xxxi பதிப்பாசிரியர் உரை
காதை என்று வரும் பகுதிகளில் எல்லாம் ஆரியச் செல்வாக்கே காணப்படுகின்றது. "மாமுது பார்ப்பான் மறைவழி காட்டிட"க் கோவலன் கண்ணகி திருமணம் நடந்தது என்று சிலப்பதிகாரத்தில்தான் முதல்முதல் சொல்லப்படுகின்றது.
கண்ணகிக்குத் தோழி தேவந்தி என்னும் பார்ப்பனத்தி; ஆரியப் பண்பாட்டைக் கண்ணகியிடம் புகுத்தப் பார்த்தாள். கண்ணகியோ நாகரிகமாக, அதனை மறுத்து ஒதுங்கினாள்.
இமயத்தில் கல்லெடுத்து, கங்கையில் நீராட்டி, கனகவிசயர் தலையில் சுமத்திக் கொண்டுவந்த கல்லில் கண்ணகிக்குப் படிமை அமைத்துக் கட்டிய கோயிலில் இவளே முதல் பூசாரினியாகச் செங்குட்டுவனால் அமர்த்தப் பட்டாள்.

மாடல மறையோன் செல்வாக்குச் சிலம்பு முழுதும் திகழ்கின்றது. கோவலன் செய்த நற்செயல்கள் எல்லாம் பார்ப்பனர்க்கே. அதனால் மாடலன் அவனைக் ‘கருணை மறவ‘, ‘செல்லாச் செல்வ‘, ‘இல்லோர் செம்மல்‘ என ஏத்திப் புகழ்ந்தான்.

கோவலனை அறியாது கொன்ற நெடுஞ்செழியன் ஆரியப்படையை வென்றவன்; பார்ப்பனர்க்குக் களைகணாய்த் திகழ்ந்த கோவலனைக் கொன்றவன்; திருட்டுப் பொருள் சேர்த்தான் என்று பிறர் தெரிவிக்க வார்த்திகன் என்னும் பார்ப்பனனைச் சிறையிட்டான். இதனால் ஐயை கோயில் பூசாரி கோயிலைப் பூட்டினான்; பார்ப்பனார் போராடினர். இறுதியில் பாண்டியன் பணிந்து வார்த்திகனைச் சிறைவீடு செய்தான்; அவன் காலில் விழுந்து வணங்கினான் பாண்டியன்; தங்கால் என்னும் ஊரொடு பரிசில் பல வழங்கினான். இருந்தும் பார்ப்பனர் சினம் தணியவில்லை.

கோவலன் கொலையுண்டபின் கண்ணகி மதுரையை எரித்தாள் என்று சிலம்பு குறிப்பிடும். ஆரியர்மீது படையெடுத்து அவரை வென்றமையாலும், வார்த்திகனைச் சிறையிட்டதாலும், தங்களுக்கு நல்லன செய்த கோவலனைக் கொன்றதாலும் கண்ணகி மதுரைக்குத் தீயிட்டாள் என்னும் காரணத்தைக் கொண்டு மதுரை நகரை எரித்து அழித்தனர் பார்ப்பனர்.
பல்லவர் காலத்தில் தமிழகத்தில் பத்தி இயக்கம் தலையெடுத்தது. இதனால் தமிழும் வளர்ந்தது; சமயமும் வளர்ந்தது. பல சாதிகளைச் சார்ந்தவர்களும் நாயன்மார், ஆழ்வார் கூட்டத்தில் உண்டு.
நந்தனார் என்னும் தாழ்த்தப்பட்டவர் அறுபத்துமூன்று நாயன்மார்களுள் ஒருவர். தில்லைக் கோயிலுள் நுழைந்து வழிபடத் தில்லைவாழ் அந்தணர் தடுத்தனர்; தீயிட்டுக் கொளுத்தியும் கொன்றனர்.