முகப்பு தொடக்கம்




பதிற்றுப்பத்து - பழைய உரை
81.



உலகம் புரக்கு முருகெழு சிறப்பின்
வண்ணக் கருவிய வளங்கெழு கமஞ்சூல்
அகலிரு விசும்பி னதிர்சினஞ் சிறந்து
கடுஞ்சிலை கழறி விசும்படையூ நிவந்து
 5




காலை யிசைக்கும் பொழுதோடு புலம்புகொளக்
களிறுபாய்ந் தியலக் கடுமா தாங்க
ஒளிறுகொடி நுடங்கத் தேர்திரிந்து கொட்ப
அரசுபுறத் திறுப்பினு மதிர்விலர் திரிந்து
வாயில் கொள்ளா மைந்தினர் வயவர்
 10




மாயிருங் கங்குலும் விழுத்தொடி சுடர்வரத்
தோள்பிணி மீகையர் புகல்சிறந்து நாளும்
முடிதல் வேட்கையர் நெடிய மொழியூஉக்
கெடாஅ நல்லிசைத் தங்குடி நிறுமார்
இடாஅ வேணி வியலறைக் கொட்ப
 15




நாடடிப் படுத்தலிற் கொள்ளை மாற்றி
அழல்வினை யமைந்த நிழல்விடு கட்டி
கட்டளை வலிப்பநின் றானை யுதவி
வேறுபுலத் திறுத்த வெல்போ ரண்ணல்
முழவி னமைந்த பெரும்பழ மிசைந்து
 20




சாறயர்ந் தன்ன காரணி யாணர்த்
தூம்பகம் பழுனிய தீம்பிழி மாந்திக்
காந்தளங் கண்ணிச் செழுங்குடிச் செல்வர்
கலிமகிழ் மேவல ரிரவலர்க் கீயும்
சுரும்பார் சோலைப் பெரும்பெயற் கொல்லிப்
 25 பெருவாய் மலரொடு பசும்பிடி மகிழ்ந்து
மின்னுமிழ்ந் தன்ன சுடரிழை யாயத்துத்
தன்னிறங் கரந்த வண்டுபடு கதுப்பின்
ஒடுங்கீ ரோதி யொண்ணுத லணிகொளக்
கொடுங்குழைக் கமர்த்த நோக்கி னயவரப்
 30




பெருந்தகைக் கமர்ந்த மென்சொற் றிருமுகத்து
மாணிழை யரிவை காணிய வொருநாட்
பூண்க மாளநின் புரவி நெடுந்தேர்
முனைகை விட்டு முன்னிலைச் செல்லாது
தூவெதிர்ந்து பெறாஅத் தாவின் மள்ளரொடு
 35


தொன்மருங் கறுத்த லஞ்சி யரண்கொண்டு
துஞ்சா வேந்தருந் துஞ்சுக
விருந்து மாக நின்பெருந் தோட்கே.

     துறை - முல்லை. வண்ணம் - ஒழுகுவண்ணம். தூக்கு -
செந்தூக்கு. பெயர் - நிழல்விடு கட்டி
(16)

     (ப - ரை) 2. கமஞ்சூல் - மேகங்கள்; நிறைந்த
சூலுடைமையின் மேகங்கள் கமஞ்சூலெனப்பட்டன.

     4. சிலையொடு கழறியென ஒடு விரிக்க; சிலை - முழங்குதல்.
கழறல் - இடித்தல். நிவந்து விசும்பு அடையூவென மாறிக்கூட்டுக;
விசும்படைதல் - மலையிலே படிந்தவை எழுந்து விசும்பை அடைதல்.

     5. காலை இசைக்கும் பொழுதோடு புலம்புகொளவென்றது
மேகங்கள் கார்காலத்தை அறிவிக்கின்ற பருவத்தானே வருத்தம்
கொள்ளா நிற்கவென்றவாறு.

     புலம்புகொள (5) வயவர் (9) வியலறைக் கொட்ப (14) என
முடிக்க.

     9. வாயில் கொள்ளா மைந்தினரென்றது தமக்குக் காவலடைத்த
இடங்களைச் சென்று கைக்கொள்ளா வலியினையுடையவரென்றவாறு.

     ஈண்டு, வாயில் - இடம்.

     10. மா இருங்கங்குலென்றது மிகவும் கரிய இராவென்றவாறு.

     கங்குலினும் 10) கொட்ப (14) என முடிக்க.

     11. தோள்பிணி மீ கையரென்றது குளிராலே தோளைப்பிணித்த
அத்தோள்மீது உளவாகிய கைகளையுடையாரென்றவாறு.

     12. முடிதல்வேட்கையரென்றது தாம் எடுத்துகெ்காண்ட போர்
முடிதலிலே வேட்கையையுடையாரென்றவாறு.

     15. நாடு அடிப்படுத்தலிற் கொள்ளை மாற்றியென்றது நாட்டை
அடிப்படுத்தினபடியாலே அடிப்படுத்தும் காலத்து உண்டாய்ச் சென்ற
கொள்ளையை மாற்றியென்றவாறு.

     16. அழல்வினையமைதல் - ஓட்டறுதல்.

     இவ்விடைச்சிறப்பானே இதற்கு, ‘நிழல்விடு கட்டி’ என்று
பெயராயிற்று.

     17. கட்டளைவலித்தல் - இன்னார் இன்னதனைப் பெறுகவென்று
தரங்களை நிச்சயித்தல். தானைக்கு உதவியென விரிக்க.

     சாறு அயர்ந்தன்ன (20) தீம்பிழி (21) என முடித்து
விழாக்கொண்டாடினாலொத்த இனிய மதுவெனவுரைக்க.

     காரணி யாணர்த் (20) தூம்பு (21) என்றது கருமையைப்
பொருந்தின அழகிய மூங்கிற்குழாயென்றவாறு.

