பக்கம் எண்: - 340 -

            சாதி நூறு சொல்லுவாய் போ போ போ
                தருமம் ஒன்று இயற்றிலாய் போ போ போ
           நீதி நூறு சொல்லுவாய் கா சொன்று
                நீட்டினால் வணங்குவாய் போ போ போ.

குறைகள் நீங்கிப் புதிய சமுதாயத்தை வா வா வா என்று வரவேற்று மகிழ்கிறார்:

           ஒளி படைத்த கண்ணினாய் வா வா வா
                உறுதி கொண்ட நெஞ்சினாய் வா வா வா
           தெளிவு பெற்ற மதியினாய் வா வா வா
                சிறுமை கண்டு பொங்குவாய் வா வா வா.

வறுமையும் ஆடம்பரமும் மாறிமாறிக் காணும் காட்சி மாறிப் பொருளாதார சமத்துவம் நிலைத்த நல்ல நிலை வரவேண்டும் என்று ஆசைப்பட்டவர் பாரதியார். அந்த ஆசைக்கு அழகான கவிதை வடிவம் கொடுத்து உணர்ச்சியோடு பாடியுள்ளார்:

            மனிதர் உணவை மனிதர் பறிக்கும்
                வழக்கம் இனி உண்டோ?
           மனிதர் நோக மனிதர் பார்க்கும்
                வாழ்க்கை இனி உண்டோ - புவியில்

           வாழ்க்கை இனி உண்டோ - நம்மில் அந்த
                வாழ்க்கை இனி உண்டோ?
           இனிஒரு விதி செய்வோம் - அதை
                எந்த நாளும் காப்போம்

           தனிஒரு வனுக்கு உணவிலை எனில்
                ஜகத்தினை அழித்திடுவோம்
           எல்லாரும் ஓர்குலம் எல்லாரும் ஓர்இனம்
                எல்லாரும் இந்தியா மக்கள்

           எல்லாரும் ஓர்நிறை எல்லாரும் ஓர்விலை
                எல்லாரும் இந்நாட்டு மன்னர் - நாம்
           எல்லாரும் இந்நாட்டு மன்னர் - ஆம்
                எல்லாரும் இந்நாட்டு மன்னர்.

‘விடுதலை’ என்ற பாட்டிலும் இந்தக் கருத்தை வற்புறுத்தியுள்ளார். நாட்டு விடுதலை என்றால், நாட்டுமக்களின் பொருளாதார சமத்துவமாகவும் அதை அவர் காண விரும்பினார் என்பது அந்தப் பாட்டால் தெளிவாகிறது.

            ஏழை என்றும் அடிமை என்றும்
                எவனும் இல்லை ஜாதியில்
           இழிவு கொண்ட மனிதர் என்பது
                இந்தியாவில் இல்லையே.