முகப்பு தொடக்கம்




பதிற்றுப்பத்து - பழைய உரை
82.



பகைபெரு மையிற் றெய்வஞ் செப்ப
ஆரிறை யஞ்சா வெருவரு கட்டூர்ப்
பல்கொடி நுடங்கு முன்பிற் செறுநர்
செல்சமந் தொலைத்த வினைநவில் யானை
 5




கடாஅம் வார்ந்து கடுஞ்சினம் பொத்தி
வண்டுபடு சென்னிய பிடிபுணர்ந் தியல
மறவர் மறல மாப்படை யுறுப்பத்
தேர்கொடி நுடங்கத் தோல்புடை யார்ப்பக்
காடுகை காய்த்திய நீடுநா ளிருக்கை
 10




இன்ன வைகல் பன்னா ளாகப்
பாடிக் காண்கு வந்திசிற் பெரும
பாடுநர், கொளக்கொளக் குறையாச் செல்வத்துச் செற்றோர்
கொலக்கொலக் குறையாத் தானைச் சான்றோர்
வண்மையுஞ் செம்மையுஞ் சால்பு மறனும்
 15

புகன்றுபுகழ்ந் தசையா நல்லிசை
நிலந்தரு திருவி னெடியோய் நின்னே.

     துறை - காட்சி வாழ்த்து. வண்ணம் - ஒழுகுவண்ணமும்
சொற்சீர்வண்ணமும். தூக்கு - செந்தூக்கு. பெயர் -
வினைநவில் யானை
     
                          (4)

     (ப - ரை) 1. பகை பெருமையின் தெய்வம் செப்பவென்றது
நின்மனத்து அவரோடு பகைத்தன்மை பெரிதாகையானே நின்பகைவர்
நின்னை யஞ்சித் தாம் தாம் வழிபடும் தெய்வத்தைத் தத்தமக்குக்
காவலென்று சொல்லவென்றவாறு.

     செப்ப (1) அஞ்சா (2) என முடிக்க.

     2. ஆர் இறை அஞ்சாக் கட்டூரென்றது வீரர் அரிதாக
இறுத்தலை யஞ்சாத பாசறையென்றவாறு.

     பல்கொடி நுடங்கும் (3) யானை (4) என முடிக்க.

     4. வினை நவில் யானையென்றது முன்பே போர்செய்து பழகின
யானை யென்றவாறு.

     இச்சிறப்பானும் முன்னின்ற அடைச்சிறப்பானும், இதற்கு,
‘வினைநவில் யானை’ என்று பெயராயிற்று.

     பிடி புணர்ந்து இயல (6) என்றது அவ்வினைநவில் யானை (4)
கடாம் வார்ந்து கடுஞ்சினம்பொத்தி (5) அச்சினத்திற்கேற்பப் போர்
பெறாமையிற் பாகர் அதன்சினத்தை அளவுபடுத்தற்குப் பிடியைப்
புணர்க்கையான், அப்பிடியோடு புணர்ந்தும் போர்வேட்டுத்
திரியவென்றவாறு.

     7. மாப் படை உறுப்பவென்றது இன்ன பொழுது
போர்நிகழுமென்று அறியாமையின், குதிரைகள் கலனைக்கட்டி
நிற்கவென்றவாறு.

     மாவைப் படையுறுப்பவென விரித்தலுமாம்.

     8. தேர் கொடி நுடங்கவென்றது தேர் போர்குறித்துப் பண்ணி
நின்று கொடி நுடங்கவென்றவாறு.

     தோல் புடை ஆர்ப்ப வென்றது தோல்களும்
முன்சொன்னவற்றின் புடைகளிலே போர்குறித்த நாளிடத்து
ஆர்ப்பவென்றவாறு.

     இயல (6) மறல உறுப்ப (7) நுடங்க ஆர்ப்ப (8) என்னும்
ஐந்தினையும் பன்னாளாக (10) என்னும் வினையொடு முடிக்க.

     9. காடு கைகாய்த்தியவென்றது பாசறையிருக்கின்ற நாள் குளிர்
நாளாகையால் விறகெல்லாமுறித்துத் தீக்காய்ந்தவென்றவாறு.

     காட்டையென இரண்டாவதனை விரித்து அதனைக்
காய்த்தியவென்பதனுட் போந்த பொருண்மையொடு முடிக்க.

     9-10. நீடுநாளிருக்கையையுடைய இன்ன வைகலென
இரண்டாவது விரிக்க. 10. இன்ன வைகலென்றது இப்பெற்றியையுடைய
பாசறையிருக்கின்ற நாட்களென்றவாறு.

