அனுப்பியதைக் கண்ணுற்று
இருநூறுபேர்களுக்குமேல் ஆறுபகுதிகளுக்கும், பன்னிரண்டு பகுதிகளுக்குமாக
முன்பணமனுப்பி யுதவினார்கள். அவர்களுடைய மொழிப்பற்றும் சமயப்பற்றும்
கருதி அவர்களுக்கு நன்றி செலுத்துங் கடப்பாடுடையோம். இந் நூலிலுள்ள
மதுரைக்காண்டம். கூடற்காண்டம், திருவாலவாய்க் காண்டம் என்னும் மூன்று
காண்டங்களையும் மூன்று தனிப் பகுதிகளாகக் கட்டடஞ் செய்து வெளியிடத்
தீர்மானித்து மதுரைக் காண்டத்தை முதற்கண் வெளியிடலானோம்.
|