|
அளியுங் காய்தலும் அன்பும் அழுக்காறும் பொறையும் நிறையும் அறிவும் முதலியனவும் பிறவுமாம்.
1. ஒளியாவது: வெள்ளைமையின்மை;
2. அளியாவது: அன்புகாரணத்தான் தோன்றும் அருள்;
3. காய்தலாவது: வெகுளி;
4. அன்பாவது: மனைவியர்கண்ணுந் தாய் தந்தை புதல்வர் முதலிய
சுற்றத்தின்கண்ணும் மனமகிழ்ச்சி நிகழ்த்திப் பிணிப்பித்து நிற்கும் நேயம்;
5. அழுக்காறாவது: பிறர் செல்வம் முதலியவற்றைப் பொறாமை;
6. பொறையாவது: பிறர் செய்த தீங்கைப் பொறுத்தல்;
7. நிறையாவது: மறைபிறரறியாமல் ஒழுகுதல்;
8. அறிவாவது: நல்லதனலனுந் தீயதன்றீமையும் உள்ளவாறுணர்தல்.
இவை கண்டிலம் மென்று கடியப்படா, கொள்ளும் பொருளென்றார். இவை ஆசிரியராணையன்றென்பது மேற்சூத்திரத்தாற் கூறுகின்றார். (53)
காட்டலாகாப் பொருள்களும் உள்பொருளாதலின்
பொருளே எனல்
247. இமையோர் தேஎத்தும் எறிகடல் வரைப்பினும்
அவையில் காலம் இன்மை யான.
இஃது, இவையுங் காட்லாகாப் பொருள்கள் ஆசிரியராணையாற் கொண்டன அல்லவற்றைப் பொருளெனக் கொள்க என்கின்றது.
(இ-ள்.)
இமையோர் தேஎத்தும் எறி கடல் வரைப்பினும் - தேவருலகத்தின்கண்ணுந் திரையெறியுங் கடல்சூழ்ந்த நிலத்தின் கண்ணும்; அவை இல் காலம் இன்மையான -
அறம் பொருளின்பங்களின் நுகர்வு இல்லாததொரு காலம்
இன்றாகையான் அவற்றைப் பொருளென்றே கொள்க எ-று.
தமிழ்நடக்கும் எல்லை கூறாது தேவருலகையும் மண்ணுலகையுங் கூறினமையின் இவை யாண்டும் ஒப்ப முடிந்தன வெனவும் அவை உள்ள அளவும் இவை நிகழ்வனவெனவுங் கூறலின் வழுவமைதியாயிற்று. இமையாக் கண்ணராகலின் இமையோர் என்றான். இடையூறில்லாத இன்பச் சிறப்பான் இமையோரை முற்கூறினார்.
(54)
ஐந்தாவது பொருளியற்கு
ஆசிரியர் பாரத்துவாசி நச்சினார்க்கினியர்
செய்த காண்டிகையுரை முடிந்தது.
|