     12-3. செற்றோர் கொலக் கொலக் குறையாத் தானையென்றது
பகைவர் போருட் கொல்லக் கொல்லக் குறைபடாத தானையென்ற
அதன் பெருமை கூறியவாறு.

     15. புகன்று புகழ்ந்தென்பதனைப் புகன்று புகழவெனத் திரிக்க.
அசையா நல்லிசை - கெடா நல்லிசை.

     புகழ்க்காரணமாகிய வண்மை முதலிய குணங்களைச் (14)
சான்றோர் (13) புகன்று புகழ்கையாலே கெடாது நின்ற நல்ல புகழ்
(15) எனக்கொள்க.

     நெடியோய் (16), பெரும (11), கட்டூரிடத்தே (2) நீடுநாளிருக்கை
(9) இன்ன வைகல்தான் பன்னாளானபடியானே (10) நின்னைப் (16)
பாடிக்காண்கு வந்தேன் (11) எனக் கூட்டி வினை முடிவு செய்க.

     இதனாற் சொல்லியது அவன் வென்றிச் சிறப்புக்
கூறியவாறாயிற்று.

     (கு - ரை) 1-9. சேரன் வாடைப் பாசறைக்கண்
இருத்தல் கூறப்படும்.

     1. நின் மனத்தில் நின் பகைவரோடு பகையாந்தன்மை
பெரிதாகையாலே அவர் நின்னையஞ்சித் தாம் தாம் வழிபடும்
தெய்வங்களைத் தத்தமக்குக் காவலெனச் சொல்ல: “தொழுது
விழாக் குறைக்குத் தொல்கடவுட் பேணி, அழுது விழாக்கொள்வ
ரன்னோ - முழுதளிப்போன், வாணாட் கோள் கேட்ட மடந்தையர்
தம்மகிழ்நர், நீணாட்கோளென்று நினைந்து” (தொல். புறத். 13, .
மேற்.) என்பதிலும் இக்கருத்து அமைந்துள்ளது. பகை
பெருமையினென்னும் பயனிலை பண்புகொள வருதலின்பாற்படும்.

     2. நின் வீரர் அரிதாக வந்து தங்குதலை அஞ்சாத, பகைவர்
அஞ்சுகின்ற பாசறையில் ; கட்டூர் ; பதிற். 90 : 30 ; பு. வெ. 53.

     3-6. யானையின் இயல்பு.

     4. வினைநவில் யானை: பதிற். 40 : 31, 84 : 4 ; மதுரைக்.
47 ; நெடுநல். 169 ; மலைபடு 227 ; புறநா. 347 : 11.

     3-4. பலகொடிகள் அசைகின்ற, வன்மையினால் பகைவரது
மிக்குச் செல்கின்ற போர்களைத் தொலைத்த முன்னமே போர்செய்து
பழகிய யானைகள். நுடங்கு யானை, முன்பிற்றொலைத்த யானை
எனக் கூட்டுக.

     5-6. மதம் மிக்கு, மிகுதியான கோபம் மூண்டு, வண்டுகள்
ஒலிக்கின்ற தலையையுடையனவாகித் தம் மதம் தணிதற்குப் பாகர்
பெண் யானைகளைச் சேர்ப்ப அவற்றோடு சேர்ந்திருந்தும் போரை
விரும்பித் திரிய; “மிஞிறார்க்குங் கமழ்கடாத், தயறுசோறு
மிருஞ்சென்னிய, மைந்து மலிந்த மழகளிறு” (புறநா. 22 : 6-8)

     7. வீரர் மாறுபட, குதிரைகள் இன்னபோது போர் நிகழுமென்று
அறியாமையால் கலனை கட்டி நிற்க. 8. தேர் கொடிகள் நின்று
அசைய, கிடுகுபடைகளும் முன் சொன்னவற்றின் பக்கத்தே
போர்குறித்து ஒலிப்ப.

     9-10. குளிரின் மிகுதியால் காட்டிலுள்ள மரங்களையௌல்லாம்
விறகாக எரித்துத் தீக்காய்ந்த, நீண்ட நாளாக இருத்தலையுடைய,
இப்படிப்பட்ட நாட்கள் பல ஆதலால் ; என்றது வாடைப்பாசறையைக்
கூறியபடி.

     11. பெருமானே, நின்னைப் பாடிக் காண்பேன் வந்தேன்.

     நின்னைப் (16) பாடி (11) என இயைக்க.