     25. பெருவாய்மலர் - 1இருவாட்சி. 2பசும்பிடி - பச்சிலை.
மகிழ்ந்து - விரும்பிச்சூடியென்றவாறு.

     26. மின் உமிழ்ந்தன்ன சுடர் இழையென்றது மேகம் மின்களை
உமிழ்ந்தாற் போன்ற சுடர்களையுடைய இழையென்றவாறு.

     முனை கைவிட்டு முன்னிலைச் செல்லாது (33) துஞ்சா (36)
என முடித்து, நின்னோடு போர் செய்கையைக் கைவிட்டு
நின்முன்னே வந்து வழிபட்டு நிற்றலைச் செய்யமாட்டாமையால்
துஞ்சாதவெனவுரைக்க.

     34. தூ எதிர்ந்து பெறாஅத் தா இல் மள்ளரொடென்றது முன்பு
நின் வலியொடு எதிர்த்துப் பின் எதிர்க்கப்பெறாத வலியில்லாத
மள்ளரொடென்றவாறு.

     மள்ளரொடு (34) துஞ்சா (36) என முடிக்க.

     அண்ணல் (18), நின் அரிவை காணிய (31) நின்தேர் (32)
ஒருநாட் (31) புரவிபூண்பதாகவேண்டும் (32); அதுதான் நின்
அரிவைக்கே உடலாக வேண்டுவதில்லை; அதனானே
துஞ்சாவேந்தரும் துஞ்சுவார்களாக வேண்டும்; அதுதான் நின் (36)
பெருந்தோட்கு விருந்துமாக வேண்டும்; இவ்வாறு இரண்டொரு
காரியமாக இதனைச் செய்க (37) என வினைமுடிவு செய்க.

     இதனாற்சொல்லியது 3காமவேட்கையிற்செல்லாத அவன் வென்றி
வேட்கைச்சிறப்புக் கூறியவாறாயிற்று.

     இஃது அவனரிவை 4கற்புமுல்லையைப் பற்றி வந்தமையால்,
துறை முல்ையைாயிற்று.

     (கு - ரை) 1-5. மழைக் காலத்தின் இயல்பு.

     1-2. உலகத்தைப் பாதுகாக்கும் அச்சம் பொருந்திய
சிறப்பினையும், கரிய நிறத்தையும், மின் முதலான தொகுதியையும்
உடைய வளம் பொருந்திய நிறைந்த நீரையுடைய மேகங்கள்.
கமஞ்சூல் மேகத்திற் காயிற்று.

     3-4. மற்ற நான்கு பூதங்கள் அகலுதற்குக் காரணமான
பெரிய ஆகாயத்தில் அதிர்தற்குக் காரணமான சினம் மிக்கு மிக்க
முழக்கத்தோடு இடித்து, மலையிலே படிந்து பின் எழுந்து
ஆகாயத்தை அடைந்து. நிவந்து விசும்பு அடையூ என மாறிக்
கூட்டுக.

     5. கார்காலத்தைத் தெரிவிக்கும் பருவத்தால் வருத்தம்
கொள்ளா நிற்ப. 6. ஆண்யானைகள் பரவிச் செல்ல விரைந்த
கதியையுடைய குதிரைகளை மேலாட்கள் வேண்டிய அளவிலே
தடுத்துச் செலுத்த.

     7. விளங்குகின்ற கொடிகள் அசையும்படி தேர்கள் சுழன்று
திரிய.

     6-7. மு. பதிற். 49 : 4-5.

     8. தம் பகைவர்க்கு உதவியான அரசர் பக்கத்தே வந்து
தங்கினாலும் நெஞ்சில் நடுக்கம் இல்லாதவராகித் திரிந்து. இது
வயங்கலெய்திய பெருமையின்பாற்படும் (தொல். புறத். 8)

     9-11. தமக்கு வரையறுத்த இடங்களைக் காவல் கொள்ளாத
வன்மையுடையராகி வீரர்கள், மிகவும் கரிய இரவிலும் சிறந்த
வீரவளை ஒளிவிடும்படி, குளிராலே தோளைப்பிணித்த அத்தோள்
மீது உள்ள கைகளையுடையராகிப் போரில் விருப்பம் மிக்கு. மாயிரு :
ஒரு பொருட்பன்மொழி. இதிற் கூறப்பட்டது கூதிர் பாசறை.

     11-2. நாள்தோறும், போர் விரைவில் முடிதலில்
விருப்பமுடையராய்த் தம் மேம்பாடுகளைக் கூறி, நெடிய மொழிதல்,
மாராயம்பெற்ற நெடுமொழியாதலின் இவ்வீரர் அரசனால் எட்டி,
காவிதி முதலிய பட்டங்களும் நாடும் ஊரும் பெற்றோராவரென்றறிக.
“நெடிய மொழிதலுங் கடியவூர்தலும்” (நற். 210 : 5)

     13-4. கெடாத நல்ல புகழையுடைய தங்குடியின் பெருமையை
நிலை நிறுத்தும்பொருட்டு. அளவிடப்படாத எல்லையையுடைய
அகன்ற பாசறையிலே சுழன்று திரிய. இடா ஏணி : பதிற். 24 : 14,
உரை ; “இடாஅவேணிநின் பாசறை யானே” (பதிற். விடுபட்ட
பாடல், 4 : 10). பாசறை அறையென முதற்குறையாயிற்று (பதிற்.
24 : 14, உரை)

     15. பகைவரது நாட்டை அடிப்படுத்தினமையால், முன்பு
நிகழ்ந்த கொள்ளையை மாற்றி.

     16-8. அழலிலே உருக்கினமையால் குற்றமற்ற ஒளிவிடுகின்ற
பொற்கட்டிகளுள், இன்னவர் இன்னதனைப் பெறுவாரென்று அவரவர்
தரங்களை நிச்சயிக்க, நினது சேனையிலுள்ள வீரர்க்கு உதவி, வேற்று
நாட்டினிடத்தே சென்று தங்கிய வெல்லும் போரைச் செய்யும்
தலைவனே.

