போவதில்லை !

காதலர் உறவுவெளிப்பட்டது. அவளை வீட்டில் அடைத்துப் போட்டனர். சுடுசோல் பொழிந்தனர். உறவினர் எல்லோரும் கடுகடுத்தனர். சில நாட்களுக்குப் பின்னர் அவள் வயலுக்குச் செல்லுகிறாள். அவன் அவளைப் பின் தொடருகிறான். அவள் பேசாமலேயே முன் செல்லுகிறாள். அவன் பேச்சுக் கொடுக்கிறான்; அவள் கடுகடுப்பாக 'என் முகத்தைப் பாராதே' என்று கூறுகிறாள். அவனோ அவளை விடுவதாக இல்லை. அவள் வேலை செய்யும் நேரமெல்லாம் வரப்பிலுள்ள கல்லின் மேல் உட்கார்ந்திருக்கிறான். கடைசியில் அவள் நிமிர்ந்து “ உன்னால் பகை உண்டாகிறது போய் விடு ” என்று சொல்லுகிறாள். அவனோ “என்ன பகையாகி விட்டாலும், உன்னை மணம் செய்து கொண்டுதான் ஊரைவிட்டுப் போவேன் ” என்று சத்தியாக்கிரகம் செய்கிறான்.

ஆண்: ஒத்தடிப் பாதையிலே
உன்னதமாப் போற புள்ளே
ஒன்பது வகைப் பூத்தாரேன்
என் முகத்தைப் பாரேண்டி
பெண்: பார்த்தனடா உன் முகத்தை
பகைச்சனடா என் ஜனத்தை
கேட்டனடா உன்னாலே
கேளாத கேள்வியெல்லாம்
கல்லோரம் காத்திருக்கும்
கருத்தக் கொண்டை சிவத்தச்சாமி
ஏனையா காத்திருக்கே?
ஏகப்பகை ஆகுதையா !
ஆண் : ஏகப்பகை ஆனாலென்ன?
எதிராளி வந்தாலென்ன?
உன்னை மணம் செய்யாமல்
ஊரை விட்டுப் போவதில்லை

 

சேகரித்தவர்:
S.S. போத்தையா

இடம்:
தங்கம்மாள்புரம்.