நம்ம துரை

ஆங்கிலேயர்கள் நமது நாட்டிற்கு வந்த புதிதில் தமது வியாபார ஸ்தலங்களில் தமிழ் தொழிலாளர்களைக் கூலி வேலைக்கமர்த்தினார்கள். நமது பழக்க வழக்கங்களையும் அவரது பழக்க வழக்கங்களையும், ஒரு தொழிலாளி உற்று நோக்கினான். அவன் காணும் வேறுபாடுகளை வரிசைப்படுத்திச் சொல்லுகிறான். இப்பாடல் கார் போன்ற வாகனங்கள் பழக்கத்துக்கு வருமுன் பாடப்பட்டிருக்க வேண்டும்! அது மட்டுமல்ல; கத்தி, கொடுவாளை எதிர்த்து துப்பாக்கி கொண்டு துரைகள் சண்டை செய்தார்கள் என்ற செய்தி ஆங்கிலேயர்கள் ஆட்சி ஏற்படுவதற்கு முன்னால் இப்பாடல்களின் “ கருத்துக்கள் தோன்றியிருக்கின்றன“ என்று காட்டுகிறது. ஆனால் முதலில்பாடப்பட்டதிலிருந்து இப்பாடல் சில மாறுபாடுகளோடு காணப்படலாம். பின்னால் வரும் வழக்கங்கள் முன்பு பாடப்பட்ட பாடல்களில் புகுத்தப்படுவது நாட்டுப் பாடல்களின் மரபுக்கு உகந்ததே!

தண்ணிமேலே கப்பலோட்டும்-ஏ தங்கம்
தந்திரமா நம்ம துரை-ஏ தங்கம்
அலை மேலே கப்பலோட்டும்-ஏ தங்கம்
அறிவுள்ள நம்ம துரை-ஏ தங்கம்
இரும்புக் குறிச்சிகளாம்-ஏ தங்கம்
இங்கிலீசு புஸ்தகமாம்-ஏ தங்கம்
இருந்து கணக்கெழுதும்-ஏ தங்கம்
இன்ப முள்ள நம்ம துரை-ஏ தங்கம்
அல்லாரும் எழுதும் பேனா-ஏ தங்கம்
அந்தப் பேனா, இந்தப் பேனா-ஏ தங்கம்
நம்ம துரை எழுதும் பேனா-ஏ தங்கம்
சரியான தங்கப் பேனா-ஏ தங்கம்
அல்லாரும் குடிக்குந் தண்ணி-ஏ தங்கம்
ஆத்துத் தண்ணி ஊத்துத் தண்ணி-ஏ தங்கம்
நம்ம துரை குடிக்குந் தண்ணி-ஏ தங்கம்
காரமான கள்ளுத்தண்ணி-ஏ தங்கம்
அல்லாறும் ஏறும் வண்டி-ஏ தங்கம்
கட்ட வண்டி மொட்ட வண்டி-ஏ தங்கம்
நம்ம துரை ஏறும் வண்டி-ஏ தங்கம்
சரியான கோச்சு வண்டி-ஏ தங்கம்
எல்லோரும் சண்டை செஞ்சா-ஏ தங்கம்
கத்தி வரும் கொடுவா வரும்-ஏ தங்கம்
நம்ம துரை சண்டை செஞ்சா-ஏ தங்கம்
தலைக்கு மேலே பாணம் வரும்-ஏ தங்கம்
சாரி சவுக்கு குதிரை-ஏ தங்கம்
சவாரி போர குதிரை-ஏ தங்கம்
பூக் குதிரை மேலே ஏறும்-ஏ தங்கம்
பொன்னு முடி நம்ம துரை-ஏ தங்கம்


சேகரித்தவர் :
கவிஞர் சடையப்பன்

இடம் :
சக்கிலிப்பட்டி,
அரூர்,தருமபுரி மாவட்டம்.