என்பதனை உறுதியாக நான் சொல்லமுடியும். கட்சிக் காழ்ப்புக்கு சிறிதேனும் இடந்தராத வகையில் எனது எழுதுகோலைப் பயன் படுத்தியுள்ளேன். இன்றைய காங்கிரஸ் கட்சியானது பிற கட்சிகளுடன் நடத்தி வரும் போட்டி - போராட்டம் காரணமாக , அதன் கடந்தகாலப் புனித வரலாறு மறக்கப்பட்டோ , மறைக்கப்பட்டோவிடுமானால், அது இந்தியாவுக்கும் தமிழர் இனத்துக்கும் ஏற்பட்ட பெரும் இழப்பாக முடியும் என்பது என் கருத்து.அந்த இழப்பு ஏற்படக் கூடாது என்பதற்காகவே, 'கப்பலோட்டிய தமிழன்', 'சுதந்திரப் போரில் தமிழகம்' , 'தமிழர் கண்ட காந்தி' என்னும் நூற்களை ஏற்கனவே வெளியிட்டுள்ளேன் . அவற்றின் தொடர்ச்சியாகவே இந்த நூல் வெளி வருகின்றது. இன்னும் பல நூல்களையும் வெளியிட எண்ணியுள்ளேன். தமிழ் மொழியை வளர்த்த பெருமையிலே, இன்றுள்ள அரசியல் கட்சிகளிலே எந்த ஒரு கட்சிக்கும் தனிவுரிமை இருப்பதாக நான் நம்பவில்லை என்பதனை இங்கு அழுத்தந்திருத்தமாக எடுத்துக்காட்ட விரும்புகின்றேன் . ஆம் ; என் தலைமையின் கீழ் இயங்குகின்ற - தமிழ்மொழியை வளர்ப்பதற்கென்றே வாழ்ந்து வருகின்ற - தமிழரசுக் கழகத்தையும் நினைவில் கொண்டே இதனைக் கூறுகின்றேன். தமிழ்மொழியை வளர்க்கும் பணி அம்மொழி தோன்றிய காலந்தொட்டே தொடர்ந்து நடந்து வருகின்றது . அதிலே கடவுளுக்கும் பங்குண்டு என்பது பண்டைப் புலவர் பெருமக்களின் நம்பிக்கை. சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்தனர் பாண்டிய வேந்தர்கள். தொல்காப்பியருக்கு முந்திய காலத்தைப் பற்றி எதுவும் தெரியவில்லை. ஆனால், தொல்காப்பியர் காலந்தொட்டு , மகாகவி சுப்பிரமணிய பாரதியார் காலம்வரை தமிழிலே திருக்குறள் , சிலப்பதிகாரம் போன்ற முதல் நூல்கள் படைத்தும்; வில்லிபாரதம் ,கம்பராமாயணம் போன்ற - வேற்று மொழி முதல் நூல்களுக்கு- வழி நூல்கள் தந்தும் ; மூல நூல்களுக்கு உரைகள் இயற்றியும் சிதறிக் கிடந்த பேரிலக்கியங்களைத் தொகுத்து 'எட்டுத் தொகை'-'பத்துப்பாட்டு' எனப்பெயர் தந்தும்;நவீன அச்சு இயந்திரம் தோன்றிய பின்னர் பழைய பனை யோலைஏடுகளைச் செப்பனிட்டுச் சீர்படுத்தி நவீன முறையில் பதிப்பித்தும் தமிழ் வளர்த்த சான்றோர் பலராவர். அவர்களிலே அரசர்களுண்டு; ஆண்டிகளுமுண்டு. புலவர்களும் உண்டு; புரவலர்களுமுண்டு. புலவர்களிலே பெண்பாற் புலவர்களும் பெருந்தொண் |