பக்கம் எண் :

16தொல்காப்பியம் - உரைவளம்
 

பின் இது எனச் சீர்ப்படுத்தி வகுத்தனர் என்பது யாத்தனர் என்பதால் விளங்கும்.
  

பழங்காலத்தில்   தமிழரிடையே களவு கற்பு என்னும் கைகோள் இரண்டும் முறையாகவே போற்றும்படி
நிகழ்ந்தன என்பதும், இடையில் அவை பொய்யும் வழுவும் கலந்து நிகழத்  தொடங்கின  என்பதும், அது
கண்ட  முனிவர்  முறைப்படுத்தினர் என்பதும் இவை தொல்காப்பியர்  காலத்துக்குப் பல  நூற்றாண்டுக்கு
முன்னர் நிகழ்ந்தன என்பதும் புலனாம்.
  

பிறர்     தலையீட்டால் பொய்யும் வழுவும்  தோன்றுவதை இக் காலத்தும்  காணலாம்.  ஒளிவிளக்கு
ஏற்றுதற்குப்  பதிலாகப் பிறந்த நாளில் விளக்கு  அவிக்கும் சடங்கு தமிழரிடையும் வரக்காரணம்  மேலை
நாட்டார் வரவேயாம் அன்றோ? திருமண  நாளிலேயே  மணமக்களை அருந்ததி  கண்டதாகச்  சொல்லச்
செய்து பொய்யைப் புகுத்தும் சடங்கு இன்று நிகழ்கின்றதன்றோ?
  

தலைவன் கூற்று
  

144. 

கரணத்தின் அமைந்து முடிந்த காலை
நெஞ்சுதளை யவிழ்ந்த புணர்ச்சிக் கண்ணும்
எஞ்சா மகிழ்ச்சி யிறந்துவரு பருவத்தும்
அஞ்ச வந்த உரிமைக் கண்ணும்
நன்னெறிப் படருந் தொன்னலப் பொருளினும்
பெற்ற தேஎத்துப் பெருமையின் நிலைஇக்
குற்றஞ் சான்ற பொருளெடுத் துரைப்பினும்
நாமக் காலத் துண்டெனத் தோழி
ஏமுறு கடவுள் ஏத்திய மருங்கினும்
அல்லல் தீர ஆர்வமொடு அளைஇச்
சொல்லுறு பொருளின் கண்ணும் சொல்லென
ஏனது சுவைப்பினும் நீனகத் தொட்டது
வானோர் அமிழ்தம் புரையுமால் எமக்கென
அடிசிலும் பூவும் தொடுத்தற் கண்ணும்
1
அந்தணர் திறத்தும் சான்றோர் தேஎத்தும்
அந்தமில் சிறப்பிற் பிறர்பிறர் திறத்தினும்
ஒழுக்கங் காட்டிய குறிப்பினும் ஒழுக்கத்துக்
களவினுள் நிகழ்ந்த அருமையைப் புலம்பி

1. தொடுதற் கண்ணும் -பாடம்