     12. புறநா. 70 : 7.

     12-3. நின்னைப் புகழ்ந்து பாடுவோர் கொள்ளக் கொள்ளக்
குறையாத செல்வத்தையும் பகைவர் போர்கள்தோறும் கொல்லக்
கொல்லக் குறையாத சேனையையும். 16 :தொல். பாயிரம்; சிலப்.
28 : 3.

     13-6. அறிவான் அமைந்தோர், கொடையையும்
நடுவுநிலையையும் சால்பையும் வீரத்தையும் விரும்பிப்புகழ்தலால்,
கெடாத நல்ல புகழையும், பகைவரது நிலத்தைக் கொள்ளுகின்ற
போரால் வரும் செல்வத்தையும் உடைய நெடியோய். புகழ்ந்து -
புகழ ; எச்சத்திரிபு. நிலந்தரு திரு - விளைவெனினுமாம் (சிலப்.
15 : 1, அரும்பத.)

     வண்மை முதலிய குணங்கள் புகழுக்குக் காரணமாயின.

     நெடியோய் (16), பெரும (11), கட்டூரிடத்தே (2) நீடுநாளிருக்
கையையுடைய (9) வைகல் பன்னாளாக (10), பாடிக் காண்கு வந்திசின்
(11) என முடிக்க.

     (பி - ம்) 3. முன்பிற் செல்வர்.                    (2) 





பதிற்றுப்பத்து - மூலமும் விளக்க உரையும்

2 . வினை நவில் யானை
 
82.பகை பெருமையிற் றெய்வஞ் செப்ப
ஆரிறை யஞ்சா வெருவரு கட்டூர்ப்
பல்கொடி நுடங்க முன்பிற் செறுநர்
செல்சமந் தொலைத்த வினைநவில் யானை
   
5கடாஅம் வார்ந்து கடுஞ்சினம் பொத்தி
வண்டுபடு சென்னிய பிடிபுணர்ந் தியல
மறவர் மறல மாப்படை யுறுப்பத்
தேர்கொடி நுடங்கத் தோல்புடை யார்ப்பக்
காடுகை காய்த்திய நீடுநா ளிருக்கை
 
10இன்ன வைகல் பன்னா ளாக
பாடிக் காண்கு வந்திசிற் பெரும
பாடுநர், கொளக்கொளக் குறையாச் செல்வத்துச் செற்றோர்
கொலக் கொலக் குறையாத் தானைச் சான்றோர்
வண்மையுஞ் செம்மையுஞ் சால்பு மறனும்
 
15புகன்று புகழ்ந் தசையா நல்லிசை
நிலந்தரு திருவி னெடியோய் நின்னே .
 

துறை  : காட்சி வாழ்த்து.
வண்ணம் : ஒழுகு வண்ணமும்சொற்சீர் வண்ணமும்.
தூக்கு  : செந்தூக்கு.
பெயர்  : வினை நவில் யானை.

 1 - 10. பகை.....................பன்னா ளாக .
 

உரை :  பகை பெருமையின் - நினது  பகைமை  பெரிதாதலால் ;
தெய்வம்  செப்ப  -  பகைவர்  தமக்குப் பாதுகாவலாகத் தெய்வத்தை
வழிபட  ;  ஆர்  இறை  அஞ்சா வெருவரு கட்டூர் - இனி திருத்தற்
கரிதாகியும்   வீரர்க்கு  அச்சம்  பயவாத  பகைவர்க்கு  அச்சத்தைத்
தருகின்ற  பாசறையிலே  ;  பல்கொடி  நுடங்கு  முன்பிற் செறுநர் -
பல்வகைக் கொடிகள் அசைகின்னற வலியினையுமுடைய   பகைவரது;
செல் சமம் தொலைத்த- மிக்குச் சென்று பொரும் போர்களை யழித்த;
வினைநவில் யானை - போர்த் தொழிலிலே நன்கு பயிற்சி பெற்றுள்ள
யானைகள் ; கடாம் வார்ந்து - மதம் பொழிந்து ; கடுஞ்சினம் பொத்தி
- மிக்க சினம் கொண்டு ; வண்டுபடு சென்னிய - மதநீரின் பொருட்டு
வண்டு மொய்க்குந் தலையினையுடைய வாய் ; பிடி புணர்ந்து இயல -
மத வெறி தெளியுமாற்றால் பிடி யானைகளைப் புணர்த்தப் புணர்ந்தும்
தெளியாது  திரிய ; மறவர் மறல - வீரர் போர் விரைய நிகழாமையின்
போர் வெறிகொண்டு திரிய; மா படை உறுப்ப - குதிரைகள் பொருதல்
வேண்டிக்  கலனை  முதலிய படை யணி்யப்பெற்று நிற்ப; தேர் கொடி
நுடங்க  - தேர்கள் பண்ணப் பெற்றுக் கொடியசைய விளங்க ; தோல்
புடை  யார்ப்ப  கிடுகுப் படைகள் ஒருபுறத்தே ஆரவாரிக்க ; காடுகை
காய்த்திய  - காட்டிலுள்ள விறகுகளை வெட்டிக் குளிர் காய்ந்தழித்த ;
நீடு நாள் இருக்கை - நெடுநாட்கள் இருத்தலையுடைய; இன்ன வைகல்
பன்னாளாக - இத்   தன்மையான  நாட்கள் பலவாகக் கழிந்ததனாலே
எ - று.
 