     19. முழவைப்போல வடிவம் அமைந்த பெரிய பலாப்பழத்தின்
சுளைகளை உண்டு; “கலையுணக் கிழிந்த முழவுமருள் பெரும்பழம்”
(புறநா. 236 : 1) ; “கானப் பலவின் முழவுமருள் பெரும்பழம்”
(மலைபடு. 511)

     20-21. விழாக் கொண்டாடினாற் போன்ற, கருமையை அணிந்த
அழகிய மூங்கிற்குழாயினிடத்தே முதிர்ந்த இனிய கள்ளையுண்டு.
சாறயர்ந்தன்ன தீம்பிழி என இயைக்க. “சாறுபடு திருவி னனைமகி
ழானே” (பதிற். 65 : 17)

     மூங்கிற் குழாயில் தேனைவைத்து முதிரச் செய்தல் : முருகு.
195, ஒப்பு. ; புறநா. 129: 2.

     22. காந்தட் பூவாலாகிய கண்ணியை அணிந்த செல்வத்தையுடைய குடியிற் பிறந்த செல்வர். 23.
ஆரவாரத்தையுடைய மகிழ்ச்சியையுடையவராகித் தம்பால்
வந்து இரப்போர்க்குக் கொடுக்கும்.

     24-5. வண்டுகள் ஒலிக்கின்ற சோலையையும் மிக்க
மழையையும் உடைய கொல்லிமலையில் உண்டான
இருவாட்சிமலரோடு பச்சிலையை விரும்பிச்சூடி.

     26. மேகம் மின்னலை உமிழ்ந்தாற் போன்ற ஒளிவிடுகின்ற
ஆபரணங்களை அணிந்த மகளிர் திரளையுடைய. கூந்தலுக்கு
மேகமும், இழைகளுக்கு மின்னலும் உவமையாகக் கொள்க.

     27-8. தன்நிறம் மறைதற்குக் காரணமான வண்டுகள்
ஒலிக்கின்ற கூந்தலையும் சுருளையும் உடைய ஒளிபொருந்திய நெற்றி
அழகு கொள்ளும்படி. 29 - 31. வளைந்த காதணியோடு போர் செய்த
பார்வையையும், இன்பம் வரும்படி தன்பெருங்குணங்களுக்கு ஏற்பப்
பொருந்திய மென்மையான சொல்லையும், அழகியமுகத்தையும்
உடைய, மாட்சிமைப்பட்ட இழைகளை அணிந்த நின் தேவி
காணும்படி, ஒரு நாளில்.

     32. நின்னுடைய குதிரைகள் நீண்ட தேரைப் பூண்பனவாகுக ;
மாள : முன்னிலையசைச் சொல் ; கலித். 124 : 19; புறநா. 146 : 11.

     33. போரைக் கைவிட்டு நின்முன்னே செல்லாமல்.

     34. முதலில் நின் வலியோடு மாறுபட்டுப் பின்
எதிர்க்கப்பெறாத, வன்மையில்லாத வீரரோடு.

     35. பழையதாகிய குலத்தை நீ அழித்தலை அஞ்சித் தம்
அரண்களைப் பாதுகாப்பாக எண்ணிக்கொண்டு.

     36-7. தூங்காத பகையரசரும் தூங்குக; நின்னுடைய பெருந்
தோள்களுக்கு விருந்தும் ஆகுக.

     துஞ்சாவேந்தர் : “வலமுறை வருதலு முண்டென்றலமந்து,
நெஞ்சு நடுங் கவலம் பாயத், துஞ்சாக் கண்ண வடபுலத் தரசே”
(புறநா. 31 : 15 - 7)

     செல்லாது (33) மள்ளரொடு (34) துஞ்சா (36) என இயையும்.

     (பி - ம்) 7. நுடங்கல. 22, காந்தட்கண்ணி. 27. வண்டுபடு
துப்பின். 32. புனைவினை நெடுந்தேர். 34. தூவின்மள்ளரொடு.      
                                                   (1)


     1குறிஞ்சிப. 94, ந.
     2குறிஞ்சிப். 70, ந.
     3பதிற். 50, உரை.
     4பு. வெ. 283.




பதிற்றுப்பத்து - மூலமும் விளக்க உரையும்

1. நிழல்விடு கட்டி
 
81.உலகம் புரக்கு முருகெழு சிறப்பின்
வண்ணக் கருவிய வளங்கெழு கமஞ்சூல்
அகலிரு விசும்பி னதிர்சினஞ் சிறந்து
கடுஞ்சிலை கழறி விசும்படையூ நிவந்து
 
5காலை யிசைக்கும் பொழுதொடு புலம்புகொளக்
களிறுபாய்ந் தியலக் கடுமா தாங்க
ஒளிறுகொடி நுடங்கத் தேர்திரிந்து கொட்ப 
அரசுபுறத் திறுப்பினு மதிர்விலர் திரிந்து
வாயில் கொள்ளா மைந்தினர் வயவர்
 
10மாயிருங் கங்குலும் விழுத்தொடி சுடர்வரத்
தோள்பிணி மீகையர் புகல்சிறந்து நாளும்
முடிதல் வேட்கையர் நெடிய மொழியூஉக்
கெடாஅ நல்லிசைத் தங்குடி நிறுமார்
இடாஅ வேணி வியலறைக் கொட்ப
 
15நாடடிப் படுத்தலிற் கொள்ளை மாற்றி
அழல்வினை யமைந்த நிழல்விடு கட்டி
கட்டறை வலிப்ப நின்தானை யுதவி
வேறுபுலத் திறுத்த வெல்போ ரண்ணல்
முழவி னமைந்த பெரும்பழ மிசைந்து
 
20சாறயர்ந் தன்ன காரணி யாணர்த்
தூம்பகம் பழுனிய தீம்பிழி மாந்திக்
காந்தளங் கண்ணிச் செழுங்குடிச் செல்வர்
கலிமகிழ் மேவல ரிரவலர்க் கீயும்
சுரும்பார் சோலைப் பெரும்பெயர்க் கொல்லிப்
 
