நளவெண்பா

கொண்டு, பூவினும் சாந்தினும் புலால் மறைத்து யாக்கும் பொது நிலையினர். தமயந்தியோ அத்தகையா ளல்லள் ; இயற்கையழகே குடிகொண்டவள்; அழகுருவெல்லாம் அவளிடம் அடைக்கலமாக அடைந்தன ; இவளுக்கு அணி ஆடைகள் அழகு செய்யா ; இவளின் உடலுறுப்புக்களை அவைகள் சாரின், அவ் வணிமுதலியவைகளே அழகு பெறுவனவாம்,’ என, அரிய சொற் சித்திரத்தை அமைத்து, இன்புறக் காட்டுகின்றார். அது:

‘பூணுக் கழகளிக்கும் பொற்றொடி’ (சுயம்வர: 151)

என்பதாம். பிறாண்டும் இவர், அவள் தன் சிறப்பை,

‘வேலை பெறா அமுதம் வீமன் திருமடந்தை’ (சுயம்வர: 157)

எனப் பாராட்டுவர். கடலிற் பிறந்த அமிழ்து நாவுக்குமட்டும் சுவை தருவது ; அது, அஃறிணைப் பொருளான கடலிடைத் தோன்றியது ; அறிவற்றது. இவ் வமுது, நாவுக்குமட்டும் அன்று, கண் காது முதலிய ஏனைய நாற்புலன்கட்கும் சுவை விருந்தாக அமைவது ; ஆறறிவு படைத்த உயர்திணையாகிய மக்கட் குலத்தே தோன்றியது ; அறிவுமிக்கது என்பன முதலாம் நயங்கள் யாவும் ஒருங்கேதோன்ற மேற்குறித்த சொல்லோவியத்தால் தீட்டிக் காட்டினார்.

இன்னும் தமயந்தியின் கண் முதலிய உறுப்புக்களையெல்லாம் கற்பார் நெஞ்சம் களி நெடுங்கடவிற் குளிப்பக் காட்டும் அறிவுத் திறன் ஏனைய புலவர்கட்கு அமையாத வொன்றாம்.

‘இன்னுயிர்க்கு நேரே இளமுறுவல்’ (சுயம்வர : 164)

என, அவள்தன் பற்களின் சிறப்பையும்,

‘குழைமேலும் கோமான் உயிர்மேலும் கூந்தல்
மழைமேலும் வாளோடி மீள’ (சுயம்வர : 167)

என, அவள்தன் காது கூந்தல் கண்கள் முதலியவற்றின் இயற்கை யழகையும் கற்பவர் நெஞ்சக் கண்கள் கண்டு களிக்குமாறு உருவப்படமாக ஆக்கியுதவிய நம் புலவர் பெருமகனார் ஒட்பம், மலையினும் மாண உயர்ச்சி மிக்கதாக ஒளிர்தலை ஒர்க.

உலகில் எல்லா இன்பத்தினுஞ் சிறந்தது மக்களின்பம். ஏனைய இன்பங்களெல்லாம் தோன்றித்தோன்றி மறைய, இவ்வின்பம் ஒன்றுமட்டும் நிலைப்பதாயிற்று. இக் கருத்தானே எல்லாம் வல்ல இறையுருவை இளங் குழந்தையாக - மழலை ததும்பு மாண் குழவியாக - முருகனாகக்கொண்டு வழிபடுவாராயினர், எம் தமிழ்ப் பெருமக்கள். இக் குழந்தையின் சிறப்பை,