தம்  வலியும் படை துணை முதலியவற்றின் வலியும் சேரவைத்து
நோக்கியபோதும் நின்வலி பெரிதாதல் கண்டு, அஞ்சி, தமக்கு வெற்றி
வருதல்  வேண்டித்  தெவ்வர்  தெய்வத்தைப் பரவுகின்றன ரென்பார்,
“பகை  பெருமையின்  தெய்வம்  செப்ப” என்றார.் எனவே, தம்மால்
செய்துகொள்ள   வேண்டிய   வலிமுற்றும்  செய்துகொண்டாராயினும்,
சேரனது   பகைமை   பெரிதாதற்   கஞ்சித்   தம்மின்   மேம்பட்ட
தெய்வத்தைத் துணை வேண்டுவராயின ரென்பதாம்.

எப்போதும்     படையேந்திய     வண்ணமாய்ப்    பகைவரை
எதிர்நோக்கியிருத்தலின்,  பாசறை  வீரர்க்கு அரிய இருக்கையாதலின்,
“ஆரிறை”    யென்றும்,   அற்றாயினும்   அவருள்ளத்தே   அச்சம்
நிலவாமையின்,   “அஞ்சா”   என்றும்,   பகைவர்க்கு   அச்சத்தைப்
பயத்தலின்,  “வெருவரு கட்டூர்” என்றும் கூறினார். ஆரிறை யஞ்சாக்
கட்டூர்,  வெருவர கட்டூர் என இயையும். பழையவுரைகாரர், “ஆரிறை
யஞ்சாக்  கட்டூரென்றது  வீரர்  அரிதாக இறுத்தலை யஞ்சாத பாசறை
யென்றவா”   றென்பர.்  வேற்று  நாட்டிடத்தே  புதிதாக  அமைக்கப்
பெறுதலின்,  பாசறையைக்  “கட்டூர்”  என்ப  ;  “வேறு புலத்திறுத்த
கட்டூர்” (பதிற் . 68) என்று பிறரும் கூறினமை காண்க.

தேர்,    யானை முதலியவை தாங்கிவரும் கொடிகள் பலவாதலின்,
“பல்கொடி  நுடங்கும்”  என்றும்,  இவற்றை யுயர்த்தித் தம் வலியாற்
செருக்கிவரும் பகைவரது  போர்பலவும்  நெறியறிந்து  தாக்கி வெற்றி
கொண்ட  யானை யென்றற்கு, “செறுநர் செல்சமந் தொலைத்த வினை
நவில்  யானை”  யென்றும்  கூறினார்.  இச் சிறப்பால் இப் பாட்டிற்கு
வினைநவில்  யானை யென்பது பெயராயிற்று. பழையவுரைகாரர், “பல்
கொடி  நுடங்கும்  யானை”  யென இயைத்து, “வினை நவில் யானை
யென்றது முன்பே போர் செய்து பழகிய யானை யென்றவா” றென்றும்,
“இச் சிறப்பானே முன்னின்ற அடைச்  சிறப்பானும்   இதற்கு  வினை
நவில்  யானை  யென்று    பெயராயிற்” றென்றும் கூறுவர்.
 