25பெருவாய் மலரொடு பசும்பிடி மகிழ்ந்து
மின்னுமிழ்ந் தன்ன சுடரிழை யாயத்துத்
தன்னிறங் கரந்த வண்டுபடு கதுப்பின்
ஒடுங்கீ ரோதி யொண்ணுத லணிகொளக்
கொடுங்குழைக் கமர்த்த நோக்கி யைவரப்
 
30பெருந்தகைக் கமர்ந்த மென்சொற் றிருமுகத்து
மாணிழை யரிவை காணிய வொருநாட்
பூண்க மாளநி்ன் புரவி நெடுந்தேர்
முனைகை விட்டு முன்னிலைச் ெ்சல்லாது
தூவெதிர்ந்து பெறாஅத் தாவின் மள்ளரொடு
 
35தொன்மருங் கறுத்த லஞ்சியரண் கொண்டு
துஞ்சா வேந்தருந் துஞ்சுக
விருந்து மாக நின்பெருந் தோட்கே.
 

துறை  : முல்லை.
வண்ணம் : ஒழுகுவண்ணம்.
தூக்கு  : செந்தூக்கு.
பெயர்  : நிழல்விடு கட்டி.

1 - 5. உலகம் ............... புலம்புகொள.

உரை :   உலகம்  புரக்கும்  -   உலகத்திலுள்ள   உயிர்களைப்
பாதுகாத்தலைச்  செய்யும்  ;  உருகெழு  சிறப்பின்  -  உட்குதலைச்
செய்யும்    சிறப்பினையும்    ;    வண்ணக்   கருவிய   -   கரிய
நிறத்தையுமுடைய  பலவாய்த் தொகுதி கொண்டனவாகிய ; வளங்கெழு
கமஞ்சூல் வளம் பொருந்திய நிறைந்த நீரையுடைய மழை மேகங்கள் ;
அகல் இரு விசும்பின் - அகன்ற கரிய வானத்தின்கண் ; அதிர் சினம்
சிறந்து  எல்லாப்  பொருளும்  அதிரும்படி  மின்னிக் குமுறி ; கடுஞ்
சிலையொடு   கழறி   -  மிக்க  முழக்கத்தோடு  இடித்து  ;  விசும்பு
அடையூஉ  -  நிவந்து  -  வான  முழுதும்  பரந்துயர்ந்து ;  காலை
யிசைக்கும் பொழுதொடு - கார்காலத்தைத் தெரிவிக்கும் பருவத்தால் ;
புலம்பு கொள உயிர்கள் வருத்தமெய்த எ - று.

உலகம்    புரக்கும் வளங்கெழு கமஞ்சூல் என்றும், சிறப்பினையும்
வண்ணத்தினையுமுடையவாய்க்   கருவியாகிய   கமஞ்சூல்   என்றும்
இயையும்.    மழையின்றிப்   பொய்ப்பின்   உலகத்துள்   பசிநின்று
உடற்றுமாதலின்,  “உலகம் புரக்கும் கமஞ்சூல்” என்றும், துப்பார்க்குத்
துப்பாய துப்பாக்கித் தருதலின் “வளங்கெழு கமஞ்சூல்” என்றும், இடி
மின்னல்   முதலியவற்றால்   உயிர்கட்கு  அச்சத்தை  விளைத்தலின்
“உருகெழு சிறப்பின் கமஞ்சூல்” என்றும், பலவாய்த் தொக்கு இருண்டு
வருதலின்,  “வண்ணக்கருவிய  கமஞ்சூல்”  என்றும்  கூறினார்.  இரு
விசும்பு  மிக  அகன்றதாயினும்  அதனிடமுழுதும்  அதிரக் குமுறுதல்
பற்றி,  “அகலிரு  விசும்பின் அதிர்சினம் சிறந்து” என்றார். கமஞ்சூல்,
கமஞ்சூலையுடைய   மேகத்துக்காயிற்று.  கமம்,  நிறைவு.  “கார்கோள்
முகந்த  கமஞ்சூல்  மாமழை”  (முருகு.  7)  என்று  பிறரும் கூறுதல்
காண்க.  அதிர்சினம்,  முகிற்  கூட்டத்தின் குமுறலையும், கடுஞ்சிலை
பேரிடியினையும்  குறித்து நின்றன. மழை மிக்குப் பெய்தலால் மாவும்
புள்ளும் குளிரால் ஒடுங்கி வருந்துதலின், “புலம்பு கொள”   என்றார்.

இனிப்     பழையவுரைகாரர்,   “கமஞ்சூல், மேகங்க” ளென்றும்,
“நிறைந்த   சூலுடைமையின்   மேகங்கள்  கமஞ்சூல்  எனப்பட்டன”
என்றும், “சிலையொடு  கழறியென    ஒடு விரிக்க” என்றும், “சிலை,
முழங்குதல் ; கழறல்,  இடித்தல்”  என்றும்,  “நிவந்து  விசும்படையூ
வென   மாறிக்   கூட்டுக”  என்றும்,  “விசும்படைதல்  மலையிலே
படிந்தவை எழுந்து விசும்பை யடைதல்” என்றும், “காலை யிசைக்கும்
பொழுதொடு  புலம்புகொள  வென்றது   மேகங்கள்   கார்காலத்தை
அறிவிக்கின்ற   பருவத்தானே  வருத்தம் கொள்ளாநிற்க வென்றவா”
றென்றும் கூறுவர்.
 

6 - 14. களிறு...........கொட்ப.

