களை எடுத்தல்-3

களை யெடுக்கும் பெரிய குளம்
கணக் கெழுதும் ஆலமரம்
கொத்தடிக்கும் கொட்டாரம்
கூறு வைக்கும் களத்து மேடு
கண்ணாடி வளையல் போட்டு
களை எடுக்க வந்த புள்ளே
கண்ணாடி மின்னலிலே
களை எடுப்புப் பிந்துதடி
வெள்ளிப் புடி வளையல்-நல்ல
விடலைப் பிள்ளை கை வளையல்
சொல்லி அடிச்சவளை-நல்லா
சுழட்டு தில்ல நெல்களையை

உதவியவர்: முத்துசாமி
சேகரித்தவர்: கு. சின்னப்ப பாரதி

இடம்:
வாழ்நாய்க்கன் பாளையம்.
சேலம்.

களை எடுத்தல்-4

களை எடுத்துக் கை கழுவி
கரை வழியா போற புள்ளா
பரிசம் கொடுத்த மாப்பிள்ளைக்கு
பால் குடம் கொண்டு போறியா

சேகரித்தவர்:
M.P.M. ராஜவேலு

இடம்:
மீளவிட்டான்,தூத்துக்குடி,
நெல்லை மாவட்டம்.