களிறுகள்     மதவெறி   கொண்டு மிக்க சினத்துடன் பாகர்க்கும்
அடங்காது     மறலும்வழி,    அம்    மதம்    தணிதற்பொருட்டுப்
பிடியானைகளைக்   கொணர்ந்து  புணர்விப்பது  இயல்பு.  அங்ஙனம்
களிறுகள்  பிடிகளைப்  புணர்ந்தும்  மதம் தணியாது போர் வேட்டுத்
திரிந்தன  என்பார், “வினைநவில் யானை பிடி புணர்ந்தியல” என்றார்.
புணர்ந்   தென்புழிச்   சிறப்பும்மை  தொக்கது,  பிடி  புணர்ந்தியல”
வென்றது,  அவ்  வினைநவில்  யானை  கடாம் வார்ந்து கடுஞ் சினம்
பொத்தி  அச்சினத்திற்  கேற்பப்  போர் பெறாமையின் பாகன் அதன்
சினத்தை   அளவுபடுத்தற்குப்   பிடியைப்   புணர்க்கையான்   அப்
பிடியொடு  புணர்ந்தும்  போர்வேட்டுத்  திரிய  வென்றவா” றென்பது
பழையவுரை.

எதிர்பார்த்தவாறு போர் விரைய நிகழாமையால் வீரர் போர் வெறி
கொண்டிருத்தலை,  “மறவர்   மறல”   என்றும்,   போர்  குறித்துக்
குதிரைகள்  கலனை  யணிந்து  செருக்கி  நிற்குமியல்பை, “மாப்படை
யுறுப்ப”    என்றும்,    இவ்வாறே    தேர்களும்   தோற்படைகளும்
போர்க்கமைந்து  முறையே  கொடி  நுடங்க  ஆரவாரித்து நிற்பதைத்,
“தேர்  கொடி  நுடங்கத்  தோல்புடை  யார்ப்ப”  என்றும் கூறினார் .
பழையவுரைகாரர், “மாப்படை யுறுப்ப வென்றது, இன்னபொழுது போர்
நிகழுமென்று  அறியாமையின்  குதிரைகள் கலனை கட்டி யென்றவா”
றென்றும்  “தேர்கொடி நுடங்க  வென்றது,  தேரைப்  போர்குறித்துப்
பண்ணி  நின்று  கொடி நுடங்க  வென்றவா” றென்றும், “தோல்புடை
யார்ப்ப  வென்றது,  தோல்களும் முன் சொன்னவற்றின் புடைகளிலே
போர் குறித்து நாளிடத்து ஆர்ப்ப வென்றவா” றென்றும் கூறுவர் .

கூதிர்ப்பாசறையாதலின்,  வீரர் குளிர்காய்தற் பொருட்டுக் காட்டை
வெட்டி   விறகை   யெரித்தல்பற்றி,  “காடு  கைகாய்த்திய”  என்றும்,
ஒவ்வொரு நாளும் போர் நிகழாது நெடிது கழிதலின், “நீடுநாளிருக்கை”
யென்றும்,   இவ்வாறே  பன்னாட்கள்  போரின்றியே  கழிவது  பற்றி,
“இன்ன வைகல் பன்னாளாக” வென்றும் கூறினார். காடுகை காய்த்திய
வென்றற்கு,   “பாசறை   யிருக்கின்ற   நாள்   குளிர்  நாளாகையால்
விறகெல்லா முறித்துத் தீக்காய்ந்த” வென்றும், இன்ன வைகலென்றற்கு,
“இப்   பெற்றியையுடைய   பாசறை  யிருக்கின்ற  நாட்க”  ளென்றும்
வுரைகாரர் கூறுவர்.

யானை    பிடி புணர்ந்தியல, மறவர் மறல, மா படையுறுப்ப, தேர்
கொடி  நுடங்க,  தோல்  ஆர்ப்ப என்னும் ஐந்தினையும் பன்னாளாக
என்பதனோடு   முடிக்க.   “காட்டையென   இரண்டாவது   விரித்து
அதனைக் காய்த்திய என்பதனுட் போந்த பொருண்மையொடு முடிக்க”
என்றும், “நீடுநா ளிருக்கையையுடைய இன்ன வைகலென இரண்டாவது
விரிக்க” என்றும் பழையவுரைகாரர் முடிபு கூறுவர்.

11 - 16. பாடி.......................நின்னே .