உரை :  களிறு பாய்ந்து இயல - களிறுகள் பாசறை  யெல்லையிற்
பரந்து  இயங்க  ;  கடுமா  தாங்க  -  விரைந்து செல்லும் குதிரைகள்
வீரர்களைச்  சுமந்து  அவர்  குறிப்புவழிச்  செல்ல  ;  ஒளிறு கொடி
நுடங்கத்  தேர்  திரிந்து கொட்ப - விளங்குகின்ற கொடிகள் அசையத்
தேர்கள்  நாற்றிசையும்  சுழன்று திரிய ; அரசு புறத்து இறுப்பினும் -
பகையரசர்   தம்   நகர்ப்புறத்தே   முற்றுகையிட்டுத்   தங்கினும்  ;
அதர்விலர்  -  சிறிதும்  நடுக்கமிலராய்;  வாயில்கொள்ளா மைந்தினர்
வயவர்  -  தமக்குரிய இடங்கட்குக் காவல் கொள்ளாத வலிமையினை
யுடையராகிய  வீரர்  ;  மாயிருங் கங்குலும் - பெரிய இருள் நிறைந்த
இராக்  காலத்தும்  ;  விழுத்தொடி சுடர்வர  -  தம்  தோளிலணிந்த
வீரவளை  ஒளி  திகழு  ;  தோள் பிணி  மீகையர்  - தோளிடத்தே
பிணிக்கப்பட்ட   மீகை   யினையுடையராய்   ;   நாளும்   முடிதல்
வேட்கையர்  - போரிற் புண்பட்டு வீழ்தலை விரும்பும் வேட்கையராய்
;  புகல்  சிறந்து  -  போர்  விருப்பம்  மிக்கு ; நெடிய மொழியூஉ -
வஞ்சினம்  கூறி  அவ்வஞ்சினம்  தப்பாமல்  ;  தம்  குடி  கெடாஅ
நல்லிசை  நிறுமார்  -  தாம்  பிறந்த குடிக்குக் கெடாத நல்ல புகழை
நிலைநிறுத்துதற்கு   ;   இடாஅ  ஏணி  வியல்  அறைக்  கொட்ப  -
அளவிடப்படாத  எல்லையால்  அகன்ற  பாசறைக்கண்ணே  சுழன்று
திரிய எ - று.

பாய்தல்,     பரத்தல்.   பருவுடம்பினவாதலின்,     களிறுகளின்
இயக்கத்தைப்  “பாய்ந்தியல”  வென்றார்.  கடுமா  என்புழிக்  கடுமை
விரைவு  குறித்து நின்றது. தாங்க வென்றதனால், வீரர்களைச் சுமத்தல்
பெற்றாம்.   வாயில்  காவல்  மிக்க  வலியுடையராயினும்  பகையரசர்
புறத்திறுத்த  வழி, மதிற் காவல்கொள்ளா தொழியா ரென்பது தோன்ற,
“வாயில்  கொள்ளா மைந்தினர்” என்றார். வாயில் கொள்ளாமைக்கேது
மைந்துடைமை     யென்றாராயினும்,    அதனைப்    புலப்படுக்கும்
நடுக்கமின்மையை “அதிர்விலர்” என எடுத்தோதினார். இராக்காலத்தே
போர்   நிகழ்தலின்மையின்,   “மாயிருங்கங்குலும்”  என்றார்.  மீகை,
தோள்மேலணியும்   சட்டை.   சட்டையின்   கை,   தோளை   மூடி
அதன்மேலே  உயர்ந்து  தோன்றலின்  மீகை  யெனப்பட்டது. இனிப்
பழையவுரைகாரர்,  “வாயில்  கொள்ளா  மைந்தினரென்றது  தமக்குக்
காவலடைத்த   இடங்களைச்   சென்று   கைக்கொள்ளா  வலியினை
யுடையவரென்றவா”   றென்றும்,  “வாயில்  ஈண்டு  இடம்”  என்றும்,
“தோள்பிணி   மீகையரென்றது   குளிராலே   தோளைப்   பிணித்த
அத்தோள்  மீது  உளவாகிய  கைகளையுடைய ரென்றவா” றென்றும்,
கூறுவர்.
 

போரிலே       புண்பட்டு வீழ்தலின்றி வறிதே மூத்து நோயுற்றுச்
சாதலைக்  கீழ்மையாகக்  கருதி,  “நோற்றோர்  மன்ற தாமே கூற்றம்,
கோளுற  விளியார்  பிறர்கொள  விளிந்தோர்” (அகம். 61) என மேற்
சேறல்,  பண்டைச்  சான்றோர்  மரபாதலின்  “புகல்  சிறந்து நாளும்
முடிதல்   வேட்கைய”   ரென்றார்.   வேட்கை  மிகுதியால்  போரில்
விருப்பம்    சிறக்குமாதலின்,    வேட்கையர்    புகல்    சிறந்தென
இயைக்கப்பட்டது.   பழையவுரைகாரர்,  “முடிதல்  வேட்கையரென்றது
தாம்   எடுத்துக்  கொண்ட  போர்  முடிதலிலே  வேட்கை  யுடையா
ரென்றவா” றென்பர்.

நெடிய     மொழிதலாவது, “தலைத்தா ணெடுமொழி  தன்னொடு
புணர்த்தல்”   (தொல்.   பொ.   புறம்.   5),   “நெடிய  மொழிதலும்
கடியவூர்தலும்  செல்வமன்று”  (நற்.  210)  என்று  பிறரும்  கூறுதல்
காண்க  .  இனி,  இந்  நெடுமொழியை “மாராயம் பெற்ற நெடுமொழி”
(தொல்.  புறத்.  8)  யாகக் கோடலுமொன்று . இடாஅ ஏணி யென்றது
எல்லைக்கு  வெளிப்படை  அறை, பாசறை. “இடாஅ ஏணி யியலறை”
(பதிற் . 24) என வருதல் காண்க.

களிறு இயல, மாதாங்க, தேர் திரிந்து கொட்ப, வயவர் மிகைய ராய்,
வேட்கையராய், நிறுமார், வியலறைக் கொட்ப என இயைக்க .

