முறைப்பாட்டு

உன்னாலே நான் கெட்டேன்

கீழ்வரும் சிறிய பாட்டு சேலம் மாவட்டத்தில் பாடப்படுகிறது.

ஆண் : ஒரு கரண்டி முளகு தாரேண்டி
ராசாத்தி, ராசா மகளே
ரத்தினக் கிளியே, முத்துக்கண்ணே
ரவிக்கை யோடு சீல தாரேண்டி
பெண் : குடுத்தாலும் வாங்க மாட்டண்டா
மாமங்கு சின்னத்தம்பி
மாதளங்காப் பேச்சுக்காரா
உன்னாலே நானும் கெட்டேண்டா

மதினி

முறை மாப்பிள்ளை தனது வயதுக்கு மூத்த முறைப் பெண்ணைக் கேலி செய்து பாடுகிறான். இது தூத்துக்குடியருகில் பாடப்படுவது.

புங்கங் குளத்து மதினி
கஞ்சி குடிப்பாளாம்
கண்ணாடி பாப்பாளாம்
ஆட்டுத்தலை போல
கொண்டை முடிவாளாம்
ஆவரைப் பூப்போல்
மஞ்ச குளிப்பாளாம்
மச்சானைக் கண்டா
மயங்கி நடப்பாளாம்
கொழுந்தனைக் கண்டா
குலுக்கி நடப்பாளாம்

சேகரித்தவர் :
M.P.M. ராஜவேலு

இடம் :
மீளவிட்டான்,தூத்துக்குடி வட்டம்,
நெல்லை மாவட்டம்