உரை :  பாடுநர் கொளக் கொளக் குறையாச்  செல்வத்து - பாடி
வருவோர்  நீ  வரையாது  வழங்குதலின் பலகாலும் கொண்ட வழியும்
குறையாத செல்வத்தையும்; செற்றோர் கொலக் கொலக்குறையாத்தானை
-   பகைவர்  பலகாலும்  பொருதழித்த  வழியும்  குறையாத  தானை
வீரரையும்;    சான்றோர்   - அறிவாலமைந்த  புலவர் ; வண்மையும்
செம்மையும் சால்பும் மறனும் புகன்று புகழ்ந்து  அசையா  நல்லிசை -
கொடை  செங்கோன்மை  சால்பு  வீரம்   என்ற இவற்றால் விரும்பிப்
புகழ்தலால் கெடாத  நல்ல புகழையும்; நிலம் தரு திருவின் - மாற்றார்
நிலத்தைப்      போருடற்றிக்        கைக்கொள்ளுதலால்    வரும்
செல்வத்தையுமுடைய; நெடியோய்  -  நெடிய சேரமானே ; பெரும -
பெருமானே ; நின்னே பாடிக்  காண்கு  வந்திசின் - நின்னைப் பாடிக்
காண்பதற்கு வந்தேன் எ - று.
 

செல்வமும்,   தானையும் மேன்மேலும் பெருகிய வண்ணமிருப்பது
தோன்ற,  “பாடுநர்  கொளக் கொளக் குறையாச் செல்வத்து” என்றும்,
“செற்றோர்  கொலக் கொலக் குறையாத் தானை” யென்றும் கூறினார் .
செல்வத்துக்குப்  பாடுநரும்  தானைக்குச்  செற்றோரும்  குறைவினை
யுண்டுபண்ணுபவாதலின்,   அவர்களை   எடுத்தோதினார்.   செல்வச்
சிறப்புக்   கூறுமாற்றால்  சேரனது  கொடைநிலையும்  விளங்குதலால்
வண்மையை   முதற்கட்   கூறினார்.   தானை   வீரரின்   தகுதியும்
வரிசையுமறிந்து  சிறப்புச் செய்து அவர் தொகையைப் பெருக்குதலால்,
“செம்மை”  தெரிவதாயிற்று.  சான்றோர்  விரும்புதற்  கேதுவாதலின்,
“சால்புமறனும்” இறுதிக்கண் வைத்துச் சிறப்பித்தார.் வண்மை முதலிய
காரணங்களைக்  காணும்  சான்றோர்  அவற்றால் அவனைப் பெரிதும்
விரும்பிப்   புகழ்வது   கூறுவார்,   “புகன்று   புகழ்ந்து”   என்றார்.
புகழ்ந்தென்னும்     வினையெச்சம்    காரணப்பொருட்டு.    இனிப்
பழையவுரைகாரர், “புகன்ற புகழ்ந்தென்பதனைப் புகன்று புகழ வெனத்
திரிக்க”    என்றும்,   “புகழ்க்   காரணமாகிய   வண்மை   முதலிய
குணங்களைச் சான்றோர் புகன்று புகழ்கையாலே கெடாது நின்ற நல்ல
புகழெனக் கொள்க” என்றும் கூறுவர்.

மாற்றார்   நிலத்தை வென்று கைக்கொள்ளுமி்டத்து, அவர் திறைப்
பொருள் பெருகத் தந்து பணிதலால், அச்செல்வத்தை “நிலந்தரு திரு”
என்றார்.  நிலத்திடத்தே  விளைத்துக்கொள்ளும் பெருஞ் செல்வத்தை
“நிலந் தருதிரு” என்றா ரென்றுமாம்.

“செற்றார்   கொலக் கொலக் குறையாத் தானை யென்றது, பகைவர்
போருட்   கொல்லக்  கொல்லக்  குறைபடாத  தானையென்று  அதன்
பெருமை கூறியவா” றென்பர் பழையவுரைகாரர், பெருமை, மிகுதி.

இதுகாறும் கூறியது, நெடியோய், பெரும, கட்டூரிடத்தே யானை பிடி
புணர்ந்தியல,  மறவர்  மறல,  மா படை யுறுப்ப, தேர் கொடி நுடங்க,
தோல்   புடை   யார்ப்ப,   நீடுநா   ளிருக்கையையுடைய   வைகல்
பன்னாளாதலால்,   நின்னைப்  பாடிக்காண்கு  வந்திசின்  என்பதாம்.
பழையவுரைகாரர்,   “நெடியோய்,   பெரும,   கட்டூரிடத்தே   நீடுநா
ளிருக்கை  இன்ன  வைகல்தான்  பன்னா ளான படியானே நின்னைப்
பாடிக் காண்கு வந்தேன் எனக் கூட்டி வினைமுடிவு செய்க” என்பர்.

“இதனாற்  சொல்லியது     :    அவன்   வென்றிச்    சிறப்புக்
கூறியவாறாயிற்று.”


 மேல்மூலம்