|
அரண்மனையைப் பார்க்கலையே
தந்தை இறந்த செய்தி கேட்டு மகள் பிறந்த வீட்டிற்கு வந்தாள்.
அவளை அயலூரில் மணம் செய்து கொடுத்த பிறகு பல ஆண்டுகளுக்குப் பிறகு தந்தையின் சாவிற்காகத்தான்
தாய் வீட்டுக்கு வந்தாள். அவளுடைய கல்யாணத்தின் போது பேசிய வரதட்சிணை கொடுக்க
முடியாததால், அவளைப் பிறந்த வீட்டிற்குப் போக கணவன் அனுமதிக்கவில்லை. அவ்வாறு பணம்
கொடுக்க முடியாதவர்கள் தன்னை ஏன் மணம் செய்து கொடுக்க வேண்டும் என்று வருந்தி அழுகிறாள்.
ஆத்துக்கும் அந்தாண்டே-நீ
பெத்த
அல்லியை
ஏங் கொடுத்த?
ஆனைக்கு
தினி கட்டி
அடி கொளம்பு
லாடம் கட்டி
ஆத்தங்கரை
வந்து நிண்ணன்
ஆத்தங்கரை
செம்படவன்
ஆறு லட்சம்
கேட்டானோ
ஆறு லட்சம்
இல்லாத-எங்கப்பன் வீட்டு
அரண்மனையைப்
பார்க்கலையோ
கொளத்துக்கும்
அந்தாண்ட-நீ பெத்த
குயிலாளை
ஏங் கொடுத்தே?
குதிரைக்கு
தீனி கட்டி
கொன கொளம்பு
லாடங்கட்டி
கொளத்தங்கரை
வந்து நிண்ணா
கொளத்தங்கரை
செம்படவன்
கோடி பணம்
கேட்டானே
கோடி பணம் இல்லாத-எங்கப்பன் வீட்டு
கோட்டை போய் பார்க்கலையே
|
சேகரித்தவர்
:
கவிஞர் சடையப்பன் |
இடம்:
அருர்,
தருமபுரி மாவட்டம். |
|