பக்கம் எண் :

142

நாளோலக்கத்தின் கண்ணே தலையெடுத்துச் செம்மாந்து சென்று
புகுதல்;எம் மன வாழ்க்கை இரவலர்க்கெளிது - எம்மைப்போலும்
வாழ்க்கையுடைய இரப்போருக்கு எளிது; இரவலர்க்கு எண்மை யல்லது
- இங்ஙனம் இரப்போர்க்கு எளிதாவ தல்லது; புர வெதிர்ந்து -
பாதுகாத்தலை ஏற்றுக்கொண்டு; வானம் நாண வரையாது - மழை
நாணும்படி எப்பொருளையும் வரையாது; சென்றோர்க்கு - தன்பாற்
சென்றவர்கட்கு; கவிகை ஆனாது ஈயும் வண்மைக் கடு மான் கோதை
- இடக் கவிந்த கையால் அமையாது கொடுக்கும் வண்மையையுடைய
கடுமான் கோதையது; துப்பு எதிர்ந் தெழுந்த நெடு மொழி மன்னர் -
வலியோடு மாறுபட்டெழுந்திருந்த வஞ்சினங் கூறிய வேந்தர்;
நினைக்குங்காலை - கருதுங்காலத்து; பாசிலைத் தொடுத்த உவலைக்
கண்ணி - பசிய இலையால் தொடுக்கப்பட்ட தழைக் கண்ணியையும்;
மாசுண் உடுக்கை - மாசுண்ட உடையையும்; மடி வாய் இடையன் -
மடித்த வாயையுமுடைய இடையன்; சிறு தலை ஆயமொடு குறுகல்
செல்லா - சிறிய தலையையுடைய ஆட்டினத்தோடு கூட அணுகல்
செல்லாத; புலி துஞ்சு வியன் புலத் தற்று - புலி தங்கும் அகன்ற
நிலத்தை யொக்கும்; வலி துஞ்சு தடக்கை யவனுடை நாடு - வலி
தங்கிய பெரிய கையை யுடையவனுடைய நாடு எ-று.


     எங்கோ னிருந்த மூதூர்ப் புகுதல் இரவலர்க் கெளிது; அவனுடைய
நாடு மன்னர் நினைக்குங்காலை இடையன் சிறுதலை யாயமொடு குறுகல்
செல்லாப் புலி துஞ்சு வியன்புலத் தற்றெனக் கூட்டி வினை முடிவு செய்க.
மன்னர்க்கு இடையனும் அவர் படைக்குச் சிறுதலை யாயமும் கோதை
நாட்டிற்குப் புலி துஞ்சு வியன் புலமும் உவமையாகக் கொள்க. உவலைக்
கண்ணி யென்றதனைப் பெயராகக் கொள்க. புலியுடை வியன் புல
மென்பதூஉம் பாடம்.

     விளக்கம்: மூதூரென முன்னர்க் கூறி உடையோ ரென்றமையின்,
“மூதூரை யுடையோரைப் போல்” என்றார்; அவரை யன்றிப் பிறர்
இடையின்று குறுகுதல் கூடாதாகலின். செம்மல் - தலைமை. “சேவடி படரும்
செம்ம லுள்ளமொடு” (முருகு:62) என்றாற்போல. எண்மை யுடையதனை
யெண்மை யென்றது உபசாரர். கவிகை: இறந்த காலத் தொக்க
வினைத்தொகை. நெடுமொழி: வஞ்சினம். துஞ்சுதல் - தங்குதல். உவலை
கருதி இடையன் குறுகல் செல்லா என இயைக்காமல், உவலையாற்
றொடுக்கப் பட்ட கண்ணி யெனப் பெயராக்குக வென்பார், “உவலைக்
கண்ணி யென்றதனை......கொள்க” என்றார். புலி துஞ்சு வியன் புலம்
ஆட்டிடையர் புகாத அச்சமுடைய தாதல் போலக் குட்டுவன் கோதையது
நாடு பகைவர் புகுதற் கச்சமுடைய தென இதனால் அவன் காவற்சிறப்புக்
கூறினாராம்; அதியமா னெடுமானஞ்சியின் காவற்சிறப்புக் கூறவந்த
ஒளவையார், “ஆர்வலர் குறுகினல்லது காவலர், கனவினுங் குறுகாக்
கடியுடை வியனகர்” (புறம்:390) என்றது ஈண்டு நினைவுகூரத் தக்கதாம்.