15 - 18. நாடடிப்படுத்தலிற்.......................அண்ணல் .

உரை :  நாடு அடிப்படுத்தலின் - பகைவர்    நாட்டை வென்று
அடிப்படுத்தியதனால்;  கொள்ளை  மாற்றி  -  அந்நாட்டில்  மேலும்
கொள்ளத்தகும்  பொருளைக்  கொள்ளா  தொழித்து  ;  அழல்வினை
யமைந்த  நிழல்விடு  கட்டி  -  கொண்டவற்றை  நெருப்பிலிட்டுருக்கி
யதனால்  ஓடுதல் இல்லாத ஒளிவிடுகின்ற பொற்கட்டிகளை ; கட்டளை
வலிப்ப  - வீரர் தகுதிகளைச் சான்றோர் வற்புறுத்துரைப்பதால் ; நின்
தானை  உதவி  -  அவ்வாறே உன் தானை வீரர்க்கு வழங்கி ; வேறு
புலத்திறுத்த  வெல்போர்  அண்ணல்  -  வேற்று  நாடுகளில் தங்கிய
வெல்லுகின்ற போரையுடைய அண்ணலே எ - று.

பகைவர்     நாட்டை அடிப்படுத்தற்கு முன்பு, அதனுட்புக்கு எரி
பரந்தெடுத்துச்  சூறையாடிக்கொண்ட  கொள்ளையை,  அடிப்படுத்திய
பின்பு  பெறுவதின்மையின்,  “நாடடிப்படுத்தலின்  கொள்ளை மாற்றி”
யென்றும்,     கொண்ட     கொள்ளை     பல்வேறுவகைப்
பொற்கலன்களாதலால்,     அவற்றை     ஓரின     மாக்குதற்காகப்
பொடித்துருக்கிப்     பொற்கட்டிகளாக     மாற்றினமை    தோன்ற,
“அழல்வினை   யமைந்த   நிழல்விடு  கட்டி”  யென்றும்  கூறினார்.
பழையவுரைகாரரும்,  ‘நாடடிப்படுத்தலிற் கொள்ளை மாற்றி’ யென்றது,
“நாட்டை யடிப்படுத்தினபடியாலே அடிப்படுத்தும் காலத்து உண்டாய்ச்
சென்ற  கொள்ளையை  மாற்றி யென்றவா” றென்றும்,” அழல் வினை
யமைதல்,  ஓட்டறுதல்  ;  இவ்வடைச்  சிறப்பானே யிதற்க நிழல்விடு
கட்டியென்று பெயராயிற்” றென்றும் கூறுவர் . நிழல், ஒளி.

வீரர்க்குச்  சிறப்புச் செய்யுமி்டத்து  அவரவர் தகுதியும் வரிசையும்
தேர்ந்து   அதற்குத்   தக்கவாறு  செய்வது  ஆட்சிமுறை  யாதலின்,
“கட்டளை வலிப்ப” என்றார். “கட்டளை வலித்தலென்பது   இன்னார்
இன்னதனைப்   பெறுக   என்று  தரங்களை  நிச்சயித்தல்”  என்பது
பழையவுரை.   தானை   யென்புழி   நான்கனுருபு   விரிக்க.  வேறு
புலத்திறுத்தவழி   வேந்தன்  செய்வன  இவை  யென்கின்றாராதலின்,
“வேறு புலத்திறுத்த வெல்போ ரண்ணல்” என்றுரைக்கின்றார்.
 

19 - 23. முழவின் - ஈயும்

உரை : காந்தளங்கண்ணிச் செழுங்குடிச் செல்வர் -காந்தட் பூவால்
தொடுத்த  கண்ணி சூடிய செழித்த குடியினையுடைய செல்வ மக்கள் ;
முழுவின்  அமைந்த பெரும் பழம் மிசைந்து - முழவு போன்றமைந்த
பெரிய   பலாப்பழத்தை   யுண்டு   ;   சாறயர்ந்தன்ன   -   விழாக்
கொண்டாடினாற்போல  ;  யாணர்  கார்  அணி  தூம்பகம்  பழுனிய
தீம்பிழி   மாந்தி  -  புதுமையினையுடைய  கரிய  அழகிய  மூங்கிற்
குழாயிடத்தே பெய்து முதிர்வித்த இனிய கள்ளை யருந்தி ; கலி மகிழ்
மேவலர்  - ஆரவாரத்தையுடைய மகிழ்ச்சியை விரும்பி ; இரவலர்க்கு
ஈயும் - இரப்போர்க்கு வேண்டுவனவற்றை யீதலைச் செய்யும் கொல்லி
நாட்டிலுள்ள எ - று.

கொல்லிமலையைச்    சூழ்ந்த நாட்டைக் கொல்லிக்கூற்ற மென்பர்.
அந்நாட்டவர்  குறிஞ்சி  நிலத்து மக்களாதலின், அந்நாட்டுச் செல்வர்
காந்தட்கண்ணி  சூடுதலை  விதந்து, “காந்தளங்கண்ணிச் செழுங்குடிச்
செல்வர்”  என்றார்  . அங்கே, பலாப்பழம் மிகுதியும் கிடைப்பது இக்
காலத்தும்  உண்மை.  “கலையுணக் கிழித்த முழவுமருள் பெரும்பழம்”
(புறம்  .  236) என்பவாகலின், ஈண்டும் பலாப்பழம், “முழவினமைந்த
பெரும்பழ”   மெனப்பட்டது.   விழாக்காலத்துச்   சுற்றமும்  பிறரும்
சூழவுண்டல்போல,  ஏனைக்காலத்தும்  உண்டு மகிழ்தலைச், “சாறயர்ந்
தன்ன  தீம்பிழி  மாந்தி”  என்றதனாலும்,  இனிய  கள்ளை  மூங்கிற்
குழாயிடத்தே   பெய்து  புளிப்பு  முதிர்விக்கும்  இயல்பை,  “நீடமை
விளைந்த   தேக்கட்டேறல்”   (முருகு  .  195)  என்பதனாலு  மறிக.
இரவலர்க்கீயும்  கொல்லியென முடிக்க. பழையவுரைகாரரும், “சாறயர்ந்
தன்ன  தீம்பிழியென  முடித்து விழாக் கொண்டாடினா லொத்த இனிய
மதுவென  வுரைக்க”  என்றும்,  “காரணி  யாணர்த்  தூம்பு  என்றது
கருமையைப்   பொருந்தின   அழகிய   மூங்கிற்  குழாய்  என்றவா”
றென்றும் கூறுவர்.

