142 | நாவலர் ச. சோமசுந்தர பாரதியாரின் நூல் தொகுதி |
முதலிய நான்கும் எனவும், இரண்டாவதாய் “முன்னதற்கென்ப” எனவருமிடத்துள்ள ‘முன்’ என்பதை மேலே அல்லது காலத்தால்முன்னே எனக் கொண்டு, மேற்கூறிய கைக்கிளை பெருந்திணை என்ற இரண்டனுள் கைக்கிளைக்குரிய எனவும், நச்சினார்க்கினியர் பொருண்முடிவு செய்கின்றார். எனவே, இவ்வொரு சூத்திரத்தில் இருமுறை வரும் ‘முன்’ என்னும் ஒரு சொல்லை முன்னுக்குப்பின் முரணுவதான இருவேறு பொருளில் இந்நூலார் கூறியதாகக் கொள்ள நேருகிறது. “ஆடி நிழலின் அறியத் தோன்றி நாடுத லின்றிப் பொருள்நனி விளங்க யாப்பினுள் தோன்ற யாத்தமைப் பதுவே” சூத்திரம் எனவும், “முதலும் முடிவும் மாறுகோ ளின்றி . . . . . . . . . பொருண்மை காட்டி . . . . . . . . . . . . . . . . . . . நுண்ணிதின் விளக்கலது நூலெனப் படுவது” எனவும் நூலுக்கும் நூலினுட் சூத்திரத்துக்கும் (செய்யுளியலில், இலக்கணம் வகுப்பவரே, தம்மிலக்கண விதிக்கு மாறாகத் தாமே முன்பின் முரணிப் பொருள்நனிவிளங்காது கற்பவர் மயங்குமாறு இச்சூத்திரத்தைத் தமது பெரு நூலில் யாத்துவைத்தார், எனக்கொள்ளுவது அவர் நூல் நோக்கிற்கும் சொற்போக்கிற்கும் பொருந்தாது?இங்கு இருமுறைவரும் “முன்” என்னும் சொல்லை ஈரிடத்தும் தெளிவான ஒருபொருள் குறியாமல் மாறான இருவேறு பொருள்படக் கூறி யாரையும் மயங்க வைக்க இந்நூலார் கருதார் என்பதொருதலை. இனி இரண்டாவதாக, இங்கு “முன்னைய நான்கும்” என வரையறைப்பட்டவை, அடுத்து இவ்வியலில் விளக்கப் பெறாதனவாய், பின்னே வெவ்வேறு. பொருள் நுதலிய பல்வேறு சூத்திரமும் ஒத்தும் கடந்து வேறோர் இயலில் வேறு பொருளிடைக்கூறப் போவனவற்றைக் குறிக்குமெனில், இங்கு அக்கருத்தைத் தெளிய விளக்கியிருத்தல் வேண்டும். இவ்வியலில் இச்சூத்திரம் கற்பவரை, இனிப் பின்கூறப்போகும் வேறோர் |