பக்கம் எண்: - 362 -

நிரம்பிய பாடல்கள் எழுதுபவர். இசைநயம் உள்ள பாடல்கள் பல அவருடைய கவிதை நூல்களில் உள்ளவை. ‘இளவேனில்’, ‘வெண்ணிலா’, ‘பொருநைக் கரையிலே’, ‘தாரகை’ என்பவை அவருடைய சிறந்த நூல்கள்.

சந்தம் நிறைந்த பாடல்கள் தமிழழகனுடைய படைப்புகள். அவர் பெயரால் கவிதைத் தொகுப்பு ஒன்று உள்ளது. ‘கலைச் செல்வி’, ‘அன்னையின் கூத்து’, ‘பிறை நிலா’ என்பன ஒலிநயம் மிகுந்தவை.

இசைக்கலையில் வல்ல அறிஞர்கள் போற்றும் கலைவடிவில் இசைப்பாடல்கள் பல இயற்றியதோடு, கவிதைகளும் இயற்றித் தந்துள்ளார் பெ. தூரன். அவருடைய நடையில் எளிமையும் இனிமையும் காணலாம், ‘இளந்தமிழா’ என்ற கவிதைத்தொகுப்பு குறிப்பிடத்தக்கது. நாட்டு நிகழ்ச்சிகள் பலவும் வரலாற்றுக் கதைகளும் அவர்தம் பாடல்களில் வடித்துக்கொடுக்கப்பட்டுள்ளன.

கொத்தமங்கலம் சுப்புவின் பாடல்கள் தனி வகையானவை. நாட்டுப் பாடல்களின் மெட்டுகளைப் பின்பற்றி, நாட்டின் பெரிய நிகழ்ச்சிகளை எல்லாம் சுவையாகப் பாடியவர் அவர். போர், பஞ்சம், வெள்ளம் முதலியவற்றுள் எதுவாக இருந்தாலும், நிகழ்ச்சிகள் எல்லாம் பாட்டாக மலர்ந்துவிடும். நாட்டுப் பாடல்கள் போலவே, கிராமத்து மக்களின் எளிய தமிழில், கொச்சைப் பேச்சுமொழியில் பாடல்கள் அமைந்துவிடும். காந்தியடிகளின் வரலாற்றைக் ‘காந்திமகான் கதை’ என்ற பெயரால் பாடி, அந்தப் பாடல்களை அவரே பல ஆண்டுகள் பல அமைப்புகளில் பல மேடைகளில் பாடிக் கேட்போரை மகிழ்வித்தார்.

புரட்சிக் கவிஞர் பாரதிதாசனைப் பின்பற்றிப் புதிய சமுதாய அமைப்புக்குத் தேவையான கருத்துகள் கொண்ட பாடல்களை பாடி வருபவர் கவிஞர் சுரதா. பாரதிதாசனைப்போல் சீர்திருத்த ஆர்வம் மிகுந்தவர். அவர் பாடல்களில் வரும் சிறந்த உவமைகள் பலவற்றைச் சுவைத்தவர்கள் அவரை ‘உவமைக் கவிஞர்’ என்று பாராட்டத் தவறுவதில்லை. ‘தேன்மழை’ என்பது அவருடைய சிறந்த கவிதைகளின் தொகுப்பு. இயற்கைக் காட்சிகளை அழகிய சொல்லோவியமாக்கிக் காட்டுவதிலும், உணர்ச்சிகளை நயம்பெற உரைப்பதிலும் வல்லவர் அவர். வேகம் மிகுந்த நடையில் ஆற்றல் உள்ள கற்பனைகளை அமைத்துப் புதுவகைக் கவிதைகள் இயற்றியுள்ளார் கலைஞர் கருணாநிதி. சேதுராமன், ரகுமான், சுந்தரம் முதலிய கவிஞர் பலர் புதிய புதிய கருத்துகளுக்கும் உணர்ச்சிகளுக்கும் கவிதைகளைப் பயன்படுத்தி அழகிய படைப்புகளை அளித்துள்ளனர்.

வேழவேந்தன், தங்கவேலன் ஆகியோர் சிறந்த கவிதைகள் பல படைத்தளித்து இன்றைய இளந் தலைமுறையினருள் முன்னணியில் நிற்பவர்கள். இன்றைய இளங் கவிஞர்கள் பலருடைய பாடல்களுள்