24 - 32. சுரும்பு ....................நெடுந்தேர்

உரை :  சுரும்பார்சோலைப் பெரும்   பெயர்க்கொல்லிவண்டுகள்
பொருந்திய சோலை சூழ்ந்த பெரிய பெயரையுடைய கொல்லிமலையில்
உண்டாகிய  ; பெருவாய் மலரொடு பசும்பிடி மகிழ்ந்து - இருவாட்சிப்
பூக்களுடன்   பச்சிலையைத்  தொடுத்தணிந்து  ;  மின் உமிழ்ந்தன்ன
சுடரிழை  யாயத்து  -  மின்னலை  உமிழ்ந்தாற் போன்ற ஒளிதிகழும்
அணிகளையுடைய        ஆயமகளிர்படைசூ          ழவுள்ள;தன்
நிறங்கரந்தவண்டுபடு கதுப்பின் -  தன் நிறம் மறையும்படியான வண்டு
மொய்க்கும் கூந்தலும் ;  ஒடுங்கீரோதி   யொண்ணுதல் முன் மயிரின்
சுருள்   தவழும் ஒளி பொருந்திய நெற்றியும் ; அணிகொள்-முறையே
பூவாலும்  ஒளியாலும் அழகு  மிகுமாறு  ;  கொடுங்குழைக்  கமர்த்த
நோக்கின் - வளைந்த  குழையொடு    பொருத   பார்வையினையும்;
பெருந்தகைக்கு     நயவர   அமர்ந்த     மென்சொல்   -    தன்
பெருங்குணங்கட்கு  ஏற்ப  அமைந்த   மெல்லிய  சொல்லினையும் ;
திருமுகத்து   மாணிழை      யரிவை  -  அழகிய     முகத்தையும்
மாட்சிமைப்பட்ட  அணிகலன்களையுமுடைய   அரிவையாகிய   நின்
தேவியை ;   காணிய - காண்பதற்காக ;   ஒருநாள் - ஒருநாளேனும்;
நின் புரவி நெடுந்தேர் பூண்க - நின்னுடைய குதிரை பூட்டிய தேர்
ஏறுவாயாக எ - று.
 

பெருவாய்    மலர், இருவாட்சிப்பூ. இதனை இருள்வாசி யென்றும்
நள்ளிருணாறி யென்றுங் கூறுப . “நரந்த நாக நள்ளிரு ணாறி” என்று
குறிஞ்சிப்பாட்டுக்  கூறுகின்றது  .  பசும்பிடி,  பச்சிலைப்பூ ; இதனை
இக்காலத்தார் மனோரஞ்சிதம் என்பர்; “பசும்பிடி வகுளம் பல்லிணர்க்
காயா”   (குறிஞ்  .   70)   என   வருதல்   காண்க.  “இருவாட்சி
முதலியவற்றையும்   சுடரிழை   யினையுமுடைய  ஆயமகளிர்  எனச்
சிறப்பித்தவர்,  அரசமாதேவி  அத்தகைய  பூ  வொன்றும்  அணிந்து
கொள்ளாது   பிரிவுத்    துயருற்றிருந்தமை    தோன்ற,    ஒன்றும்
கூறாராயினாரென     வுணர்க.    மகி்ழந்தென்பதற்கு,    “விரும்பிச்
சூடியென்றவா”   றென்றும்,  “மின்னுமிழ்ந்தன்ன  சுடரிழை யென்றது,
மேகம்    மின்களை   உமிழ்ந்தாற்    போன்ற   சுடர்களையுடைய
இழையென்றவா” றென்றும் பழையவுரைகாரர் கூறுவர்.

தலைமயிரின்  கருமை வண்டினம் மிக்குப்படுதலால் தெரியாதாயிற்
றென்றற்கு,  “தன்னிறம்  கரந்த  வண்டுபடு  கதுப்பின்” என்றும் ஒளி
திகழும்  நெற்றியிடத்தே  சுருண்டு  தவழ்தலின்,  முன்மயிரை “ஒடுங்
கீரோதி”  யென்றும், பிரிவுத் துன்பத்தால் உளதாகிய பசலையால் ஒளி
மழுங்கி   யிருத்தல்பற்றி,  “ஒண்ணுத”  லென்றும்,  அரசன்  எய்தித்
தன்னைத்  தலைக்கூடிய  வழி,  கூந்தல் பூவணிந்து சிறத்தலும் நுதல்
நல்லொளிகொண்டு திகழ்தலும் ஒருதலையாதல்பற்றி, “தன்னிறம் கரந்த
வண்டுபடு கதுப்பின்  ஒடுங்கீரோதி யொண்ணுத லணிகொள” என்றும்
கூறினார்.

குழையொடு     பொரும்   நெடுங்கண்  ணென்றற்கு,  “கொடுங்
குழைக்கமர்த்த   நோக்கின்”  என்றும்,  பெரியாரது  பெருந்தகைமை
அவர்  பேசும் இன்சொல்லால் விளங்குதலால், “பெருந்தகைக்கு நயவர
அமர்ந்த   மென்   சொல்”என்றும்,   மங்கல  நாணன்றிப்  பிறிதணி
பேணாமையின்   அதனை   “மாணிழை”   யென்றும்  பாராட்டினார்.
அணிகொள  என்பதைக் கதுப்பின் என்பதனோடும் இயைக்க ; இன் :
அல்வழிக்கண்     வந்த   சாரியை.    நயவர    அமர்ந்த    என
இயைத்துக்கொள்க.  நாளும்  போர் வேட்டெழும் இயல்பினனாதலின்,
“அரிவை  காணிய  ஒருநாள் பூண்க  மாள  நின்புரவி  நெடுந்தேர்”,
என்றார்.  எனவே, காமவின்பத்தினும்  போரிடை யுண்டாகும் வெற்றி
யின்பமே இச்சேரமானுக்குப் பெரிதென்றாராயிற்று.
 

