களை எடுத்தல்-1

நடுகையைப் போலவே களை எடுத்தலும் பெண்களின் வேலையாகும். பயிரைப் போலவே தோன்றும் களைகளைக் கூர்ந்து நோக்கிப் பிடுங்கியெடுக்க வேண்டும். சற்று அயர்ந்தால் களைக்குப் பதில் பயிர் கையோடு வந்து விடும். களை எடுத்தலும் நடுகையைப் போலவே சலிப்புத் தரும் வேலை. சலிப்புத் தோன்றாமலிருக்க வயல் வரப்பிலுள்ள ஆண்களும் வயலில் களை எடுக்கும் பெண்களும் சேர்ந்து பாடுவார்கள்.

வாய்க்கால் வரப்பு சாமி
வயக் காட்டுப் பொன்னு சாமி,
களை எடுக்கும் பெண்களுக்கு
காவலுக்கு வந்த சாமி,
மலையோரம் கெணறு வெட்டி
மயிலைக் காளை ரெண்டு கட்டி
அத்தை மகன் ஓட்டும் தண்ணி
அத்தனையும் சர்க்கரையே

உதவியவர்: பொன்னுசாமி
சேகரித்தவர்: கு. சின்னப்ப பாரதி

இடம்:
ஒலப்பாளையம்.

களை எடுத்தல்-2

களை யெடுக்கும் பெரிய குளம்
கணக்கெழுதும் ஆலமரம்
கொத்தளக்கும் கொட்டாரம்
குணமயிலைக் காணலியே

சேகரித்தவர்:
S.M. கார்க்கி

இடம்:
சிவகிரி.