முறை மாப்பிள்ளே

தமிழ் நாட்டில் திருமண முறைகளின் வளர்ச்சி சமூக மாறுதல்களை ஒட்டியே நிகழ்ந்திருக்கிறது என்பதை நமது இலக்கியங்களும், புராதனக் கதைகளும் மறைந்து போன சமுதாயங்களின் எச்சமாக நிலைத்து நிலவும் சடங்குகளும் பழக்கவழக்கங்களும் காட்டுகின்றன.

வரன்முறையற்ற குழு-மணமுறை தமிழ் நாட்டில் இருந்தது என்று காட்ட ஆதாரங்கள் இல்லை. ஆனால் உறவுப் பெயர்களில் சில அப்பா, சிற்றப்பா, பெரியப்பா, அம்மா, பெரியம்மா, சித்தி ஆகியனவும், கணவனது சகோதரர்களை மைத்துனன், கொழுந்தன் என்று அழைப்பதுவும் இம் மணமுறையின் எச்சங்களாக தோன்றுகின்றன, இது சொத்துரிமை தோன்றுமுன் கூட்டங்களாக வாழ்ந்து வேட்டையாடி வந்த மக்களது மணமுறையாகும்.

வேட்டையாடியும், புன்செய்ப் பயிர் செய்தும் வாழ்ந்த சிறு குடியினர் களவும், கற்புமாகிய ஒருதார மணத்தைக் கொண்டிருந்தனர். வேட்டையை ஆண் மக்களும், பயிர்த் தொழிலைப் பெண் மக்களும் நடத்தினர். இருவரும் சமூக உற்பத்தியில் பங்கு கொண்டனர். இருவருக்கும் ஏறக்குறைய சமமான உரிமைகள் இருந்தன.

விலங்குகளைப் பழக்கி உழவுக்கும், பால் முதலிய உணவுப் பொருள்கள் பெறவும் பயன்படுத்த மனிதன் கற்றுக் கொண்டான். மாடுகளைப் பழக்கத் தெரிந்த வலிமை மிக்கவன் சமூகத்திற்கு மிகவும் அவசியமானவன். எனவே பெண்கள் மாட்டை எதிர்த்து வெற்றி கொள்ளுபவனையே மணந்து கொள்ள விரும்புவார்கள். ஒருவனே பலரை மணந்து கொள்வும் கூடும். கிருஷ்ணன், கோபியர் கதை இவ்வளர்ச்சிக் கட்டத்திலிருந்த சிறு குடியினரிடையே தோன்றியதே. இம்முறைகளில் ஒரே தொழில் செய்பவரிடையே மணம் நடைபெறுவதில்தடை அதிகமில்லை. நிரை காப்பவனாதலால் நாலைந்து பெண்களை மணம் செய்து கொண்டு அவர்கள் கொண்டு வரும் பசு நிரைகளைக் காத்து பெருக வைத்துப் பெருமையடைவான்.