பாதி நாள் வாழவில்லை

பாலூத்திப் பாத்தி கட்டி
பாக்குமரம் உண்டாக்கி
பாக்கும் தழையிலையே
பாதி நாள் வாழலையே
நெய்யூத்திப் பாத்தி கட்டி
நெல்லி மரம் உண்டாக்கி
நெல்லியும் தழையலியே-நான்
நிண்ணொரு நாள் வாழலியே
ஒப்புத் தெரியலிண்ணு
கொப்பு நிறுத்தி வச்சேன்
கொப்பைத் திருப்ப எனக்கு ஒரு
கோடை மழை யெயலியே
சீரகம் பூப்பூக்கும்
செடி முறிக்கி பிஞ்செறங்கும்
சீராளன் இல்லாம-நான்
செடியோட வாடுதனே
கொத்தமல்லி பூ பூக்கும்
கொடி முறுக்கிப் பிஞ்செறங்கும்
கூர் வாளன் இல்லாமே-நான்
கொடியோடு வாடுதனே !
லோட்டா வௌக்கி வச்சு
ரோசாப்பூ உள்ளடச்சேன்
ரோசாப்பூ கவுந்ததென்ன?-நான்
ரோசாப்பூ வாடுதனே
செம்பு விளக்கி வச்சு
செம்பகப்பூ உள்ளடச்சு
செம்பு கவுந்ததென்ன?-நான்
செம்பகப்பூ வாடுதனே !

கொழுந்தி வருவதில்லை

வெள்ளிரியும் பாவையும்
விதைச்சேன் ஒரு பாத்தி
வீமனோட தங்கையல்லோ-
வெறுத்தாள் பிறந்தெடத்த
உளுத்தம் பயிரறியேன்
உச்சிப் பயிர் நானறியேன்
ஊரார் சொல் வார்த்தைக்கு
உயிர் வச்சு நானறியேன்
பச்சைக் குருத்தோலை
பகவான் அழைச்சானோ?
எட்டுக் குருத்தோலை-ஐயா உன்னை
எமன் அழைச்சானோ?
செத்தையின்னு சேதி கொண்டு
சீதைக்கு ஆளு விட்டு
சவத்தத் தூக்கு மின்னே-என் ஐயா
சீதையுமே வந்தாளே
சிந்தாமக் குத்தி
சிதறிப் பொரி பொறிச்சு
சீதை அழுது வந்தா
சிறு மண்டபங்கள் ஓசையிட

வட்டார வழக்கு: தெஷிணை-தென்மாவட்டங்கள் ; உருமி-உடுக்கை போன்ற ஒரு தோல் கருவி.

குறிப்பு: தகப்பன் இறந்தால் பல சாதியினர் மொட்டையடித்துக் கொள்ளுவார்கள். கருமம் மூத்த மகன் செய்ய இளைய மக்கள் உதவி செய்வார்கள்.

பாதுகாவலனாக இருந்த ‘சீராளன்’, ‘கூர்வாளன்’ மாய்ந்து விட்டான். சீரகம், கொத்தமல்லி ஆகிய இளஞ்செடிகள் கணவனையிழந்தவளுக்கு உவமை. ஊரார் சொல் வார்த்தை-தங்கை அண்ணன் இருவரிடையே சண்டை மூட்டி விட்டவள்தான் என்ற பழிச்சொல்.

தென்னங் குருத்தோலையை முடைந்து அதில் பிணத்தைக் கிடத்தி பாடையுடன் தூக்கிச் செல்லுவார்கள். நெல்பொரி பொரித்து அதனை பிணத்தைத் தூக்கிச் செல்லும் வழியில் காசோடு கலந்து வாரி இறைப்பர். இன்றும் நம் தமிழகத்தில் சில பகுதிகளில் நடந்து வருகிறது.

சேகரித்தவர்:
S.M. கார்க்கி

இடம்:
சிவகிரி,நெல்லை.