33 - 37. முனைகை...........................தோட்கே .

உரை :  முன்னிலை  முனைகை   விட்டு - நின் முன்னே நின்று
பொரும்  போரைக்  கைவிட்டு  ; செல்லாது - பிறக்கிட்டோடாது ; தூ
எதிர்ந்து  - நின் வலியோடு பொருது ; பெறாஅத் தாவில் மள்ளரொடு
வெற்றி    யெய்தமாட்டாமையால்    வலியில்லாத    வீரருடனே   ;
தொன்மருங்கு  அறுத்தல்  அஞ்சி  - தொன்றுதொட்டுவரும் தம் குடி
வேரோடு  கெடுதற்கு அஞ்சி ; துஞ்சா வேந்தரும் கண்ணுறங்காத நின்
பகைவேந்தர்  தாமும்;  அரண் கொண்டு துஞ்சுக - ஒரு நாளைக்கு நீ
போரை  நிறுத்தி  நின் அரிவையைக் காணச் சேறலால், தம் அரணை
யடைந்து    சிறிது    கண்ணுறங்குவராக;    நின்    பெருந்தோட்கு
விருந்துமாக - நின்னுடையபெரிய  தோள்கட்கு விருந்தாகவும் அமைக
எ- று.

முனை,     போர்,  நின்  தோள்வலியும்  படைவலியும்   காட்சி
மாத்திரையானே     பகைவர்க்கு     வெற்றியில்லை     யென்பதை
யறிவிப்பனவாகவும்,  அவர்கள் அறியாமல் எதிர்ந்தழிந்தன் ரென்பார்,
“முனைகை  விட்டு  முன்னிலைச்  செல்லாது, தூவெதிர்ந்து பெறாஅத்
தாவில்   மள்ளர்”   என்றார்.   பெறாஅ   :    காரணப்பொருட்டு.
பெறுதற்குரிய செயப்படு பொருள் வருவிக்கப்பட்டது. நின் வலியறிந்து
பணிந்து  நில்லாமையால்  அவர் வேரோடு கெடுதல் ஒருதலையாதலை
யுணர்ந்தமை  தோன்ற,  “தொன்மருங்கறுத்தல்  அஞ்சி”   யென்றார்.
இனிப்  பழையவுரைகாரர்,  “முனைகை விட்டு முன்னிலைச் செல்லாது
துஞ்சா  என முடித்து, நின்னோடு போர் செய்கையைக் கைவிட்டு நின்
முன்னே    வந்து   வழிபட்டு   நிற்றலைச்   செய்யமாட்டாமையால்
துஞ்சாதவென  வுரைக்க”  என்றும், “தூவெதிர்ந்து பெறா அத் தாவில்
மள்ளரொடு   என்றது,   முன்பு  நின்  வலியோடு  எதிர்த்துப்  பின்
எதிர்க்கப்  பெறாத  வலியில்லாத  மள்ளரொடு  என்றவா”  றென்றும்
உரைப்பர் .

இதுகாறுங் கூறியது கமஞ்சூல் சினஞ் சிறந்து விசும்படையூ நிவந்து
காலை  யிசைக்கும் பொழுதொடு  புலம்புகொள, அக்காலத்தே, களிறு
இயங்க,  மா தங்க, தேர் திரிந்து கொட்ப, வயவர் வியலறைக் கொட்ப,
நாடடிப்படுத்தலின்   கொள்ளை   மாற்றி,   நிழல்விடு   கட்டியைத்
தானைக்குதவி,  வேறுபுலத்  திறுத்த வெல்போ ரண்ணல், செழுங்குடிச்
செல்வர்  தீம்பிழி  மாந்தி, இரவலர்க்கு வேண்டுவன ஈயும் கொல்லிப்,
பெருவாய்   மலரொடு   பசும்பிடி  மகிழ்ந்தணியும்  ஆயத்தார்  சூழ
வுறையும்  அரிவை  கதுப்பும்  நுதலும் அணிகொள ஒருநாட் காணிய,
நின்புரவி  நெடுந்தேர்  பூண்க ; அதனால் தொன்மருங் கறுத்தலஞ்சித்
துஞ்சா  வேந்தரும்  மள்ளருடனே  அரண்கொண்டு  துஞ்சுக  ; நின்
பெருந்தோட்கு விருந்துமாக என இயைத்து முடித்தவாறு.

பழையவுரைகாரர்,    “அண்ணல், நின் அரிவை காணிய நின்தேர்
ஒருநாட்  புரவி பூண்பதாக வேண்டும் ; அதுதான் நின் அரிவைக்கே
யுடலாக  வேண்டுவதில்லை   ;   அதனானே   துஞ்சா  வேந்தரும்
துஞ்சுவார்களாக   வேண்டும்;    அதுதான்   நின்   பெருந்தோட்கு
விருந்துமாக வேண்டும் ; இவ்வாறு இரண்டொரு காரியமாக இதனைச்
செய்க என வினை முடிவு செய்க” என்பர்.
 

“இதனாற்  சொல்லியது   ;  காம  வேட்கையிற் செல்லாத அவன்
வென்றி வேட்கைச் சிறப்புக் கூறியவாறாயிற்று. “

“இஃது  அவனரிவை கற்பு முல்லையைப்பற்றி  வந்தமையால் துறை
முல்லையாயிற்று.”


 மேல்மூலம்