65. சேரமான் பெருஞ் சேரலாதன் இச் சேரலாதன் பெயர் சில ஏடுகளிற் பெருந்தோளாதன் என்று காணப்படுகின்றது. இவன் மிக்க வீரமும், சான்றோர் பாடும் சால்பு முடையன். குடக்கோ நெடுஞ்சேரலாதன் இவற்குமுன் தோன்றிக் குறுகிய காலத்தில் உயிர் துறந்தான். இவ்விருவர் காலத்தும் கழாத் தலையார் இருந்தார்; இருவர்பாலும் அவர் சிறந்த நன்மதிப்புடையராய்ப் பாடியுள்ளார். இச் சேரமான் சோழநாட்டை யாண்ட கரிகால்வளவனொடு வெண்ணியென்னு மிடத்தே பெரும்போர் செய்தான். அப் போரில் பாண்டிவேந்த னொருவனும் போர் உடற்றினன்.இதன்கண் வளவன் செலுத்திய நெடுவேல் இச் சேரமான் மார்பிற் பட்டு முதுகின் புறத்தே உருவிச் சென்று புண் செய்தது. மார்பினும் முகத்தினும் பட்ட புண்ணையே வீரர் விழுப்புண் ணென விரும்புவர். மார்பிற்பட்ட கருவியால் முதுகிடத்தும் இச் சேரமானுக்குப் புண்ணாயினமையின், இவன் அதனால் பெரு நாணம் கொண்டு மானம் பொறாது வடக்கிருப் பானாயினன். இச்செய்தி தமிழ் நாடெங்கும் பரவிற்று. கேள்வியுற்ற ஏனை யரசரும் சான்றோரும் இவன்பால் பெருமதிப்புற்றுப் பாராட்டுவா ராயினர். கழாத்தலையாராகிய சான்றோர், இவன் செயல் கண்டு, ஆற்றாமை மிகக் கொண்டு, தன்போலும் வேந்தனொருவன் மார்பு குறித்தெறிந்த படையாலுண்டாகிய புறப் புண்ணிற்கு நாணி மறத்தகை மன்னனாகிய எங்கள் பெருஞ்சேரலாதன் வாள் வடக்கிருந்தனன்; எங்கட்கு இனி ஞாயிறு விளங்கும் பகற்போது முன்போலக் கழியாது; உழவர் உழவு மறப்பர்; சீறூர்களும் விழாவை மறக்கும்; இவனது வடக்கிருப்பு உவாநாளில் ஞாயிறுதோன்றத் திங்கள் மலைவாய் மறைவதுபோல வுளது. அஃதாவது, தமிழ் நாட்டின் மேலைப் பகுதியில் இனி இருள் சூழ்வதன்றி ஒளியில்லையாம் என்று இப்பாட்டின்கண் கையறவுற்றுக் கலுழ்ந்து பாடியுள்ளார். மாமூலனார் என்னும் சான்றோர், இவன் வடக்கிருந்து உயிர் துறந்தன ரெனக் கூறுகின்றார்.
| மண்முழா மறப்பப் பண்யாழ் மறப்ப இருங்கட் குழிசி கவிழ்ந்திழுது மறப்பச் சுரும்பார் தேறல் சுற்ற மறப்ப உழவ ரோதை மறப்ப விழவும் | 5. | அகலு ளாங்கட் சீறூர் மறப்ப | | உவவுத்தலை வந்த பெருநா ளமயத் திருசுடர் தம்மு ணோக்கி யொருசுடர் புன்கண் மாலை மலைமறைந் தாங்குத் தன்போல் வேந்தன் முன்புகுறித் தெறிந்த | 10. | புறப்புண் ணாணி மறத்தகை மன்னன் | | வாள்வடக் கிருந்தன னீங்கு நாள்போற் கழியல ஞாயிற்றுப் பகலே.(65) |
|