பின்னர் அந்த அந்தஸ்து இயற்கையாகவே மறைந்து ,விடுதலைக்கு முன்னும் பின்னும் தோன்றிய அரசியல் கட்சிகளிலே ஒன்று என்று சொல்லத்தக்க நிலையை காங்கிரஸ் அடைந்து விட்டது. இது, ஜன நாயக நெறிப்படி ஏற்பட்ட மாறுதலாகும். இந்திய விடுதலைப் போராட்டம் வெற்றிகரமான முடிவை அடைந்த போதே , அகில இந்திய தேசிய காங்கிரஸ் மகாசபை கலைக்கப் பட்டிருக்கு மானால்,அதன்அறுபத்தைந்தாண்டைய புனித வரலாறு கட்சி வேற்றுமையின்றி இந்தியர் அனைவராலும் போற்றப்படும் நிலைமை இதற்குள் உருவாகியிருக்கும். காந்தியடி களும் இதையே விரும்பினார். தமது விருப்பத்தை வெளிப்படையாக 'அரிஜன்' பத்திரிகையிலும் எழுதினார் . காங்கிரஸ் மகாசபையைக் கலைப் பதற்கான தீர்மானத்தின் நகலையும் தயாரித்து வைத்திருந்த நேரத்தில் அடிகளாரின் வாழ்க்கை முடிந்தது . அதனால் , நாடு விடுதலை பெற்ற காலத்திலேயே கலைக்கப்பட்டிருக்க வேண்டிய காங்கிரஸ் மகாசபை,ஒரு கட்சி என்று சொல்லத்தக்க நிலைக்குத் தன்னைத் தாழ்த்திக் கொண்டு ,பிற கட்சிகளோடு போட்டியையும் , போராட்டத்தையும் நடத்திக் கொண்டு உயிர் வாழ்ந்து வருகின்றது.இதனால், பழைய இந்திய தேசியகாங்கிரஸ் மகாசபையின் புனிதமான வரலாறு கட்சிப் பூசலால் புறக்கணிக்கப் பட்டு வரும் நிலையையும் பார்த்து வருகிறோம். காங்கிரஸ் மகா சபையின் தியாக வரலாற்றை உருவாக்கு வதிலே பங்கு பெற்ற தியாகிகளிலேயும் பலர்-இன்று காங்கிரசுக்கு வெளியே உள்ளவர்கள் - அந்த வீர வரலாற்றை எழுச்சியுடன் எடுத்துச் சொல்வதற்கான மனப்பான்மையைப் பெற்றிருக்கவில்லை. இத்தகைய ஒரு சூழ்நிலையில்தான் "விடுதலைப்போரில் தமிழ் வளர்ந்த வரலாறு" என்னும் இந்நூலை யான் மக்கள் மத்தியில் கொண்டு வந்துள்ளேன். நான் இன்றைய காங்கிரசில் அங்கம் பெற்றிருக்கவில்லை என்பதோடு, அதனை முன்னின்று நடத்துவாரின் நல்லெண்ணத்தையேனும் பெற்றிருக் கிறேனா என்பதும் ஐயப்பாடே . ஆயினும் , விடுதலைக்கு முன்பிருந்த காங்கிரசிடம் இன்னமும் பக்தியும் பாசமும் எனக்கு இருந்து வருகின்றன. அதனால் , அந்த மகாசபையைச் சார்ந்திருந்தவர்கள் விடுதலைப் போராட்ட காலத்தில் தமிழ்மொழியின் வளர்ச்சிக்கு ஆற்றியுள்ள அருந்தொண்டுகளைத் தொகுத்து நூல்வடிவில் தந்துள்ளேன். ஒரு சரித்திர ஆசிரியனுக்குத் தேவைப் படும் நடுநிலை உள்ளத்துடனேயே இந்நூலை எழுதியிருக்கிறேன் |