பக்கம் எண் :

20நாவலர் ச. சோமசுந்தர பாரதியாரின் நூல் தொகுதி

“. . . . . . . . . . . நள்ளிரு ளலரி
விரிந்த விடியல் வைகினிர் கழிமின்”

என்று இருள் புலர்ந்து பகல் மலர்ந்து கதிர்விரிந்த விடியற் காலத்தை வேறுபிரித்தோதினர். இஃது, இவ்விருபொழுதையும் இவ்வாறே வெவ்வேறாக மதுரைக் காஞ்சியில் விளக்கிய மாங்குடி மருதனார் கொள்கையே அடிப்பட்ட தமிழ் வழக்கென்பதனை வெள்ளிடை மலைபோல் விளக்குவதாகும். ஈண்டுப் பெருங்கௌசிகனார் “நறவுமகிழ்ந்து வைகறைக் காலத்தே அனந்தல் தீர, கடமான் கொழுங் குறையும் . . . . . . . . . . . பயினிணப் பிளவை. . . . . . . . . . . தடியொடு விரைஇ. . . . . . . . . . . குறமகளாக்கிய வாலவிழ்வல்சி அகமலியு வகை யார்வமொடளைஇ . . . . . . . . . மனைதொறும் பெறுகுவிர்” என்று முதற்கூறி, பிறகு அவ்வாறுண்ட நீவிர் விடியல் வரை வைகி விடிந்தபிறகு கழிவீராக; ஏனெனில், நீர் போகும் ஆறு,

“. . . . . பரலவற்போழ்விற்
 கரந்துபாம் பொடுங்கும் பயம்புமாருளவே”, (அதனால்)
 “குறிக்கொண்டு. . . . . . . . . . . . . . நோக்கி
 வறிது நெறியொரீஇ வலஞ்செயாக் கழிமின்”,

எனக் கூத்தருக்கு வைகறைப்பொழுதில் வழிக்கொண்டு பாம்பொடுங்கும் பள்ளங்களில் வீழ்ந்திடர்ப்படாமல் தங்கிக் கதிர்விரிந்த விடியற்காலத்தே புறப்படுமாறு கூறுதலால், இவ்விரு காலமும் இருவேறு சிறுபொழுதுகளே என்பது தெள்ளத்தெளியக்கிடப்பதாகும். இன்னும் மலைபடு கடாத்திலேயே,

“வான்கண் விரிந்த விடியலேற் றெழுந்து”

என 257ஆவது வரியிலும்,

“நொய்ம்மர விறகின் ஞெகிழி மாட்டிப்
 பனிசே ணீங்க வினிதுடன் றுஞ்சிப்
 புலரி விடியற் புள்ளோர்த்துக் கழிமின்”

என 446 முதல் 448ஆவது வரிகளிலும் வைகறையின் வேறுபட்ட விடியற்காலத்தை ஐயமற விளக்கியிருப்பது பாராட்டிச் சிந்திக்கத்தக்கது. இனி, அகநானூற்றில் 37, 41ஆம் பாட்டுக்களில்